தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

2.4 சங்க இலக்கியத்தின் தனிப்பண்புகள்

  • 2.4 சங்க இலக்கியத்தின் தனிப் பண்புகள்

    சங்க இலக்கியங்கள் தனிப்பாடல்களின் தொகுப்புகளாக அமைந்தவை. அரசர் முதல் பலகுடியினரும் புலவர்களாக இருந்துள்ளனர். இவர்களுள் பெண்பாற்புலவர்கள் முப்பதின்மருக்கு மேற்பட்டோராவர். இக்காலச் செய்யுட்கள் யாவும் அகம், புறம் என்ற இரு பகுப்புள் அடங்குவனவாகவும், கடுமையான விதிகட்கு உட்பட்டனவாகவும் அமையும். சங்கப் புலவர்களின் நடையும், கற்பனையும், உத்திகளும் புலவர்க்குப் புலவர் வேறுபடாமல், ஒரு தன்மையான போக்குடையவை. சங்கநடை என்று பொதுவாகக் கூற இடமுண்டே தவிர, கபிலர் நடை, ஒளவையார் நடை என்று பிரித்துக் காண இடமில்லை. சங்கப் புலவர்கள் இயற்கையில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டோர். ஆனால், அவர்கள் இயற்கையைத் தனித்துப் பாடவில்லை. உணர்ச்சிகளை ஆழமாக வெளியிட உதவும் பின்புலமாகவும், குறியீடாகவுமே இயற்கையைப் பயன்படுத்தியுள்ளனர். அன்றைய மக்கள் வாழ்க்கையின் உண்மையான வெளிப்பாடாகச் செய்யுட்கள் அமைவதால், அவை காலக்கண்ணாடியாக விளங்குகின்றன. காலஞ் செல்லச் செல்ல வடசொற் கலப்புத் தமிழில் மிகுந்தது. ஆனால் சங்க இலக்கியத்தில் இரண்டு விழுக்காட்டிற்கு மேல் வடசொற் கலப்பு இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, யாதும் ஊரே யாவரும் கேளிர், செல்வத்துப் பயனே ஈதல், ஈயென இரத்தல் இழிந்தன்று என்பன போலும் எண்ணற்ற வாழ்வியல் உண்மைகட்கு இருப்பிடமாக அவை விளங்குகின்றன.

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 22:53:12(இந்திய நேரம்)