தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

காப்பிய வகைமை

  • 1.5 காப்பிய வகைமை

        ஏதாவது ஒரு பொருளை அடிப்படையாகக் கொண்டு தொன்மையான காப்பிய இலக்கியங்கள் முதல் தற்கால நவீனக் காப்பியங்கள் வரை வகை தொகைப் படுத்துதலே காப்பிய வகைமை ஆகும். காப்பியங்களை வகைமைப்படுத்தும் அரிய பணியை உலகக் காப்பியங்கள், இந்தியக் காப்பியங்கள் ஆகியவற்றின் காப்பிய வகைமை உத்திகளைக் கொண்டும் செய்யலாம். நம்முடைய தமிழ் இலக்கண நூல்களான தொல்காப்பியம், நன்னூல், தண்டியலங்காரம் ஆகியன கூறியுள்ள கருத்தாக்கங்களின் அடிப்படையிலும் செய்யலாம். எவ்வகையைச் சார்ந்து செய்தாலும் தற்சார்பு, சமயச் சார்புத் தன்மையின்றி ஆழ்ந்த சிந்தனையோடு திறம்படச் செய்ய வேண்டும்.

    1.5.1 காப்பிய வகைமையின் பயன்கள்

        உயர்தனிச் செம்மொழியாய்த் திகழும் தமிழின் தொன்மையை உலகம் அறிய, கால அடிப்படையிலான காப்பிய வகைமையாக்கம் அவசியமாகிறது.

    (1) செம்மொழிக்குரிய 11 தகுதிகளாக இந்திய மொழிகள் நிறுவனம் அறிவித்துள்ள பண்புகள் :

    1)
    தொன்மை
    2)
    தனித்தன்மை
    3)
    பொதுமைப் பண்பு
    4)
    நடுவு நிலைமை
    5)
    தாய்மை இயல்பு
    6)
    பண்பாடு - கலைப்பட்டறிவு வெளிப்பாடு
    7)
    பிறமொழிச் சார்பின்றி இயங்கும்
    ஆற்றல்
    8)
    இலக்கிய வளம்
    9)
    உயரிய சிந்தனை
    10)
    இலக்கியச் சிறப்பும் பங்களிப்பும்
    11)
    மொழிக் கோட்பாடு உடைமை


        காப்பிய வகைமையாக்கத்தின் மூலமாக, மேற்கூறிய பண்புகளை நம்மால் நிலைநிறுத்த முடியும்.

    (2) காலக் கட்டத்தை வரையறுப்பதன் மூலம், அக்கால மக்களின் சமூக, அரசியல், பொருளாதார நிலையை அக்காப்பியத்தோடு ஒப்பு நோக்கி ஆய்வுகள் நிகழ்த்த முடியும்.

    (3) ஒரு குறிப்பிட்ட வகைமைப் படுத்தப்பட்ட காப்பியத்தை, அதற்கு முன்னும் பின்னும் தோன்றிய காப்பியங்கேளாடு ஒப்பு நோக்கி, யாப்பு மாற்றங்களை எளிதாக அறியலாம்.

    (4) இலக்கியங்களில் மறைந்திருக்கும் வெளிப்படாத செய்திகளை எளிதாகக் கண்டறியலாம்.

    (5) காப்பிய வகைமை மூலம் அந்தந்தக் கால மக்களின் மதிப்பீடுகள், பழக்க வழக்கங்கள், பண்பாட்டுக் கூறுகள், சமயச் சடங்குகள், வாழ்க்கை முறைகள் ஆகியவற்றை நம்மால் தெளிவாக அறிய முடியும்.

    (6) கால முறைப்படி காப்பியங்களை வகைமைப் படுத்துவதன் மூலம், அதே காலத்தில் இந்திய இலக்கியத்தில் செய்யப்பட்ட காப்பியப் பதிவுகளை ஒப்பு நோக்கலாம்.

    (7) மறைந்து போன அல்லது அழிந்து போன தமிழ்க் காப்பியங்களை எளிதாக அறிந்து கொள்ளலாம்; அதன் காரணங்களையும் ஆராயலாம்.

    (8) காப்பியங்களை வகைமைக்குள்ளாக்கும் போது, ஒவ்வொரு புலவரும் கொண்டிருந்த இலக்கியக் கொள்கைகளை நம்மால் இனங்காண முடியும்.

        ஆக, காப்பிய வகைமை என்பது, தமிழ் இலக்கியத்திற்குச் செய்யும் பெருந்தொண்டாகவே அமைகிறது.

    1.5.2 வகைமையாக்கும் முறைகள்

        வகைமைப் பாகுபாட்டைக் கீழ்க்காணும் அடிப்படைகளை ஒட்டிச் செய்யலாம் :

    (1) காப்பியங்களை உருவாக்கப் பயன்படுத்தப்பட்ட பா வகையின் அடிப்படையில் செய்யலாம்.

    (2) வடமொழிக் காப்பிய வகைமை மரபைப் பின்பற்றி அமைக்கலாம்.

    (3) அவை தோன்றிய காலக் கட்டத்தின் அடிப்படையில் பிரிக்கலாம்.

