தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

கால அடிப்படையிலான இதழ்கள்

  • 2.2 கால அடிப்படையிலான இதழ்கள்

    குறிப்பிட்ட கால இடைவெளியில் வருவதைக் கால இதழ் (Periodical) அல்லது பருவ இதழ்கள் (Magazine) என்று கூறலாம். இவற்றை, வெளிவரும் கால இடைவெளியின் அடிப்படையில் வகைப்படுத்தலாம்.

    2.2.1 நாளிதழ்

    நாள்தோறும் வெளியாகும் இதழ்களை நாளிதழ் என்கிறோம். அன்றாடச் செய்திகளை உடனுக்குடன் தெரிவிப்பவை நாளிதழ்களே. இதழியல் என்ற ஆங்கிலக் கலைச்சொல்லான ஜர்னல் என்ற சொல்லின் இலத்தீன் மூலமே அன்றாடம் என்ற பொருளைக் குறிப்பிடுவது நினைவில் கொள்ளத்தக்கதாகும். நாளிதழ்களில் பெரும்பாலும் செய்திகள் இடம் பெறுகின்றன. வர்த்தகம், தொழில், சினிமா, விளையாட்டு, சட்டம், தொழிலாளர் நலன், கல்வி, அரசியல், கட்சிகள், மகளிர், சிறுவர் பற்றிய செய்திகளுக்கும் நாளிதழ்கள் இடம் ஒதுக்குகின்றன. உள்ளூர்ச் செய்திகளிலிருந்து வெளிநாட்டுச் செய்திகள் வரை எல்லாத் தரப்புச் செய்திகளையும் தருவது நாளிதழின் நோக்கமாகும். செய்திகளின் நம்பகத்தன்மைக்காகப் புகைப்படங்கள் இடம் பெறுகின்றன. நாட்டு நடப்புகளை வெளிப்படுத்தும் வகையில் கருத்துப்படங்களும் (cartoons) இடம் பெறுகின்றன.

    நாளிதழ்களின் வடிவம் உலகெங்கிலும் ஒரே மாதிரியாக உள்ளது என்பர். டெம்மி என்றழைக்கப்படும் அளவில் நாளிதழ்களின் பக்கங்கள் உள்ளன. ஒருபக்கம் எட்டுப் பத்தியாகப் பிரிக்கப்படுகிறது. நாளிதழ்கள் வெளிவரும் நேரத்தின் அடிப்படையில் காலை இதழ்கள், மாலை இதழ்கள் எனப் பிரிக்கப்படுகின்றன.

    • காலை இதழ்கள்

    காலையில் வெளியாகும் நாளிதழ்களைக் காலை இதழ்கள் எனலாம். இக்காலை இதழ்கள் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் வெளியாகின்றன.


    சான்று:

    ஆங்கிலம் :

    அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட்; இந்தியாவில் தி ஸ்டேட்ஸ்மன், தி டைம்ஸ் ஆஃப் இண்டியா முதலியன

    தமிழில் :

    தினத்தந்தி, தினமலர் முதலியவை.

    • மாலை இதழ்கள்

    ஒவ்வொரு நாளும் மாலையில் வெளியாகும் இதழ்களை மாலை இதழ்கள் எனலாம். அன்றாடம் மதியம் ஒருமணி வரை உள்ள செய்திகள் மாலை இதழ்களில் வெளியாகின்றன. சிலபோது இன்றிமையாச் செய்திகள் வெளியிடுவதற்காகக் காலை பதினொருமணி அளவில் முதற்பதிப்பை வெளியிடுகின்றன. சான்றாகப் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு, பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் போது மாலைமுரசு நாளிதழ் வெளியிடும் சிறப்புப் பதிப்பினைச் சுட்டலாம்.

    பொதுத் தேர்தலின் போதும் இம்மாதிரி இரண்டு அல்லது மூன்று பதிப்புகளை இம்மாலை இதழ்கள் வெளியிடுகின்றன.


    சான்று :

    மாலை முரசு, மாலை மலர்

     

    2.2.2 வார இதழ்கள்

    வாரந்தோறும் வெளியாகும் இதழ்களை வார இதழ்கள் என வரையறைப்படுத்தலாம். வார இதழ்களில் செய்திகள் இடம் பெற்றாலும், செய்தியின் பின்னணி, என்ன காரணம், எப்படி நடந்தது என்பதை நுணுக்கமாக ஆராய்ந்து, பின்னணியுடன் இவ்வார இதழ்கள் வெளியிடுகின்றன.

