12. இளையவன் இவனா?

இளையவன் இவனா?

பாடம்
Lesson


காட்சி - 2

இடம் : அரண்மனை. அரசவை
பங்கேற்போர் : மன்னன் நெடுஞ்செழியன், ஒற்றன், அமைச்சர் மற்றும் பலர்.

 

(மன்னன் பாண்டியன் தனது அரியணையில் அமர்ந்திருக்கின்றான். அரசவை நடந்து கொண்டிருக்கிறது. திடீரென்று பதற்றத்துடன் வாயிற் காப்போன் (காவலன்) வந்து பணிந்து..)

காவலன் : மன்னவ, நமது ஒற்றன் ஒருவன் அவசரச் செய்தி கொண்டு வந்திருக்கின்றான்.
பாண்டியன் :உடன் வரச்சொல்.
காவலன் : உத்தரவு மன்னவ! (வணங்கிப் பின்செல்கிறான்)
ஒற்றன் : (வந்து கொண்டே) வணங்குகிறேன் மன்னவ! அவசரச் செய்தி.
பாண்டியன் : சொல்லுக.
ஒற்றன் : கொற்றவ, நமது பாண்டிய நாட்டைப் போர் மேகம் சூழ்ந்துள்ளது.
பாண்டியன் : (வெகுண்டு) என்ன?
ஒற்றன் : ஆம் மன்னவா, சேரரும், சோழரும், திதியன், எழினி, எருமையூரன், இருங்கோ வேண்மான், பொருநன் ஆகிய குறுநில மன்னர்கள் ஐவரும் ஆக எழுவரும் இணைந்து படையெடுத்து வருகின்றனர்.
பாண்டியன் : (ஆவேசத்தோடு, உடைவாளை இறுகப்பற்றி எழுந்தபடி) அப்படியா?
ஒற்றன் : ஆம் மன்னவா, உடனே எதிர்கொள்ள வேண்டிய பகை மன்னவா. இன்னும்...
பாண்டியன் : இன்னும்..?
ஒற்றன் : சொல்ல என் நெஞ்சம் பதறுகின்றது.
பாண்டியன் : சொல்லுக ஒற்றனே.
ஒற்றன் : எப்படிச் சொல்லுவேன் மன்னவா? அந்தப் பாதகர்கள்..
பாண்டியன் : (சினத்தால் கண்கள் சிவக்க) பாதகர்கள்..
ஒற்றன் : இளையவன் என்று தங்களை இகழ்ந்து.. (சினத்தால் சொல் வரமறுத்து நிற்கிறான்)
பாண்டியன் : இளையவன். இளையவன்.. தென்னகர் மதுரையின் மன்னன் இளையவன்... (படீரென்று உடைவாள் கழற்றி, வான்நோக்கி உயர்த்திப் பிடித்தபடி) இந்த நாட்டின் பெருமையைச் சிறப்பித்துப் பேசுபவர்கள் என்னைப் பார்த்து நகைக்கட்டும்...
அமைச்சர் : (சற்றே பயத்துடன்) மன்னவா?
பாண்டியன் : அமைச்சரே.. அவையோரே நன்குக் கேளுங்கள்... இளையவன் இவன் என்று என்மனம் புண்பட மொழிந்து யானை, குதிரை, தேர்ப்படை, ஆட்படை எனப் பெரும்படை உடையவர்கள் நாம் என்று செருக்குடன் கிளம்பிய அப்பகைவர் எழுவரையும் எதிர்கொண்டு பொருதுவேன். போரிட்டு அவர்களை வெல்வேன்.. இல்லையென்றால்...
அமைச்சர் : உறுதியாய் வெல்வோம் மன்னவா.
பாண்டியன் : இல்லையென்றால்.. கொடியவன் என் மன்னன் என்று என் குடிமக்கள் யாவரும் பழிக்கும் இழிசொல்லுக்கு நான் ஆளாவேன். செங்கோல் தவறிய கொடுங்கோலன் ஆவேன்.
மாங்குடி மருதனார் : (குறுக்கிட்டு) உறுதியாய் வெல்வீர். வெற்றி மங்கை உம்பக்கம். இதில் என்ன ஐயம்?
பாண்டியன் : தண்பாண்டிநாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் ஒப்பற்றத் தலைவரே. தமிழாய்ந்த சான்றீரே. மாங்குடி மருதனாரே...
மாங்குடி மரு : தென்னவா !
பாண்டியன் : முன்னர்ச் சொன்ன சூளுரை நான் பொய்ப்பேன் ஆயின், தங்களது தலைமையிலான தமிழ்ச் சங்கப் புலவர் குழு என்னைப் பாடாது ஒழியட்டும்.
மாங்குடி மரு : வெற்றி உமக்கே உறுதி. மன்னவா ! வாழ்த்துகிறோம் நாங்கள் !
பாண்டியன் : அமைச்சரே
அமைச்சர் : (பணிவுடன்) ஆணை மன்னவா.
பாண்டியன் : தளபதியாரே. ..
தளபதி : நாற்படைகளும் தங்களது ஆணைக்குக் காத்திருக்கின்றன..
பாண்டியன் : போர் முரசு ஒலிக்கட்டும்.. ஊர்க்களங்களில் வீரம் பயின்ற நம் பாண்டிய மக்கள் போர்க்களம் காணட்டும். பகைவர்கள் நம் தீரம் உணரட்டும். வெற்றி நமக்கே. முழங்குக முரசு.. அவை கலையட்டும்...
(போர் முரசு ஒலிக்கிறது.. யானைப்படை கிளம்பும் ஓசையும், காட்சியும். குதிரைப்படை, தேர்ப்படை மற்றும் ஆட்படை அணிவகுப்பும் அவற்றுக்கான ஒலியும் (இசையும்) ஒலிக்கின்றன.).