    (4) சோழர் காலம், பல்லவர் காலம் என்று அரசர்களின் காலத்தை முன்னிறுத்திச் செய்யலாம்.

    (5) பாத்திர அடிப்படையிலும், வேறு காப்பியங்களின் தொடர்ச்சி அடிப்படையிலும் அமைக்கலாம்.

    (6) காப்பியப் புலவர் அல்லது காப்பிய மாந்தர் பின்பற்றிய சமயத்தின் அடிப்படையில் பார்க்கலாம்.

    (7) பொதுவான, ஏற்றுக்கொள்ளப்பட்ட எந்தக் கோட்பாடுமின்றி மனவோட்டத்தின் அடிப்படையில் பிரிக்கலாம்.

    (8) பாடல்களின் எண்ணிக்கை, அளவின் அடிப்படையிலும் செய்யலாம்.

        இவ்வாறு காப்பியங்களை வகைமைப் படுத்தும் மரபு தமிழில் இருந்து வருகிறது.

    • பா வகையின் அடிப்படையில்

        தமிழ் இலக்கியக் கொள்கை ஓர் அறிமுகம் என்ற நூலில், மு.அருணாசலம் பா வகைகளை அடிப்படையாகக் கொண்ட வகைமையை முன்வைக்கிறார். அவரது கருத்துப்படி,

        “காப்பியம் என்பது கதை தழுவிய தொடர்நிலைச் செய்யுள். ஆசிரியத்தில் தொடங்கிப் பின்னர் விருத்த யாப்பாக வளர்ந்தது. இளங்கோ ஒருவரே கலிப்பாவைக் காப்பியத்தில் படைத்துக் காட்டுகிறார்.

        ஆசிரியப்பாவால்     இயன்றவை    காலத்தால் பழமையானவை. சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை என்ற மூன்றும் அவ்வகையைச் சேர்ந்தவை.

    • ஏற்றுக் கொள்ளத்தக்க காப்பிய வகைமை

    (1) தமிழின் முதற்காப்பியம் சிலப்பதிகாரமே என அனைவரும் ஏற்றுக் கொள்கின்றனர்.

    (2) சிலம்பின் தொடர்ச்சி மணிமேகலையாய் மலர்வதால் இவை இரண்டினையும் ஒன்றிணைத்து இரட்டைக் காப்பியம் என வகைப் படுத்துகின்றனர்.

    (3) மூன்றாம் காப்பியமாகப் பெருங்கதையை முன் வைக்கின்றனர்.

    (4) ஐம்பெருங்காப்பியங்கள் எனச் சிலப்பதிகாரம்,மணிமேகலை, சீவகசிந்தாமணி,     வளையாபதி,     குண்டலகேசியைக் குறிப்பிடுகின்றனர்.

    (5) ஐஞ்சிறு காப்பியங்கள் என யசோதரகாவியம், உதயண குமார காவியம், நீலகேசி, நாககுமார காவியம், சூளாமணி ஆகிய நூல்களைக் குறிப்பிடுகின்றனர்.

    (6) இராமாயண, மகாபாரதக் கதைகளை இதிகாசங்கள் என அழைக்கின்றனர்.

    (7) பெரிய புராணம், கந்தபுராணம், திருவிளையாடற் புராணம் ஆகியவற்றைப் புராணக் காப்பியங்கள் என்கின்றனர்.

    • மன்னர்களின் ஆட்சிக் காலத்தை முன்வைத்து வகைப்படுத்துதல்

        காப்பிய வகைமையாக்கம் பல இலக்கிய வரலாற்று ஆசிரியர்களால் மன்னர்களின் ஆட்சிக் காலத்தை முன்வைத்து நடைபெற்றது எனலாம்.

    (1) சங்க கால இலக்கியங்கள்

    (கி.மு. 500 முதல் கி.பி. 200 வரை)

    தோன்றிய நூல்கள் : அகத்தியம், தொல்காப்பியம்,         எட்டுத்தொகை, பத்துப்பாட்டு

    (2) சங்கம் மருவிய கால இலக்கியங்கள் (கி.பி. 200 முதல் கி.பி. 450 வரை)

    பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் இக்காலத்தில் தோன்றின.

        சங்க காலத்தில்     ஏற்றுக்     கொள்ளப்பட்ட கள் குடித்தலையும், பரத்தமைத்     தொடர்பையும் இக்கால இலக்கியங்கள் கண்டித்தன.

        பௌத்தமும் சமணமும் தமிழகத்தில் வேரூன்றின.

        தனிப்பாடல் அமைப்பை இளங்கோ மாற்றி, சிலப்பதிகாரம் எனும் காப்பியம் தந்தார்.

        பசியைப் போக்குதலே உயர்ந்த அறம்

    எனும் நோக்கில் சீத்தலைச் சாத்தனார் மணிமேகலை எனும் காப்பியம் படைத்தார்.

        குணாட்டியர் என்பவரால்     பைசாச மொழியில் இயற்றப்பட்ட பிருகத் கதை எனும் நூலின் அடிப்படையில் பெருங்கதை அமைந்துள்ளது. இதன் ஆசிரியர் கொங்கு வேளிர். இது சமண சமய நூல்.

