Primary tabs
-
6.7 சேரர்களின் ஆட்சி முறை
அரசனே ஆட்சித் துறையின் மையமாக விளங்கினான். அரசனை, கோ, மன்னன், வேந்தன், கொற்றவன் என்று அழைத்தனர்.
சேரர்களின் ஆட்சி எல்லையாக வடக்கே இமயமும், தெற்கே குமரியும், மேற்கும் கிழக்கும் கடல்களும் இருந்தன. இதனைப் பல பாடல்களால் அறியலாம்.
சேரர்களிடம் காலாட் படை, குதிரைப் படை, யானைப் படை, தேர்ப் படை போன்ற படைகள் இருந்துள்ளன.
மன்னனே நீதி வழங்கும் அதிகாரம் பெற்றிருந்தான். இருப்பினும் மன்னன் தவறு செய்கின்ற போது தக்க சமயத்தில் புலவர்கள் நல்வழிப்படுத்தினர். மன்னர்கள் சினம், காமம், அளவிறந்த கண்ணோட்டம், அச்சம், பொய்ச் சொல், கழி பேரன்பு, கொடுஞ்செயல் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும் என மூன்றாம் பத்தில் பாலைக் கௌதமனார் அறிவுறுத்துகிறார்.
சினனே காமம் கழி கண்ணோட்டம்
அச்சம், பொய்ச் சொல், அன்புமிக உடைமை
தெறல் கடுமையொடு, பிறவும் இவ் உலகத்து
அறம் தெரி திகிரிக்கு வழியடை ஆகும்(பாடல்-2, மூன்றாம் பத்து)
என்கிறார்.