தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Purananooru-2.5

  • 2.5 நூற்று எண்பத்திரண்டாம் பாட்டு

    இப்பாட்டைப் பாடியவர் கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி. இவர் சங்ககாலப் பாண்டிய வேந்தருள் ஒருவர். கடலில் சென்றபோது இறந்தமையால் கடலுள் மாய்ந்த என்ற அடை பெற்றார். இவ்வுலகம் இன்றும் நிலைபெற்றிருக்கக் காரணம் யாது? இப்பாட்டு அதனைக் கூறுகின்றது.

    புகழ் எனின் உயிரும் கொடுக்குவர்

    தமிழர் தம் வாழ்வில் பெறுவதற்கு அரிய பேறாகக் கருதியது புகழை. புகழ் வருமெனின் உயிரையும் கொடுத்துவிடுவர் என்று கூறுகிறது இப்பாட்டு. அவர்கள் தம் உணவைப் பிறரோடு பகிர்ந்துண்பர்; யாரையும் வெறுக்க மாட்டார்; சோம்பல் அற்றவர், பழிக்கு அஞ்சுவர்; பழியோடு வரும் செல்வத்தை விரும்பார்; தமக்கென வாழார். இத்தகைய தன்மைகளை உடையவர் இருப்பதால்தான் இவ்வுலகம் இன்றும் இருக்கிறது என்கிறார் இப்பாண்டிய வேந்தர்.

    2.5.1 பாட்டும் கருத்தும்

    உண்டால் அம்மஇவ் வுலகம் என்று தொடங்கும் இப்பாடல் ஒன்பதடிகளைக் கொண்டது. இதன் கருத்து வருமாறு:

    “இந்திரர்க்குரிய அமிழ்தம், தெய்வத்தின் அருளாலோ, தவத்தாலோ கிடைக்குமாயினும் அதனை இனிதென்று கருதித் தனியாக உண்ணமாட்டார்கள்; யாரோடும் வெறுப்பற்றவர்கள்; பிறர் அஞ்சத்தகும் துன்பங்களுக்குத் தாமும் அஞ்சுவர்; அத்துன்பம் தீரும் வரை சோம்பிக் கிடக்க மாட்டார்கள்; புகழ் கிடைக்குமெனின் அதன் பொருட்டுத் தம் உயிரையும் கொடுப்பர். பழியென்றால் அதனோடு உலக முழுவதையும் பெறுவதானாலும் அதனை ஏற்கமாட்டார்கள். மனத்தின் கண் மாறுபட்ட எண்ணங்கள் இல்லாதவர்கள். இத்தகைய மதிப்புமிக்க தன்மையோடு தமக்கென்று முயலாத வலிய முயற்சியைக் கொண்ட, பிறர்க்கென முயல்பவர்கள். இப்பண்புகளை உடையோர் இருப்பதால்தான் இன்னும் இவ்வுலகம் நிலை பெற்றுள்ளது"

    புகழ்எனின் உயிரும் கொடுக்குவர் பழியெனின்
    உலகுடன் பெறினும் கொள்ளலர்

    என்பது சான்றோர்களின் சிறந்த பண்பைக் குறித்தது.

    பாட்டின் திணை, துறை விளக்கம்

    இப்பாட்டின் திணை பொதுவியல். புறத்திணைகள் அனைத்திற்கும் பொதுவான செய்தி கூறியமையின் பொதுவியலாயிற்று. சான்றோர் தம் இயல்பு கூறினமையால், பொதுவியல் திணைக்குரித்தாயிற்று என்றும் கூறலாம். பாட்டின் துறை பொருண்மொழிக் காஞ்சி. சான்றோர்க்கு உரிய பண்புகள் சொல்லப்பட்டதால் பொருண்மொழிக் காஞ்சி ஆயிற்று.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 04:39:34(இந்திய நேரம்)