    நாளிதழ்களில் செய்திகள் வெளியாகின்றன; வார இதழ்களில் செய்திக் கட்டுரைகள் வெளியாகின்றன. உலகெங்கிலும் நாளிதழ்களை விட வார இதழ்களின் எண்ணிக்கைதான் அதிகமாக இருக்கிறது எனலாம். இலக்கியம், சமயம், தத்துவம், கலை, தொழில், திரைப்படம், கல்வி, பொருளாதாரம், விளையாட்டு ஆகியவை பற்றிய கருத்துகள் வார இதழ்களில் அதிகம் இடம் பெறுகின்றன. தமிழ்மொழி வாரஇதழ்களில் நகைச்சுவைத் துணுக்குகளும் தவறாது இடம் பெறுகின்றன. வார இதழ்களில் கதை, கட்டுரை முதலியவற்றிற்கு ஓவியர்கள் வரையும் ஓவியங்கள் இடம் பெறுகின்றன. இலக்கியம் சார்ந்த சிறுகதை, நாவல் (தொடர்கதை), கவிதை, செய்திக்கட்டுரைகள் முதலியனவும் இடம் பெறுகின்றன.

    வார இதழ்களை, அவை வெளியாகும் கால இடைவெளியின் அடிப்படையில் வகைப்படுத்தி வரையறுக்கலாம்.

    • வாரம் மும்முறை இதழ்கள்

    ஒரு வாரத்தில் மூன்று முறை வெளியாகும் இதழ்களை வாரம் மும்முறை இதழ்கள் எனலாம். கிட்டத்தட்ட இந்த இதழ்கள் செய்தி இதழ்களாக உள்ளன. வாரம் மும்முறை இதழ் வரிசையில் தமிழின் முதல் இதழ் காலக்கணிதன் ஆகும். 1883ஆம் ஆண்டு மே மாதம் முதல் இவ்விதழ் வாரம் மும்முறையாக வெளியானது. 1897ஆம் ஆண்டு சுதேசமித்திரன் வாரம் மும்முறை இதழாகத் தொடங்கப்பட்டது.

    • வாரம் இருமுறை இதழ்கள்

    வாரத்திற்கு இருமுறை வெளியாகும் இதழ்கள் உண்டு. இவையும் செய்தி இதழ்களாக உள்ளன.

    சான்று:

     ஜூனியர் விகடன் குமுதம் ரிப்போர்ட்டர்

    1832ஆம் ஆண்டு வெளிவந்த புனித ஜார்ஜ் கெசட் என்பது தமிழின் முதல் வாரம் இருமுறை இதழாகும்.

    வாரம் இருமுறையோ, மும்முறையோ வெளிவரும் இதழ்களையும் உலக நாடுகளின் கல்வி, சமுதாயம், பண்பாட்டு அமைப்பு (UNESCO) நாளிதழ்களாகவே கருதுகின்றது. அவ்வகையில் செய்திகளையே முக்கியமாகக் கருதும் இவ்விதழ்களை நாளிதழ் வரிசையில் சேர்க்கலாம்.

    • வார இதழ்கள்

    வாரந்தோறும் வெளியாகும் இதழ்களை வாரஇதழ்கள் என்பர். இவ்விதழ்களில் செய்திகளோடு சிறுகதை, கட்டுரை, கவிதை போன்றவையும் இடம் பெறுகின்றன.

    சான்று :

    குமுதம், ஆனந்த விகடன், குங்குமம், கல்கி.

    1983ஆம் ஆண்டுக் கணக்கின்படி இந்தியாவில் 6128 வார இதழ்கள் வெளியாகியுள்ளன. 1823ஆம் ஆண்டு புதுவையிலிருந்து வெளியான புதுவை அரசிதழ் தமிழில் வெளிவந்த முதல் வார இதழ் ஆகும்.

    2.2.3 மாத இதழ்கள்

    மாதந்தோறும் வெளிவரும் இதழ்களை மாத இதழ்கள் என வரையறுக்கலாம். நாளிதழ், வார இதழ்களை விட ஒரு செய்தியை ஆழமாகவும் அகலமாகவும் வெளியிடுவதற்கு மாத இதழ்கள் இடமளிக்கின்றன. இம்மாத இதழ்களும் வெளியாகும் கால இடைவெளியின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன.

