தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Purananooru-5.0-பாட முன்னுரை

  • 5.0 பாட முன்னுரை

    இனிய மாணவர்களே! புறநானூறு குறித்த நான்கு பாடங்களைப் படித்துள்ள நீங்கள் இப்போது பதிற்றுப்பத்துக் குறித்த இரண்டு பாடங்களைப் படிக்கப் போகின்றீர்கள். அவ்விரண்டு பாடங்களில் இது முதற்பாடம்.

    மாணவர்களே! சங்க இலக்கியம் என்பன பத்துப்பாட்டும் எட்டுத் தொகையுமாகிய பதினெட்டு நூல்கள் என்பதை அறிவீர்கள். எட்டுத் தொகையில் பதிற்றுப்பத்து ஒரு நூலாகும்.

    மூவேந்தர்களுள் சேரர் ஓர் இனம் என்று அறிவீர்கள். பத்துச் சேர அரசர்களைப் பற்றிப் பத்துப் புலவர்கள் ஒருவருக்குப் பத்துப் பாடல்களாகப் பாடியுள்ள நூறு பாடல்களின் தொகுப்பாக இந்நூல் விளங்குகின்றது. பத்து + பத்து = பதிற்றுப்பத்து (இடையில் சாரியை இடம் பெற்றது). இன்று இந்நூலில் முதற்பத்தும் இறுதிப் பத்தும் கிடைக்கவில்லை. எஞ்சிய எட்டுப் பத்துகளின் எண்பது பாடல்கள் கிடைத்துள்ளன.

    இரண்டாம் பத்தைக் குமட்டூர்க் கண்ணனார் என்ற புலவர் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைக் குறித்துப் பாடியுள்ளார். மூன்றாம் பத்தைப் பாலைக் கௌதமனார் பல்யானைச் செல்கெழு குட்டுவன் மீது பாடியுள்ளார். நான்காம் பத்தைக் காப்பியாற்றுக் காப்பியனார் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரலைக் குறித்து இயற்றியுள்ளார். ஐந்தாம் பத்தைப் பரணர் செங்குட்டுவனைக் குறித்ததாகப் படைத்துள்ளார். ஆறாம் பத்தைக் காக்கை பாடினியார் நச்செள்ளையார் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் மீது புனைந்துள்ளார். ஏழாம் பத்தைக் கபிலர் செல்வக் கடுங்கோ வாழியாதனைக் குறித்து இயற்றியுள்ளார். எட்டாம் பத்தை அரிசில் கிழார் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையைப் பற்றியதாக ஆக்கியுள்ளார். ஒன்பதாம் பத்தைப் பெருங்குன்றூர் கிழார் இளஞ்சேரல் இரும்பொறையின் மீது புனைந்துள்ளார். இவற்றுள் ஐந்தாம் பத்து இங்கு உங்களுக்கு முதல் பாடமாக இடம் பெற்றுள்ளது.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 04:43:23(இந்திய நேரம்)