Primary tabs
- 5.1 பாலைத் திணைப் புலவர்கள்
ஐங்குறுநூறு, குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, கலித்தொகை ஆகிய நூல்களில் பல பாடல்கள் பாலைத் திணையில் பாடப்பட்டுள்ளன. அகநானூற்றில் சரிபாதிப் பாடல்கள், அதாவது இருநூறு பாடல்கள் பாலைத் திணைப் பாடல்கள் ஆகும்.
ஐங்குறுநூற்றில் உள்ள நூறு பாலைப் பாடல்களையும் பாடியவர் ஓதலாந்தையார். கலித்தொகையில் உள்ள முப்பத்தைந்து பாலைப் பாடல்களையும் பாடியவர் பாலை பாடிய பெருங்கடுங்கோ. இவர் நற்றிணையில் பத்து, குறுந்தொகையில் பத்து, அகநானூற்றில் பன்னிரண்டு பாடல்களையும் பாடியுள்ளார். ஐயத்துக்கு இடமான ஒன்றிரண்டு போக இவர் பாடிய அனைத்துப் பாடல்களுமே பாலைத் திணையில் அமைந்தவை. இச்சிறப்புக் கருதித்தான் பாலை பாடிய என்ற அடைமொழியை இவர் பெற்றுள்ளார்.
அள்ளூர் நன்முல்லை, உகாய்க்குடி கிழார், மதுரைச் சீத்தலைச் சாத்தன் போன்ற பல புலவர்கள் பாலைத் திணையில் பாடியுள்ளனர். ஓதலாந்தையார், பாலை பாடிய பெருங்கடுங்கோ இருவரும் முறையே ஐங்குறுநூறு, கலித்தொகை நூல்களில் உள்ள அனைத்துப் பாலைத் திணைப் பாடல்களையும் பாடியுள்ளனர். ஆகவே இப்பாடத்தில் அவ்விரு நூல்களிலிருந்து மேற்கோள் காட்டப்படும் பொழுது பாடிய புலவரின் பெயர் சுட்டப்படவில்லை.