    • மாதம் மும்முறை இதழ்கள்

    மாதந்தோறும் குறிப்பிட்ட கால இடைவெளியில் மூன்றுமுறை வெளியாகும் இதழ்கள் மாதம் மும்முறை இதழ்களாகும். இவ்விதழ்களும் செய்தியைப் பின்னணியாகக் கொண்ட கட்டுரைகளுக்கு முக்கியத்துவம் தருகின்றன. 1833ஆம் ஆண்டு வெளியான இராசவிருத்திபோதினி என்பது தமிழின் முதல் மாதம் மும்முறை இதழாகும். தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளில் வெளியான இவ்விதழுக்கு அரசாங்கம் உதவிப்பணம் அளித்தது. மதியம், திருவாங்கூர் அபிமானி முதலிய இதழ்கள் மாதம் மும்முறை இதழ்களில் குறிப்பிடத்தகுந்தவையாகும்.

    • மாதம் இருமுறை இதழ்கள்

    பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை வெளியாகும் இதழ்கள் மாதமிருமுறை இதழ்கள் (Fortnightly) என்று அழைக்கப்படுகின்றன. வார இதழ்களுக்கும் மாத இதழ்களுக்கும் இடையில் இருக்கும் இவ்விதழ்கள், இவ்விரு இதழ்களையும் இணைக்கும் பாலமாகச் செயற்படுகின்றன எனலாம்.

    1835ஆம் ஆண்டு சென்னையிலிருந்து வெளியான சத்தியதூதன் என்பது தமிழின் முதல் மாதமிருமுறை இதழாகும். கிறித்துவ சமயக் கல்விக்கழக வெளியீடாகத் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் வெளியானது. இலாசரசு என்பவரை ஆசிரியராகக் கொண்டு மற்றொரு சத்தியதூதன் இதே ஆண்டில் ஒருபைசா விலையில் சென்னையிலிருந்து வெளியானது.

    சான்று:

    அவள் விகடன்,
    இந்தியா டுடே
    (தமிழ், ஆங்கிலம் முதலிய பல மொழிகளில்)


    • மாத இதழ்கள்

    மாதந்தோறும் வெளியாகும் இதழ்களை மாத இதழ்கள் என வரையறை செய்வர். துறை சார்ந்த இதழ்கள், ஆராய்ச்சி இதழ்கள் முதலியன மாத இதழ்களாக வெளியாகின்றன. 1812ஆம் ஆண்டு வெளியான மாசதினச் சரிதை என்ற இதழ் தமிழின் முதல் மாத இதழாகும். இவ்விதழ் பற்றிய செய்திகளை இதழியல் அறிமுகம் என்ற பாடத்தில் காணலாம்.

    சான்று :

    கலைமகள், செந்தமிழ்ச் செல்வி

    2.2.4 ஆண்டிதழ்கள்

    ஓர்ஆண்டின் கால எல்லைக்குள் வெளியாகும் இதழ்களை ஆண்டிதழ்கள் எனக்குறிப்பிடலாம். அவையும் வெளியாகும் கால எல்லைக்குள் பகுத்துச் சுட்டப்படும்.

    • காலாண்டிதழ்

    மூன்று மாதத்திற்கு ஒரு முறை வெளியாகும் இதழ்கள் காலாண்டிதழ்கள் ஆகும். இவ்வகை இதழ்கள் பெரும்பாலும் ஆய்வு மற்றும் துறை சார்ந்த இதழ்களாக உள்ளன. 1815ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து வெளியான யாழ்ப்பாணத் தமிழ்த் திருச்சபை இதழ் முதல் தமிழ்க் காலாண்டிதழாகும்.

    • அரையாண்டிதழ்

    ஆண்டுக்கு இருமுறை வெளியாகும் இதழ்களை அரையாண்டு இதழ்கள் என வரையறை செய்யலாம். இவையும் துறை சார்ந்த இதழ்களாக உள்ளன. சொல்ல வந்த பொருள் பற்றிய செய்திகளை ஆழமாக வெளியிடும் இதழ்கள் அரையாண்டிதழ்கள் ஆகும். 1894ஆம் ஆண்டு வெளியான பிரம்ம வித்யா என்பது முதல் அரையாண்டிதழ் ஆகும்.

    • ஆண்டிதழ்

    ஆண்டுதோறும் வெளியாகும் இதழ்கள் ஆண்டிதழ்கள் எனப்படும். கல்லூரி, பள்ளி, அலுவலகம் பற்றிய பொதுவான செய்திகள் வெளியாகும் ஆண்டுமலர்களை ஆண்டிதழ்கள் எனலாம். 1885ஆம் ஆண்டு வெளியான சாமியின் ஆண்டிதழ் முதல் தமிழ் ஆண்டிதழாகும். இதழ்கள் வெளிவரும் கால அடிப்படையிலான வகைகளை இதுவரை கண்டறிந்தோம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 27-09-2017 12:52:24(இந்திய நேரம்)