தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

D01126-6.3 சமய வாழ்க்கை

  • 6.3 சமய வாழ்க்கை

    இறைவனை வழிபடும் நிலை, சமய வாழ்க்கையாகும். குறிஞ்சி முதலான நிலத்திற்கு, முருகன் முதலான கடவுளரை நிலத்தெய்வங்களாகக் கொண்டிருந்தமை தொல்காப்பியத்தில் விளக்கப்பட்டுள்ளது. இறைவழிபாடும் இறை பற்றிய கதைக் குறிப்புகளும் அகநானூற்றில் இடம்பெற்றுள்ளன.

    6.3.1 வழிபாடு

    செயல்களைத் தொடங்குவதற்கு முன்னர்க் கடவுளை வணங்கினர். இதனை, ‘கடிமனை புனைந்து, கடவுள் பேணி' - (136) என்ற தொடரால் அறியலாம். திருமணம் நடத்துவதற்கு முன் கடவுளை வழிபட்டமையை இத்தொடர் காட்டுகிறது.

    • கோயில்

    செங்கல் சுவர் வைத்துக் கட்டப்பட்ட கோயில்களில் கடவுளை ஓவியத்தில் எழுதி வைத்து வழிபட்டுள்ளனர். அப்படி இருந்த கோயில் ஒன்று இடிந்துவிட்டதை ஒரு பாடற் பகுதி வெளிப்படுத்தியுள்ளது. (167)

    • நடுகல் வழிபாடு

    தமிழர், நாட்டுக்கு உழைத்த நல்லவர்களைக் கடவுளாகக் கண்டனர். அதன் விளைவே நடுகல் வழிபாடு. நாட்டுக்காகப் போரிட்டு, போரிலே உயிர் துறந்தவர்களின் நினைவாக ஒரு கல்லை நட்டு; அக்கல்லில் இறந்தவரது பெயரையும் சிறப்பையும் எழுதிவைத்து அவ்வப்போது ஒப்பனை செய்து, விழா நடத்தி, இசை முழக்கி, பலியிட்டு வழிபடுவது நடுகல் வழிபாடாகும்.

    நல்லமர்க் கடந்த நாணுடை மறவர்
    பெயரும் பீடும் எழுதி அதர்தொறும்
    பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல்
    (67)
    (அமர் = போர்; பீடு = பெருமை; அதர் = வழி)

    பாடல்கள் 35, 131, 387 ஆகியவையும் நடுகல் வழிபாடு குறித்த தகவல்களைத் தருகின்றன.

    6.3.2 முருகன்

    குறிஞ்சி நிலக் கடவுளாக முருகன் போற்றப்பட்டுள்ளான். அகப்பொருளில் தலைவனைச் சந்திக்காததால் தலைவியின் உடலிலும் மனத்திலும் ஏற்பட்ட சோர்வினை, முருகனால் ஏற்பட்டதாகக் கருதிய பெற்றோர், அச்சோர்வினைப் போக்க முருகனுக்கு வழிபாடு நடத்தினர். இது வெறியாட்டு எனப்பட்டது. வெறியாட்டு வழிபாட்டை நடத்தியவன் வேலன் என்ற பெயரால் குறிக்கப்பட்டான். இது பற்றிய செய்தியைப் பாடல் 98இல் காண்கிறோம்.

    முருகன் திருப்பரங்குன்றம், திருச்செந்தூர் ஆகிய ஊர்களில் கோயில் கொண்டிருப்பதும் அவன் சூரபதுமன் முதலான அரக்கர்களை அழித்ததும் ஆகிய செய்திகள்,

    சூர்மருங்கு அறுத்த சுடர்இலை நெடுவேல்
    சினம்மிகு முருகன் தண்பரங் குன்றத்து
    அந்துவன் பாடிய சந்துகெழு நெடுவரை
    (59)

    (அந்துவன் = நல்லந்துவனார் என்னும் புலவர்; சூர் = அரக்கன்; சந்து = சந்தனமரம்; வரை = மலை)

    திருமணி விளக்கின் அலைவாய்ச்
    செருமிகு சேஎயொடு
    (266)

    (அலைவாய் = திருச்செந்தூர்; சேய் = முருகன்)

    என்ற பாடற் பகுதிகளால் புலனாகின்றன.

    6.3.3 திருமால்

    முல்லை நிலக் கடவுளாகத் திருமால் போற்றப்பட்டுள்ளார். திருமாலின் இரண்டு அவதாரச் செய்திகள் அகநானூற்றில் உவமைகளாக இடம்பெற்றுள்ளன.

    கண்ணன் அவதாரத்தின்போது, யமுனை ஆற்றில் நீராடிய ஆயர்குலப் பெண்களுக்காகக் குருந்த மரத்தை வளைத்துக் கொடுத்து, அவர்கள் தழை ஆடை அணிந்துகொள்ள உதவி செய்தான். இச் செய்தி,

    வண்புனல் தொழுநை வார்மணல் அகன்துறை
    அண்டர் மகளிர் தண்தழை உடீஇயர்
    மரம்செல மிதித்த மாஅல்
    (59)

    (தொழுநை = யமுனை; அண்டர் மகளிர் = ஆயர் மகளிர்; உடீஇயர் = உடுத்திக் கொள்வதற்காக; மரம் செல = மரம் வளையுமாறு)

    என்ற பாடற்பகுதியில் இடம்பெற்றுள்ளது.

    இராமன் அவதாரத்தின்போது, திருவணைக்கரை என்ற ஊரில் ஓர் ஆலமரத்தின் நிழலில் அமர்ந்து, இலங்கைப் போர் குறித்த ஆலோசனையை நடத்தினான். அப்போது ஆலமரத்தில் இருந்த பறவைகள் ஆலோசனைக்கு இடையூறாக ஓசை எழுப்பின. இராமன் அவற்றை அமைதியாக இருக்கும்படி செய்தான். இச் செய்தி,

    வென்வேல் கவுரியர் தொன்முது கோடி
    முழங்குஇரும் பௌவம் இரங்கும் முன்துறை
    வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த
    பல்வீழ் ஆலம் போல ஒலிஅவிந்து
    (70)

    (கோடி = திருவணைக்கரை என்னும் ஊர்; பௌவம் = கடல்; இரங்கும் = ஒலிக்கும்; மறை = இரகசியம்; கவுரியர் = பாண்டியர்; அவித்த = நிறுத்திய)

    என்ற பாடற்பகுதியில் இடம்பெற்றுள்ளது.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 04:29:08(இந்திய நேரம்)