தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

முப்பொருள் வெளிப்பாடு

  • 5.3 முப்பொருள் வெளிப்பாடு


    பாலைத் திணைக்கு உரிய நிலமான சுரம் சுரம்சார்ந்த பகுதிகள் வறண்ட காடு, மலை சார்ந்த பகுதிகளே ஆகும். நிலப்பகுதி, பொழுது முதலியன பாலைத் திணைப் பாடல்களில் எவ்வாறு வெளிப்படுகின்றன, கருப்பொருள்கள், உரிப்பொருள்கள் ஆகியன எவ்வாறு வெளிப்படுகின்றன என்பதை இப்பகுதியில் அறியலாம்.
     

    5.3.1 முதற்பொருள் வெளிப்பாடு


    தன்னுடன் இணைந்து நடந்து வரும் தலைவியுடன் தலைவன் போவதாக உள்ள நற்றிணைப் பாடலில் பாலை நிலப் பகுதி இவ்வாறு குறிக்கப் படுகிறது.

    மழகளிறு உரிஞ்சிய பராரை வேங்கை
    மணலிடு மருங்கின்

    (நற்றிணை-362 : 7-8. மதுரை மருதனிளநாகனார்)

    (மழகளிறு = இளம் ஆண்யானை; பராரை = பருத்த அடிமரம்)

    இளைய ஆண்யானை உராய்ந்த பருத்த அடியை உடையது வேங்கை மரம். அங்குள்ளது மணற்பரப்பு என்பது இவ்வடிகளின் பொருள்.

    மாரி வறப்ப
    வரைஓங்கு அருஞ்சுரத்து

    (கலித்தொகை-6 : 1-2)

    (மாரி = மழை; வறப்ப = வறண்டுபோக; வரை = மலை; அருஞ்சுரம் = அரிய காடு)

    ‘மழை வறண்டது; உயர்ந்த மலைப் பகுதி சார்ந்த அரிய அக்காட்டில்’ என்பது இதன் பொருள்.

    தண்ணீர் பெறாஅத் தடுமாற் றருந்துயரம்
    கண்ணீர் நனைக்கும் கடுமைய காடு

    (கலித்தொகை- 6 : 5-6)

    தண்ணீர் கிடைக்காமையால் நாவை நனைக்கக் கண்ணீர் சிந்த வைக்கும் கொடுமையான காடு என்று முறையில் திரிந்த முல்லை நிலம் இங்குப், பாலை நிலம் ஆகிறது.
     

    • பொழுது

    வேரொடு மரம்வெம்ப விரிகதிர் தெறுதலின்
    (கலித்தொகை-10 : 4)

    (வெம்ப = கெடும்படி; விரிகதிர் = சூரியன்; தெறுதல் = சுடுதல்)

    வேரொடு மரம் கெட்டு அழியும்படி சூரியனின் கதிர்கள் சுடும் என்பது இவ்வடி தரும் கருத்து, சூரியன் சுட்டெரிக்கும் கோடை காலமான பெரும் பொழுதும், மதிய நேரமான நண்பகல் என்ற சிறுபொழுதும் இவ்வடியில் உணர்த்தப்படுகின்றன.

    வேனில் திங்கள் வெஞ்சுரம் இறந்து
    (ஐங்குறுநூறு - 309 : 1)

    ‘வேனிற் கால மாதத்தில் கொடிய பாலை வழியைக் கடந்து’ என்பது இத்தொடரின் பொருள். வேனிற் காலமான பெரும்பொழுது இத்தொடரில் வெளிப்படுகின்றது.
     

    5.3.2 கருப்பொருள் வெளிப்பாடு


    பாலைத் திணையின் கருப்பொருள்கள் சில பாடல்களில் வெளிப்படுவதை இனி அறியலாம்.
     

    • மக்கள்

    விடலை, காளை, எயினர்.

    அரிதே விடலை இவள் ஆய்நுதற் கவினே
    (ஐங்குறுநூறு - 310 : 4)

    விடலையே! இவளது ஆராய்ந்த நெற்றியின் அழகை மீட்டல் அரியது என்பது இதன் பொருள்.

    வஞ்சினக் காளை
    (ஐங்குறுநூறு - 372 : 2)

    கொடுவில் எயினர்
    (அகநானூறு - 79 : 14, குடவாயிற் கீரத்தனார்)

    • விலங்கு


    செந்நாய்.

    .....செந்நாய் ஏற்றை
    (ஐங்குறுநூறு - 397 : 1)
    (செந்நாய் ஏறு = ஆண் செந்நாய்)
     

    • பூ

    பாதிரி

    வேனிற் பாதிரிக் கூன்மலர் அன்ன
    (குறுந்தொகை- 147: 1, கோப்பெருஞ்சோழன்)

    வேனிற் காலத்தில் மலரும் பாதிரியினுடைய வளைந்த மலர் போன்ற என்பது பொருள்.
     

