(மன்னன் பாண்டியன் தனது அரியணையில் அமர்ந்திருக்கின்றான். அரசவை நடந்து கொண்டிருக்கிறது. திடீரென்று பதற்றத்துடன் வாயிற் காப்போன் (காவலன்) வந்து பணிந்து..)
காவலன் |
: மன்னவ, நமது ஒற்றன் ஒருவன் அவசரச் செய்தி கொண்டு
வந்திருக்கின்றான். |
பாண்டியன் |
:உடன் வரச்சொல். |
காவலன் |
: உத்தரவு மன்னவ! (வணங்கிப் பின்செல்கிறான்) |
ஒற்றன் |
: (வந்து கொண்டே) வணங்குகிறேன் மன்னவ! அவசரச் செய்தி. |
பாண்டியன் |
: சொல்லுக. |
ஒற்றன் |
: கொற்றவ, நமது பாண்டிய நாட்டைப் போர் மேகம் சூழ்ந்துள்ளது. |
பாண்டியன் |
: (வெகுண்டு) என்ன? |
ஒற்றன் |
: ஆம் மன்னவா, சேரரும், சோழரும், திதியன், எழினி, எருமையூரன், இருங்கோ வேண்மான், பொருநன் ஆகிய குறுநில மன்னர்கள் ஐவரும் ஆக எழுவரும் இணைந்து படையெடுத்து வருகின்றனர். |
பாண்டியன் |
: (ஆவேசத்தோடு, உடைவாளை இறுகப்பற்றி எழுந்தபடி) அப்படியா? |
ஒற்றன் |
: ஆம் மன்னவா, உடனே எதிர்கொள்ள வேண்டிய பகை மன்னவா. இன்னும்... |
பாண்டியன் |
: இன்னும்..? |
ஒற்றன் |
: சொல்ல என் நெஞ்சம் பதறுகின்றது. |
பாண்டியன் |
: சொல்லுக ஒற்றனே. |
ஒற்றன் |
: எப்படிச் சொல்லுவேன் மன்னவா? அந்தப் பாதகர்கள்.. |
பாண்டியன் |
: (சினத்தால் கண்கள் சிவக்க) பாதகர்கள்.. |
ஒற்றன் |
: இளையவன் என்று தங்களை இகழ்ந்து.. (சினத்தால் சொல் வரமறுத்து நிற்கிறான்) |
பாண்டியன் |
: இளையவன். இளையவன்.. தென்னகர் மதுரையின் மன்னன் இளையவன்... (படீரென்று உடைவாள் கழற்றி, வான்நோக்கி உயர்த்திப் பிடித்தபடி) இந்த நாட்டின் பெருமையைச் சிறப்பித்துப் பேசுபவர்கள் என்னைப் பார்த்து நகைக்கட்டும்... |
அமைச்சர் |
: (சற்றே பயத்துடன்) மன்னவா? |
பாண்டியன் |
: அமைச்சரே.. அவையோரே நன்குக் கேளுங்கள்... இளையவன் இவன் என்று என்மனம் புண்பட மொழிந்து யானை, குதிரை, தேர்ப்படை, ஆட்படை எனப் பெரும்படை உடையவர்கள் நாம் என்று செருக்குடன் கிளம்பிய அப்பகைவர் எழுவரையும் எதிர்கொண்டு பொருதுவேன். போரிட்டு அவர்களை வெல்வேன்.. இல்லையென்றால்... |
அமைச்சர் |
: உறுதியாய் வெல்வோம் மன்னவா. |
பாண்டியன் |
: இல்லையென்றால்.. கொடியவன் என் மன்னன் என்று என் குடிமக்கள் யாவரும் பழிக்கும் இழிசொல்லுக்கு நான் ஆளாவேன். செங்கோல் தவறிய கொடுங்கோலன் ஆவேன். |
மாங்குடி மருதனார் |
: (குறுக்கிட்டு) உறுதியாய் வெல்வீர். வெற்றி மங்கை உம்பக்கம். இதில் என்ன ஐயம்? |
பாண்டியன் |
: தண்பாண்டிநாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் ஒப்பற்றத் தலைவரே. தமிழாய்ந்த சான்றீரே. மாங்குடி மருதனாரே... |
மாங்குடி மரு |
: தென்னவா ! |
பாண்டியன் |
: முன்னர்ச் சொன்ன சூளுரை நான் பொய்ப்பேன் ஆயின், தங்களது தலைமையிலான தமிழ்ச் சங்கப் புலவர் குழு என்னைப் பாடாது ஒழியட்டும். |
மாங்குடி மரு |
: வெற்றி உமக்கே உறுதி. மன்னவா ! வாழ்த்துகிறோம் நாங்கள் ! |
பாண்டியன் |
: அமைச்சரே |
அமைச்சர் |
: (பணிவுடன்) ஆணை மன்னவா. |
பாண்டியன் |
: தளபதியாரே. .. |
தளபதி |
: நாற்படைகளும் தங்களது ஆணைக்குக் காத்திருக்கின்றன.. |
|
 |
பாண்டியன் |
: போர் முரசு ஒலிக்கட்டும்.. ஊர்க்களங்களில் வீரம் பயின்ற நம் பாண்டிய மக்கள் போர்க்களம் காணட்டும். பகைவர்கள் நம் தீரம் உணரட்டும். வெற்றி நமக்கே. முழங்குக முரசு.. அவை கலையட்டும்... |
|
(போர் முரசு ஒலிக்கிறது.. யானைப்படை கிளம்பும் ஓசையும், காட்சியும். குதிரைப்படை, தேர்ப்படை மற்றும் ஆட்படை அணிவகுப்பும்
அவற்றுக்கான ஒலியும் (இசையும்) ஒலிக்கின்றன.). |