Primary tabs
-
3.4 போர் இலக்கியம்: களவழி நாற்பது
போர்க்கள நிகழ்ச்சிகளை நாற்பது வெண்பாக்களில் வருணித்துப் பாடும் நூல் களவழி நாற்பது. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் புறத்திணை சார்ந்த நூல் இஃது ஒன்றேயாகும்.
ஏரோர் களவழி அன்றிக் களவழித்
தேரோர் தோற்றிய வென்றியும்என்பது தொல்காப்பிய நூற்பா. இது வாகைத்திணையின் உட்பிரிவுகளுள் ஒன்று. ஏர்க்களம் பற்றியும் போர்க்களம் பற்றியும் பாடப்படுவது களவழி என்ற இலக்கிய வகை. கலிங்கத்துப் பரணி முதலியவற்றுள் இடம் பெறும் களம்பாடியது என்பதும் போர் வருணனையே.
களவழி நாற்பதில் உள்ள நாற்பது வெண்பாக்களும் ‘களத்து’ என்று முடிகின்றன. தொல்காப்பியம் கூறும் எட்டு வகை நூல் வனப்புக்களுள் இதுவும் அம்மை என்ற வகையைச் சார்ந்ததே.
- நூலாசிரியர்
இதன் ஆசிரியர் பொய்கையார். சோழன் செங்கணானுக்கும், சேரமான் கணைக்கால் இரும்பொறைக்கும் நடந்த போர் பற்றியது இந்நூல். இப்போரில் சோழன் வென்றான். சேரன் சிறையில் வாடினான். பொய்கையார், இந்நூலைப் பாடிச் சோழனை மகிழ்வித்தார். அதற்குப் பரிசாகச் சேரன் விடுதலையை வேண்டிப் பெற்றார். இது இந்நூல் தோன்றியது குறித்த வரலாறு.
இச்செய்தியைக் கலிங்கத்துப் பரணி, தமிழ்விடுதூது, மூவர் உலா முதலிய நூல்கள் குறிப்பிட்டுள்ளன. மூவர் உலாவில் உள்ள ஒரு கண்ணி,
நல்லவன் பொய்கை களவழி நாற்பதுக்கு
வில்லவன் கால் தளையை விட்டகோன்(வில்லவன் = சேரன்; தளை = விலங்கு)
என்கிறது.களவழிக் கவிதை பொய்கை உரை செய்ய உதியன்
கால்வழித் தளையை வெட்டி அரசு இட்ட அவனும்(உரை செய்ய = பாட; உதியன் = சேரன்)
என்பது, கலிங்கத்துப் பரணி.
- சிறப்புச் செய்திகள்
களவழி நாற்பதில் இப்பொழுது 41 செய்யுட்கள் உள்ளன. மிகையான ஒரு பாட்டுக்கும் பழைய உரை உள்ளது. இந்நூலில் நான்கடி வெண்பாக்களோடு பஃறொடை வெண்பாக்களும் உள்ளன. யானைப் போர் பற்றியே மிகுதியாகப் பாடுகிறது.
அழகிய தேரை அழித்து அதன் சக்கரத்தைத் துதிக்கையால் தூக்கி எழுந்த யானை, மாலைக் கதிரவனை உச்சியிலே கொண்ட மலைபோல் காட்சியளிக்கிறது என்கிறார் பொய்கையார்.
உருவக் கடுந்தேர் முருக்கி மற்று அத்தேர்
பருதி சுமந்து எழுந்த யானை - இருவிசும்பில்
செல்சுடர் சேர்ந்த மலைபோன்ற செங்கண்மால்
புல்லாரை அட்ட களத்து. (4)(முருக்கி = அழித்து; பருதி = சக்கரம்; விசும்பு = ஆகாயம்; செல்சுடர் = மறையப்போகும் சூரியன்)
போர் தொடங்குவதற்கு முன்பு மைக்குன்று போல் தோன்றிய யானை, போர் முடிந்த பின்னர் இங்குலிகக் குன்றம் போல் காட்சியளித்ததாம்.
அஞ்சனக் குன்று ஏய்க்கும் யானை அமர் உழக்கி,
இங்குலிகக் குன்றேபோல் தோன்றுமே (7)(அஞ்சனம் = கண் மை; இங்குலிகம் = செவ் அரக்கு)
வெட்டப்பட்ட யானையின் துதிக்கை குருதி வழியக் காட்சி தருகிறது. இது பவளத்தைச் சொரியும் பை போல் தோன்றுகிறது புலவர்க்கு. (14)
- நூலாசிரியர்