    (3) சோழர் காலக் காப்பியங்கள்

    (கி.பி. 900 முதல் கி.பி. 1300)

    1. சீவகசிந்தாமணி     - திருத்தக்க தேவர்

    2. வளையாபதி     - 72     பாடல்கள்     தற்போது
                கிடைத்துள்ளன. ஆரிய வைசிய
             புராண
    த்தின் அடிப்படையில்
                அமைந்தது.

    3. குண்டலகேசி     - பௌத்தம் சார்ந்தது.

    4. நீலகேசி      - தமிழின் முதல் தர்க்க நூல்.

                புத்த சமய நூலுக்கு (குண்டலகேசி)
              எதிர்ப்பாகத் தோன்றியது.

                சமண சமய நூல்.


    5. சூளாமணி      - வடமொழியில் ஜினசேனர் எழுதிய
             மகாபுராணத்தின் அடிப்படையில்
              எழுதப் பட்டது.

    6. உதயணகுமார காவியம் - 367 பாடல்களை உடையது.
                உதயணன் வரலாறு கூறும் நூல் இது.  சமண சமயம் சார்ந்த நூல்.

    7. யசோதர காவியம்     - நூலாசிரியர் சமணர்.

    8. நாககுமார காவியம் - சென்னைப்     பல்கலைக்கழகம்
                1973 இல் புலவர் சண்முகத்தைக்
             கொண்டு இந்நூலை வெளியிட்டது.

                நாகபஞ்சமி கதை என்ற பெயர்  உண்டு.

                நாககுமாரனின் கதையைக் கூறும்     காப்பியம் இது.

    9. மேரு மந்தர புராணம் - சமண சமயத்தின் சமய சாரம்              இந்நூல்.

                ஆசிரியர் வாமனாசாரியர்.

                “நல்வினையோ,     தீவினையோ
                நம்மைத் தொடரும்” என்கிறது
                இந்நூல்.


    10. பெரிய புராணம்     - ஆசிரியர் சேக்கிழார்.

                காலம் கி.பி. 12ஆம் நூற்றாண்டு.

                அப்போது சோழ நாட்டை
                ஆண்ட மன்னன் இரண்டாம்
                குலோத்துங்கன்.

                சேக்கிழார் இந்நூலுக்கு இட்ட
                பெயர் திருத்தொண்டர் புராணம்
                என்பதாகும்.

                63 நாயன்மார்கள்,9 தொகையடியார்
                 களின் வரலாறு கூறும் நூல்.

    11. கம்பராமாயணம்
        - ஆசிரியர் கம்பர்.

                தமிழில் தோன்றிய காப்பியங்களுள்
                அளவிற் பெரியது.

                இராமபிரானின் வரலாறு கூறும்
                நூல்.

    12. நளவெண்பா     - ஆசிரியர் புகழேந்தி.

             வியாசபாரதத்தில் வரும் நளன்             பற்றிய கதையைக் கூறுவது.

                வெண்பா யாப்பில் அமைந்தது.

    (4) நாயக்கர் காலம்

        இதைச் சிற்றிலக்கியக் காலமாக அழைக்கலாம்.

        இக்காலத்தில்தான் கோவை, பரணி, பள்ளு, பிள்ளைத்
    தமிழ், குறவஞ்சி போன்ற சிற்றிலக்கியங்கள் தோன்றின.

    • பல்வேறு தமிழறிஞர்களின் கருத்தில் காப்பியக் காலம்
      -ஓர் அறிமுகம்

        எந்தவோர் இலக்கிய வகைமையையும் அறிமுகப்படுத்த அது பிறந்த காலச் சூழலை அறிவது அவசியமாகிறது.

    (1) சி.வை. தாமோதரம் பிள்ளை

        இவர் இதிகாச காலமாகக் கி.பி.350 கி.பி. 1150 என்பதை முன் வைக்கிறார்.

    (2) எம்.சீனிவாச ஐயங்கார்

        Tamil Studies, (1914) என்னும் நூலில் எம்.சீனிவாச ஐயங்கார். ‘Classic Period’ என்ற செவ்வியல் காலமாகக் கி.பி.150 - கி.பி.500 என்பதை    வரையறுக்கிறார். இக்கால கட்டத்தில் சிலப்பதிகாரம், மணிமேகலை தோன்றின என்கிறார்.

    (3) கா.சு. பிள்ளை

        கி.பி. 10ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.13ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தில், சீவகசிந்தாமணி, வளையாபதி உருவாகின என்கிறார்.

    (4) எஸ்.வையாபுரிப் பிள்ளை

        1957இல் வெளியான இவரது காவிய காலம் என்னும் நூல் முற்காவிய காலம் கி.பி.750 - கி.பி.1000 வரை என்று கூறுகிறது. சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி எனும் ஐம்பெருங் காப்பியங்கள் தோன்றிய காலம் இது என்பது இவர் கருத்து

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 22:16:44(இந்திய நேரம்)