    • மரம்


    ஓமை, இருப்பை

    ஊர்பாழ்த் தன்ன ஓமையம் பெருங்காடு
    (குறுந்தொகை - 124:2 பாலை பாடிய பெருங்கடுங்கோ)

    (குடியிருந்த ஊர் பாழ்பட்டது போன்ற தோற்றத்தை உடைய ஓமை மரங்கள் நிறைந்த பெரிய காடு)

    கான இருப்பை வேனல் வெண்பூ
    (குறுந்தொகை - 329 : 1, ஓதலாந்தையார்)

    காட்டிலே உள்ள இருப்பை மரத்தினது வேனிற் காலத்தில் மலர்ந்த வெள்ளை மலர்கள் என்பது பொருள்.

    • பண்


    பஞ்சுரம்

    வேங்கை கொய்யுநர் பஞ்சுரம் விளிப்பினும்
    (ஐங்குறுநூறு - 311 : 1)

    வேங்கைப் பூவைப் பறிப்பவர் பஞ்சுரப் பண்ணைப் பாடினாலும் என்பது பொருள்.

    5.3.3 உரிப்பொருள் வெளிப்பாடு

    பொருள் ஈட்டத் தலைவன் பிரிவதும், அப்பிரிவு தொடர்பான நிகழ்வுகளும் பாலைத் திணைப் பாடல்களின் உரிப்பொருள் ஆக வெளிப்படும்.

    பாலைத் திணையில் அதிகமான பாடல்களைக் கொண்ட இலக்கியம் அகநானூறு என்பதை முன்பு கண்டோம். அகநானூற்றுப் பாடல் கொண்டு உரிப்பொருள் வெளிப்பாடு காண்போம்.

    தலைவன் பொருள் ஈட்டத் தன்னைப் பிரிவான் என்பதைத் தலைவி பிறர் கூறக் கேட்கிறாள்; வருந்துகிறாள். ‘அவன் உன்னைப் பிரியான்’ எனக் காரணம் காட்டித் தோழி கூறுகிறாள்.

    பிரிவுத் துயரால் நம்மை அழவிட்டு, வரிப்புலிகள் உலாவுவதும், மேல் காற்றினால் வலிமையான மூங்கில்கள் வளைவதும் ஆன கொடிய காட்டு வழியில் பொருள் தேடுவதற்காகத் தலைவர் பிரிந்து போவார் என்று ஊரார் சொல்வதாகக் கூறும் தலைவியே! நீ பெரிய அறிவிலி!

    பாண்டிய மன்னர் அறநெறி நின்று காவல் செய்யும் துறைமுகம் கொற்கை. கொற்கையின் முத்துக்கள் போன்றவை உன் பற்கள். அப்பற்கள் பொருந்திய பவளம் போன்றது நின் வாய். நின் வாய் ஒன்றே அவர் நின்னைப் பிரியாது தடுக்கப் போதுமே. அதையும் மீறி அவர் செல்ல நினைத்தால் தடுப்பவை எவை தெரியுமா? உன் கண்கள் தாம். போரில் வென்ற வேல் இரத்தம் பட்டுப் புரளுவது போன்றவை மை தீட்டப்பட்ட சிவந்த வரிகள் படர்ந்த நின் கண்கள். அக்கண்களின் மாறுபட்ட பார்வை அவர் உன்னைப் பிரிந்து செல்ல எவ்வாறு விட்டு விடும்? விடாது. ஆதலால் நீ வருந்தாதே”. (அகநானூறு 27, மதுரைக் கணக்காயனார்)

    தலைவியை வருத்தித் தலைவன் பிரிய மாட்டான் என்ற நம்பிக்கையை இங்குத் தோழி வெளிப்படுத்துகிறாள்.

    தலைவன் தலைவியைப் பிரிய இருக்கும் செய்தியைத் தோழியிடம் கூறுகிறான். தோழி தலைவியும் உடன் வருவாள்” என்கிறாள். தலைவன் காட்டு வழியின் கொடிய இயல்புகளைக் கூறி, தலைவி வருவது நகைப்பிற்கு உரியது” என்கிறான்.

    வழியில் செல்பவர்க்குத் துன்பத்தைச் செய்வர் மறவர். அவர்களது வண்டியின் சக்கரம் கிழித்து உண்டாக்கிய வழியில் செல்வர் மக்கள்.

