தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

வினைத் தொகை

  • 2.2 வினைத் தொகை


         வினைத்தொகை என்பது, பெயரெச்சத் தொடராகும்.
    பெயரெச்சமாக வரும் வினையில், பெயரெச்சத்தின் விகுதியும்
    காலம் காட்டும் இடைநிலை கெட்டு, வினையின் முதல்நிலை
    மட்டும் நின்று அதனோடு பெயர்ச்சொல் தொடர்வதாகும்.
    அதனால் வினைத்தொகையைக் காலம் கரந்த பெயரெச்சம்
    என்பர்.கரந்த என்றால் மறைந்த என்பது பொருள்.

    (எ-டு) வீசு தென்றல்

         இத்தொடரை விரித்துக் கூறும்பொழுது, வீசிய தென்றல்,
    வீசுகின்ற தென்றல், வீசும் தென்றல் என முக்காலத்திற்கும்
    பொருந்திவரக் காணலாம்.இவ்வாறு வினைத்தொகை முக்காலமும்
    குறித்து வருமானால் அவை முக்கால வினைத் தொகைகள்
    எனப்படும்.

        வீசிய, வீசுகிற, வீசும் என்னும் பெயரெச்சங்களின் விகுதியும்
    காலமும் கெட்டு, வீசுதல் என்னும் தொழிலின் முதல்நிலையான
    வீசு என்பது மட்டும் நின்று, தென்றல் என்னும் பெயரொடு வந்து வினைத்தொகை ஆயிற்று.

         சில வினைச் சொற்களின் வினைப் பகுதியான முதல் நிலை விகாரப்பட்டும் வினைத்தொகை வரும்.

    (எ-டு) வருபுனல்

         இவ்வினைத்தொகையில் வா என்னும் வினைப் பகுதியான
    முதல்நிலை வரு எனத் திரிந்து புனல் என்னும் பெயரோடு
    வந்தது.

         காலம் கரந்த பெயரெச்சம் வினைத்தொகை
                   (நன்னூல் - 364)


    1)
    தொகை என்றால் என்ன?
    2)
    தொகைநிலைத் தொடரில் எச்சொற்களை
    எச்சொற்கள் தொடரும்?
    3)
    உருபு இல்லா வேற்றுமைகள் யாவை?
    4)
    வேற்றுமைத் தொகை எத்தனை வகைப்படும்?
    5)
    வேற்றுமைத் தொகைநிலைத் தொடரில்
    மறைந்து வருவன யாவை?
    6)
    உருபும் பயனும் உடன் தொகா வேற்றுமை
    எது?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 14:14:36(இந்திய நேரம்)