தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

P202235.htm-திருமழிசை ஆழ்வார்

  • 3.5 திருமழிசை ஆழ்வார்


    தொண்டை நாட்டில் உள்ள திருமழிசையில்
    தை மாதத்தில் மகம் நட்சத்திரத்தில் அவதரித்த
    திருமழிசை ஆழ்வார் 216 பாசுரங்களை
    அருளியவர். அவை நான்முகன் திருஅந்தாதி
    (96 பாசுரங்கள்), திருச்சந்த விருத்தம் (120
    பாசுரங்கள்) என்று அழைக்கப்படுகின்றன.

     

    முதல் ஆழ்வார்களும், திருமழிசை ஆழ்வாரும் தொண்டை
    நாட்டினர். நால்வரும் அந்தாதி பாடி அருளியவர்கள்;
    சமகாலத்தவர்கள்.

    நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும்
    தான்முகமாய்ச் சங்கரனைத் தான்படைத்தான் - யான்
    அந்தாதி மேலிட் டறிவித்தேன் ஆழ்பொருளை
    சிந்தாமல் கொண்மின்நீர் தேர்ந்து

    (3484)

    பிரமனை நாராயணன் படைத்தான்; பிரமன் சங்கரனைப்
    படைத்தான். எனவே நாராயணனே முதற்பொருள் என்பதை
    நான் இவ்வந்தாதியின் மூலம் அறிவிக்கிறேன்; நீங்கள் இதனைக்
    குறைவற மனத்தில் கொள்ளுங்கள் எனத் தன் நோக்கத்தை
    விளக்கி, நான்முகன் திருவந்தாதியைத் தொடங்குகின்றார்,
    திருமழிசைப்பிரான்.

    அடுத்தே, எப்படி இருப்பினும் எத்தவம் செய்தாருக்கும்
    ‘அருள்முடிவது ஆழியானிடம்’ என்கின்றார்.

    3.5.1 மெய்ப்பொருள்

    நான்முகன் திருவந்தாதியில் ‘எல்லாப் பொருள்களுக்கும்
    சொல்லாகி நின்றவனைத் தொகுத்துச் சொல்வேன்’ (4387)
    என்பர். அவனைத் திருமழிசை ஆழ்வார் அறிந்தது போல்
    யாரும் அறியவில்லையாம்.

    பாலிற் கிடந்ததுவும் பண் டரங்கம் மேயதுவும்
    ஆலில் துயின்றதும் ஆரறிவார் - ஞாலத்
    தொருபொருளை வானவர்தம் மெய்ப்பொருளைஅப்பில்
    அருபொருளை யானறிந்த வாறு?

    (3486)

    ஆல்இலை மேல் துயின்றவனை வழிபட,


    வாழ்த்துக வாய்;காண்க கண்;கேட்க செவி மகுடம்

    தாழ்ந்து வணங்குமின்கள் தண்மலராய்

    (3494:1-2)

    இருகரம் கூப்பி, வாய் அவன் புகழ்பாட, கண் அவன்
    திருஉருவைக் காண, செவி (காது)யில் அவன் அவதாரத்தைச்
    சொல்லும் பாசுரங்கள் ஒலித்துக் கொண்டே இருக்கவேண்டும்
    என்பர். ஏனென்றால் ‘நாக்கொண்டு மானிடம் பாடேன்
    (3558) எனச் சொன்னவர் திருமழிசை ஆழ்வார்.

    செவிக்கின்பம் ஆவதுவும் செங்கண்மால் நாமம்
    புவிக்கும் புவியதுவே கண்டீர் - கவிக்கு
    நிறைபொருளாய் நின்றானை நேர்பட்டேன் பார்க்கில்
    மறைப்பொருளும் அத்தனையே தான்

    (3552)

    (புவி = பூமி, புவி = இடம்)

    என யாதுமாகி நின்ற மாயனை மீண்டும் மீண்டும்
    கவிப்பொருளாக்கிக் கைகூப்பி வணங்குகின்றார்.

