தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

4-6:1-பெண்மை போற்றும் பாரதியார்

  • 6. 1 பெண்மை போற்றும் பாரதியார்

    மகாகவி பாரதியார் பெண்மை வாழ்க என்றும், பெண்மை வெல்க! என்றும் கூத்தாடியவர்; பெண் விடுதலைக்காகக் கும்மி வடிவில் குரல் கொடுத்தவர்; காற்றே! துன்பக் கேணியிலே எங்கள் பெண்கள் அழுத சொல் மீண்டும் உரையாயோ? என்று பிஜித் தீவில் கரும்புத் தோட்டத்தில் பணிபுரியும் இந்தியப் பெண்களின் அவல நிலையைக் கருணை உள்ளத்தோடு எழுத்தில் வடித்தவர்; புதுமைப் பெண்ணைப் படைத்துத் தம் கவிதையுலகில் உலா வரச் செய்தவர்; பாஞ்சாலி சபதத்திற்கு முதன்மை தந்து ஒரு தனிக்காவியம் படைத்தவர்; பாரத மாதாவுக்கு நவரத்தின மாலையும், திருப்பள்ளியெழுச்சியும், திருத்தசாங்கமும் இயற்றியவர். தமிழ்த் தாயாக இருந்து தம் மக்களை எட்டுத்திக்கும் சென்றிடுமாறும் புதிய சாத்திரம் படைக்குமாறும் ஆணையிட்டவர்; ஸரஸ்வதி, லட்சுமி, மாகாளி, பராசக்தி, முத்துமாரி, கோமதி முதலான பெண் தெய்வங்களின் திருப்புகழைத் தம் தோத்திரப் பாடல்களில் நெஞ்சாரப் போற்றிப் புகழ்ந்தவர்; சுதந்திர தேவியினைத் தொழுது வணங்கியவர்; பாரதி அறுபத்தாறில் பெண் விடுதலை பற்றிப் பேசியவர்; தையலை (தையல்= பெண்) உயர்வு செய்! என்று புதிய ஆத்திசூடி புனைந்தவர்.

    பாப்பாப் பாட்டு வடிவில் சிறு பாப்பாவுக்கும் சீரிய பாடல் ஆக்கித் தந்தவர்; பெண்மை தான் தெய்வீகமாம் காட்சியடா!  என்று குயில் பாட்டில் வியந்து பாடியவர்; கண்ணன் பாட்டில் கண்ணம்மாவைக் கொண்டு வந்து நிறுத்தி, குழந்தையாகவும் காதலியாகவும் குலதெய்வமாகவும் கண்டு களித்தவர்; பூலோக குமாரி, மனப்பெண், கவிதா தேவி,  வள்ளி, அம்மாக் கண்ணு, மனைத்தலைவி ஆகியோருக்காக வகைவகையாகப் பாட்டிசைத்தவர்; வலிமை சேர்ப்பது தாய்முலைப் பாலடா என்றும், மானஞ் சேர்க்கும் மனைவியின் வார்த்தைகள் என்றும் ஒரே பாடலில் அடுத்தடுத்துத் தாயையும் தாரத்தையும் ஒருசேர உயர்த்திக் கூறியவர்; பெண் இனிது எனத் தம் வசன கவிதையிலும் விடாமல் பெண்மைக்குப் புகழாரம் சூட்டியவர். இனி, கவியரசர் பாரதியாரின் படைப்புகளில் கவிதை, கட்டுரை, கதை ஆகியவற்றில் இடம்பெற்றுள்ள பெண்ணியச் சிந்தனைகளைக் காண்போம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:50:50(இந்திய நேரம்)