தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Purananooru-2.6

  • 2.6 நூற்று எண்பத்து மூன்றாம் பாட்டு

    இப்பாட்டு பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் பாடியது. கல்வியின் பெருமை கூறுவதாக அமைந்த இச்செய்யுளைப் பாடியவன் பாண்டிய அரசன் என்பது எண்ணுதற்குரியது.

    தாயும் மனம் திரியும்

    பெற்றவள் உள்ளம், தன் பிள்ளை எக்குறைபாடு உடையதாயினும் பொறுத்துக் கொள்ளும்; குறை, பெற்றவளின் உள்ளத்திற் படாது. தன் பிள்ளை போல யாரும் இல்லை எனத் துணிந்து பேசும். பிள்ளை செய்த எக்குற்றத்தையும் தாயின் மனம் பொறுத்துக் கொள்ளும். ஆனாலும் தாய் தன் பிள்ளைகள் பலரில் கல்வி உடையோனிடம் கூடுதலான அன்பு காட்டுவாள். எல்லாப் பிள்ளைகளையும் சமமாக மதிக்க வேண்டிய தாய் கல்வி கற்றவனைப் பிறரைவிட நன்கு மதிப்பாள். தாயின் மனம் திரியும் இடம் இஃது என்கிறான் பாண்டியன் அறிவுடை நம்பி.

    2.6.1 பாட்டும் கருத்தும்

    உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் என்று தொடங்குவது இப்பாட்டு. பத்து அடிகளைக் கொண்டது. இதன் கருத்து வருமாறு:

    “தன் ஆசிரியர்க்கு ஒரு துன்பம் வந்த காலத்தில் அதைத் தீர்க்க உதவி செய்தல், மிகுந்த பொருளைக் கொடுத்தல், வழிபடும் நிலையிலிருந்து மாறாமல் கற்றல் ஆகிய நற்செயல்கள் அனைத்தையும் கடைப்பிடித்து ஒருவன் கல்வியைப் பெற்றுக் கொள்ள வெண்டும். ஏனெனில், தாய் ஒருத்தி தன் வயிற்றில் வேறுபாடில்லாமல் பிறந்த பல பிள்ளைகளில் கல்விச் சிறப்புடைய காரணத்தால் ஒன்றை நோக்கி மனம் வேறுபடக் கூடும். ஒரு குடியில் பிறந்த பலருள்ளே மூத்தோனை வருக என்று அழையாமல், அவர்களுக்குள்ளே அறிவுடையோன் சென்ற வழியில் அரசனும் செல்வான். வேறுபாடு சொல்லப்படும் நான்கு குலங்களுக்குள்ளும், கீழ்க்குலத்தான் எனப்படுபவன் ஒருவன் கல்வி கற்றுச் சிறந்திருந்தால், மேற்குலத்தான் எனப்படுபவனும் அவனிடம் சென்று வழிபடுவான்.”

    இப்பாட்டு குலத்தாழ்ச்சி உயர்ச்சிகளைப் போற்றுவதன்று; அவற்றின் மீது நம்பிக்கை உடையாரும் கல்வியின் காரணமாக அந்நம்பிக்கையைக் கைவிடுவர் என்னும் கருத்துடையது.

    உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
    பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே

    என அக்காலக் கல்வி முறை பேசப்பட்டது. கற்றவரே மேலோர் கல்லாதவரே கீழோர் என்ற கருத்தைக் கடையரே கல்லாதவர் (குறள்-395) என்ற திருக்குறளாலும் அறிக.

    பாட்டின் திணை, துறை விளக்கம்

    இப்பாட்டின் திணை பொதுவியல். புறத்திணைகள் அனைத்திற்கும் பொதுவான கல்வி மேம்பாடு பற்றிக் கூறியமையின் இது பொதுவியல் ஆயிற்று. துறை பொருண்மொழிக் காஞ்சி. கல்வி வல்லவனையே தாயும், அரசும், சமூகமும் மதிக்கும் என்ற உண்மை கூறியமையின் பொருண்மொழிக் காஞ்சியாயிற்று.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 04:39:40(இந்திய நேரம்)