    சுட்டெரிக்கும் முதுவேனிற் காலம் நீண்டிருக்கும்; மேகங்கள் மழை பெய்யாமல் மேலே உயர்ந்து நீங்கும்; தண்ணீர் அற்ற குளத்தில் தோண்டப்பட்ட குழியில் உண்பதற்கு இயலாத கலங்கிய நீர் கிடக்கும்; ஆண்யானை, அந்த நீரைக் கொண்டு கன்றையுடைய பெண்யானையின் தலையைக் கழுவும்; அதன்பின் எஞ்சி இருக்கும் சேற்றினைத் தன் மீது வீசிக் கொள்ளும்; அதனால் அதன் நிறம் வேறுபடும்; சிவந்த காம்பை உடைய வெண்கடம்ப மலர்க் கொத்துகள் அசைய அம்மரக் கிளையைப் பற்றும் அந்த ஆண் யானை, தன் முதுகை அதில் உராயும். அந்த வெண்கடம்பின் வரி நிழலில் மென்மையான தோளை உடைய தலைவி தங்கி, என்னுடன் வருவேன் என்பது சிரிப்ப உண்டாக்குகிறது. (அகநானூறு 121, மதுரை மருதனிளநாகனார்)

    பிரிவுத் துயரை விட வழிநடைத் துயர் பெரிது எனக் காட்டும் இப்பாடல், பாலைத் திணை உரிப்பொருளின் ஓர் இயல்பைக் காட்டுகிறது.

    குறுந்தொகைப் பாடல் ஒன்றில் பிரிவுத் துயரை விடப் பாலை வழிநடைத் துயரம் பெரிது அன்று எனத் தோழி தலைவனிடம் கூறுகிறாள்.

    ஊர்பாழ்த் தன்ன ஓமையம் பெருங்காடு
    இன்னா என்றிர் ஆயின்
    இனியவோ பெரும தமியோர்க்கு மனையே

    (குறுந்தொகை - 124: 2-4, பாலை பாடிய பெருங்கடுங்கோ)

    “ஊரே பாழ்பட்டு நிற்பது போன்ற தோற்றத்தைத் தரும் ஓமை மரங்கள் நிறைந்த பெருங்காடு கொடியது என்கிறீர்கள். அவ்வாறாயின் தனித்து இருக்கும் எங்களுக்கு வீடுகள் மட்டும் இனியவை யாகிவிடுமா?” என்று கேட்கிறாள் தோழி.

    இவ்வாறே நற்றிணை, ஐங்குறுநூறு, கலித்தொகைப் பாடல்களிலும் பாலையின் உரிப்பொருள் வெளிப்படுகிறது.

    நீர்நீத்த மலர்போல நீநீப்பின் வாழ்வாளோ?
    (கலித்தொகை - 5 : 15)

    என்ற பாடலில் ஒரு வரி மட்டுமே பாலையின் உரிப்பொருளைத் தெளிவாகக் காட்டுவது குறிப்பிடத் தக்கது.

    நீர் உள்ளவரை மலரும் செழிப்பாக இருக்கும். நீ உள்ளவரை தலைவியும் மகிழ்ச்சியாக இருப்பாள். நீர் இல்லை என்றால் மலர் வாடி வீழ்ந்துவிடும். நீ இவளைப் பிரிந்து விட்டால் இவளும் இறந்து படுவாள் என்று தோழி தலைவனிடம் கூறுகிறாள்.

    பாலை பாடிய பெருங்கடுங்கோ பாலைத் திணையின் உரிப்பொருளை இவ்வாறு மிக எளிமையாகச் சொல்லிப் புரிய வைக்கும் திறம் வியந்து போற்றுவதற்கு உரியது.

    1)
    ஐங்குறுநூற்றில் பாலைத் திணைப் பாடல்களைப் பாடியவர் யார்?
    2)
    அகநானூற்றில் உள்ள பாலைத் திணைப் பாடல்களின் எண்ணிக்கையைக் கூறுக.
    3)
    பாலைக் கலி பாடியவர் யார்?
    4)

    எந்த நிலங்கள் பாலை நிலமாக மாறும்?

    5)
    பாலைத் திணைக்கு உரிய சிறுபொழுது யாது?
    6)
    பாலைத் திணைக்கு உரிய பறவைகள் எவை?
    7)
    பாலைத் திணையின் உரிப்பொருள் யாது?
    8)
    பாலை நிலப்பூவான பாதிரி, பாடலில் வெளிப்படுவதற்கு ஒரு சான்று தருக.
    9)
    எவை தலைவனின் பிரிவு எண்ணத்தைத் தடுக்கும் என்று தோழி கூறுகிறாள்?
    10)
    “நகைப்பிற்கு உரியது” என்று தலைவன் எதைக் கூறுகிறான்?
    11)
    “நீர் நீத்த மலர்போல நீ நீப்பின் வாழ்வாளோ?” - யார் யாரைப் பற்றி யாரிடம் கூறியது?
புதுப்பிக்கபட்ட நாள் : 17-10-2019 18:09:33(இந்திய நேரம்)