    வீடுபேறு அடையும் வழி அறியாது உடலை வருத்தி,
    எலும்புக்கூடு போலத் தோற்றம் உருவாகும்படி தவம் புரிந்து
    வாழவேண்டாம். வீடுபேற்றைக் கொடுக்க வல்லவன், வேத
    முதற் பொருளான நாராயணன் தான் (3496) என வீடுபேறு
    பெறும் வழி காட்டுகின்றார்.

    3.5.2 பூதங்களும் புனிதனும்

    ‘வானும் தீயும் கடலும், மலையும் கதிரும் மதியும்
    கொண்டலும் உயிரும், திசை எட்டும், இந்த உலகமும்
    திருமாலின் வெளிப்பாடுதான்’ (3520)
    என இயற்கை
    அனைத்தையும்     அவனாகவோ     அல்லது     அவன்
    படைப்பாகவோ காண்கின்றார் ஆழ்வார்.

    குலங்களாய ஈரிரண்டி லொன்றிலும் பிறந்திலேன்
    கலங்களாய நற்கலைகள் நாலிலும் நவின்றிலேன்
    புலன்களைந்தும் வென்றிலேன், பொறியிலேன்,புனித! நின்
    இலங்குபாத மன்றி மற்றோர் பற்றிலேனெம் ஈசனே!

    (841)

    மேற்குலங்களில்     பிறத்தலும் கலைகளில் சிறத்தலும்
    ஐம்பொறிகளை வெல்லுதலும் ஆகிய சிறப்புகள் ஏதும் எனக்கு
    இல்லை. உன் திருவடிகளைத் தவிர வேறு ஒன்றையும் நான்
    அறியேன் என்று தம் இயலாமையையும் அளவில்லாத
    பக்தியையும் ஆழ்வார் தம் திருச்சந்த விருத்தத்தில்
    குறிப்பிடுகிறார்.

    பாம்பணையில் துயில் கொண்டிருக்கும் நாதன் தமக்குக்
    கண்ணாக இருந்து நெறிப்படுத்துபவன் எனச் சொல்லும்
    திருமழிசை ஆழ்வார்,

    ஊனில்மேய ஆவிநீ; உறக்கமோடு உணர்ச்சிநீ
    ஆனில்மேய ஐந்தும்நீ: அவற்றுள்நின்ற தூய்மைநீ
    வானினோடு மண்ணும்நீ; வளங்கடற் பயனும் நீ
    யானும்நீ, அதன்றிஎம் பிரானும்நீ; இராமனே!

    (845)

    (ஊனில் = உடம்பில், ஆனில் மேய ஐந்தும் = பசுதரும்
    பயன்கள் - பால், தயிர், நெய், கோமியம், சாணம்,
    கடற்பயன்
    = அமுதம், பவழம் போன்றன)

    என்று பாடி ‘உன்னை என்னிலிருந்து பிரித்து விடாதே
    என வேண்டுகிறார்.

    3.5.3 பேசு,கேசனே!

    காட்டில் நடந்து கால்களும், ஏனமாய் உலகைச் சுமந்து
    உடலும் நொந்ததால் திருக்குடந்தையில் துயில் கொண்டாயோ
    என வினாவுகின்றார்.

    நடந்த கால்கள் நொந்தவோ? நடுங்க ஞான மேனமாய்
    இடந்தமெய் குலுங்கவோ? இலங்குமால் வரைச்சுரம்
    கடந்தகால் பரந்தகாவி ரிக்கரைக் குடந்தையும்
    கிடந்தவாறு எழுந்திருந்து பேசுவாழி கேசனே!

    (812)

    இத்திருமாலின்     அருளிச்     செயல்களுக்குக் காரணம்
    கற்பிக்கின்றார் ஆழ்வார்.

    3.5.4 எல்லாம் நெஞ்சுள்ளே

    திருமழிசை பிறக்கும் முன்பு திருவூரகத்தில் நின்றும்,
    திருப்பாற்கடலில் இருந்தும், திருவெஃகாவில் கிடந்தும் அருளிய
    திருமால், பிறந்தபின் தம் நெஞ்சிலே எல்லாக் கோலமும்
    கொண்டருளினார் என்கிறார் அவர். எப்படி?


