Primary tabs
-
6.0 பாட முன்னுரை
அன்பார்ந்த மாணாக்கர்களே! கி.பி. மூன்றாம் நூற்றாண்டு முதல் ஆறாம் நூற்றாண்டு வரை தமிழ் நாட்டில் நிலவிய அரசியல், சமய, சமூகச் சூழ்நிலைகள் பற்றியும், அக்காலம் பாலி, பிராகிருதம், வடமொழி ஆகியவற்றுக்கு ஆக்கம் அளிப்பதாகவும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு உதவாததாகவும் இருந்தமை பற்றியும் இதற்கு முந்தைய பாடத்தில் கூறப்பட்டன. சமண பௌத்தர்களும், சைவ வைணவரும் தத்தம் சமயக் கருத்துக்களை இலக்கியங்கள் வாயிலாக மக்களிடையே பரப்ப முயன்றனர் என்பதும், சைவ சமய வளர்ச்சிக்கு முன்னோடிகளாகக் காரைக்காலம்மையாரும், திருமூலநாயனாரும் விளங்கி அரிய தமிழ் நூல்களை இயற்றியருளினர் என்பதும் விளக்கப்பட்டன. இதே இருண்டகாலப் பகுதியில் சில வைணவ சமயப் பெரியோர் வாழ்ந்து சமயத் தொண்டும், தமிழ்த் தொண்டும் ஆற்றியுள்ளனர். அவர்கள் முதலாழ்வார்கள் எனப்பட்டனர். பொய்கையாழ்வாரும், பூதத்தாழ்வாரும், பேயாழ்வாருமே முதலாழ்வார்கள் ஆவர். இவர்களின் வரலாறும் இவர்கள் இயற்றிய நூல்களின் சிறப்பும் இப்பாடத்தில் விளக்கப்படுகின்றன.