    அன்றுநான் பிறந்திலேன்; பிறந்தபின் மறந்திலேன்

    நின்றதும் இருந்ததும் கிடந்ததுமென் நெஞ்சுளே

    (815)

    என்பர். பிறந்த உயிர் அழிவது தெரிந்திருந்தும் இந்த
    உலகத்தில் உள்ள மக்கள் ஏன் இறைவனை எண்ணி வாழ
    முடியாமல் உள்ளனர் என வினவுகின்றார் (817).

    • கால் வலையில்படுதல்

    வீடுபேறு அடையும் வழி தெரியாது உடலை வருத்தி,
    தவம்புரிந்து அலைந்து திரிய வேண்டாம். வீடுபேறு
    கொடுக்கவல்ல மெய்ப்பொருளும் வேதமுதற் பொருளும்
    விண்ணவர்க்கு நற்பொருளும் நாராயணன் தான் (3496) என
    வழிகாட்டுகின்றார். அந்த வழி மிக எளிது. பல மலைகளைப்
    பற்றிக் குறிப்பிடும்போது திருவேங்கடமலையைச் சொன்னேன்.
    இதனால் வீடுபேறு உறுதி என்னும் நிலையை அடைந்தேன்.
    அதை இப்போது எண்ணிப் பார்க்கிறேன்.

    வெற்பென்று வேங்கடம் பாடினேன் வீடாக்கி
    நிற்கின்றேன் நின்று நினைக்கின்றேன் -

    (3523)

    3.5.5 அவதாரம்

    ‘ஆமையாகி ஆழ்கடல் துயின்ற ஆதி தேவன்’ எனக் கூர்ம
    அவதாரத்தைப் (765, 771) போற்றும் ஆழ்வார் ஒவ்வொரு
    அவதாரத்திற்கும் உள்ள பெருமையாகக் கூறுவனவற்றுள் சில:

    வாமனன் அடியினை வணங்கினால் ‘ஞானமும் செல்வமும்
    சிறந்திடும்! திருமாலைப் போற்றினால் தீவினைகள் நீங்கும் (825),
    அவன் ‘விண்கடந்தசோதி, ஞானமூர்த்தி, பாவநாச நாதன்’
    (778), விண்ணின் நாதன் (798), கடல் கிடந்தகண்ணன்
    (844), வேதகீதன் (868), சாம வேத கீதன் (765)
    எனப்
    போற்றிப் புகழ்கின்றார்.

    காளிங்கன் என்னும் பாம்பின்மேல் நடனம் ஆடியவன்;
    குடக்கூத்தாடிய கொண்டல் வண்ணன், கோவர்த்தன மலையைக்
    குடையாய்ப் பிடித்தவன். விளங்கனி வடிவில் வந்த அரக்கனைக்
    கொன்றவன் (789).

    ஆய்ச்சிபாலை யுண்டு மண்ணை யுண்டு
                 வெண்ணெயுண்டு,பின்
    பேய்ச்சிபாலை யுண்டு பண்டொ ரேனமாய வாமனா!

    (788:3-4)

    என வாமன அவதாரத்தைச் சொல்லும் ஆழ்வார் வராக
    அவதாரத்தைச் சுட்டி விளிக்கின்றார்.

    ‘உரத்தில் (மார்பு) கரத்தை (கை) வைத்து நகத்தால்
    கீறியவன், வாமனன் ஆகி மண் இரந்தவன் (776)
    என
    இரணிய அவதாரத்தையும் வாமன அவதாரத்தையும் ஒரு
    பாசுரதத்தில் சுட்டுவர்.

    திருமால் உள்ளங்கையில் ஆழி (சக்கரம்), சங்கு, தண்டு, வில்,
    வாள் ஏந்தியவன் (775, 848, 857).

    கூனியின் முதுகின் மீது வில்லுண்டை எறிந்த நாதன் வாழ்கின்ற
    ஊர் திருவரங்கம்.

    கொண்டை கொண்ட கோதைமீது தேனுலாவு கூனிகூன்
    உண்டைகொண் டரங்கவோட்டி உள்மகிழ்ந்த நாதனூர்

    (800)

    ‘இலங்கை மன்னன் சிரங்கள் பத்தும் அறுத்து உதிர்த்த
    செல்வர்’ வாழும் இடம் திருவரங்கம் ஆகும்.

    அரங்கமென்பர் நான்முகத் தயன்பணிந்த கோயிலே
    (802)

    இலங்கையை அழித்த ஆழியானை நான்முகன் வந்து பணிந்த
    ஊர் அரங்கம் எனப் பாசுரம் செய்கின்றார் திருமழிசை.

    திவ்ய தேசங்களின் புகழ்பாடும் அடியார் பழைய
    புராணக்கதைகளைப் பொதிந்து புதிய விளக்கம் கொடுக்கின்றார்.

    3.5.6 கூடல் இழைத்தல்

    தலைவனைப் பெற விரும்பும் தலைவி கூடல் இழைத்தல்
    அகப்பொருள் மரபாகும். இங்கு நான்முகன் திருவந்தாதியில்
    திருமழிசை நாயகி நிலையில் நின்று,

    அழைப்பன் திருவேங் கடத்தானைக் காண
    இழைப்பன் திருக்கூடல் கூட

    (3522)

    எனப் பாடுவது, மானுடக் காதல் இறைவன் மீது கொண்ட
    காதலாக மாற்றம் செய்யப் பெற்றதைக் காட்டுகின்றது.

    3.5.7 நிலையாமை

    திருமழிசை,

    வாள்களாகி நாள்கள்செல்ல நோய்மைகுன்றி மூப்பெய்தி
    மாளும்நாள்அது ஆதலால் வணங்கிவாழ்த்தென் நெஞ்சமே!

    (863: 1-2)

    எனப் பிறப்பு இறப்பு நீங்க, உடம்பின் நிலையாமையைச்
    சொல்லி மனத்தை மாயன்பால் வைக்க வேண்டுகிறார்.
    வீடுபேறு தருபவன்; வெற்றி அளிப்பவன்; ஞானம் ஆனவன்,
    அத்தலைவன்.

    அத்தனாகி, யன்னையாகி யாளுமெம்பி ரானுமாய்
    ஒத்தொவ்வாத பல்பிறப் பொழித்துநம்மை ஆட்கொள்வான்

    (866:1-2)

    அச்சம், நோய், அல்லல் (துன்பம்), பல்பிறப்பு, மூப்பு (முதுமை)
    ஆகியவற்றை அகற்றி வானாளும் பேறு கொடுப்பான்.
    நாகணையில் (பாம்பணை) கிடந்த நாதன் என்பர்.

    பலபிறவிகள் எடுத்த தம் உடம்பை, அவனே உய்யக்
    கொள்வான். ‘என் ஆவிதான் இயக்குஎலாம் அறுத்து
    அறாத இன்பவீடு பெற்றதே
    ’ (871:4) எனத் திருச்சந்த
    விருத்தத்தின் இறுதிப் பாசுரம் திருமழிசை ஆழ்வாரின் பற்று
    அறுத்த நிலையைக் காட்டுகின்றது.

    ஒன்றுசாதல், நின்றுசாதல், அன்றியாரும் வையகத்து
    ஒன்றிநின்று வாழ்தலின்மை கண்டுநீச ரென்கொலோ
    அன்றுபா ரளந்தபாத போதையுன்னி வாின்மேல்
    சென்றுசென்று தேவராய் இருக்கிலாத வண்ணமே?

    (812)

    âன்னும் பாசுரம் தம்முயிர் போலவே பிற உயிரும்
    உய்திபெறும் வழியை நாட வேண்டும் என ஏங்கும்
    ஆழ்வாரின் விழைவைக் காட்டுகின்றது.

    மறம்துறந்து வஞ்சமாற்றி யைம்புலன்க ளாசையும்
    துறந்துநின் கண் ஆசையே தொடர்ந்துநின்ற நாயினேன்

    (849)

    எனப் பாடி மீண்டும் பிறவாமல் இருக்கும் பேறும், உன்னை மறவாதிருக்கும் பேறும் வேண்டும் என்பர்.
புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 11:36:30(இந்திய நேரம்)