Primary tabs
இயற்கையை வழிபட்ட பாரதி பராசக்தி, (சக்தி, சிவசக்தி, காளி, தேச முத்துமாரி, கோமதி) கலைமகள், திருமகள், வள்ளி, விநாயகர், கண்ணன், முதலிய தெய்வங்களைக் குறித்துப் பாடியிருக்கிறார். அதைப் பார்ப்போமா?
அழித்தல் தொழிலைச் செய்யும் சிவபெருமானுக்கு ஏற்றார்போல் சக்தியும் வீரமும் அமையப் பெற்றவள் பராசக்தி. பெண் தெய்வ வழிபாடு சங்க காலத்திலேயே தமிழ்நாட்டில் காணப்படுகின்றது. பாலை நிலத்தின் தெய்வம் கொற்றவை. பின்னாலும் அவ்வழக்கம் தொடர்ந்தது. இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த பாரதியும் அதைப் பின்பற்றுகிறார். பெண் தெய்வ வழிபாடு தமிழ் நாட்டில் மிகுந்துள்ளது. பாரதியார் சிறிது காலம் காசியில் இருந்தார் என்பதை அவருடைய வாழ்க்கைச் சித்திரம் பாடத்தில் படித்திருப்பீர்கள். காசியிலும் வங்காளத்திலும் உள்ள மக்கள் காளி வழிபாட்டில் ஈடுபாடு கொண்டவர்கள். அந்தப் பழக்கம் அவருக்கு ஏற்பட்டிருக்க வேண்டும். அதன் விளைவால் அவர் காளி மீது 28 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். ஒளிபடைத்த கண்களும் நெற்றியில் சிவந்த குங்குமமும் கொண்ட பாரதியின் தோற்றமே அவரைக் காளி பக்தனாகக் காட்டும். பராசக்தியை, சிவசக்தி, காளி, கோமதி, முத்துமாரி என்று பல பெயர்களில் வணங்குகிறார். பாரத நாட்டையே பாரத தேவியாகவும் சக்தியாகவும் காண்கிறார்.
சக்தி
எந்தப் பொருளானாலும் தானாக உருவாக முடியாது. அதை உருவாக்கும் காரணகர்த்தா, படைப்பாளி உண்டு. அவர் எல்லாவற்றையும் கடந்தவர், அவரையே கடவுள் என மக்கள் நம்புகின்றனர். ஒரு படைப்பாளிக்கு ஆற்றல் தேவை. அந்த ஆற்றலே சக்தி. அது செயல்படாத நிலை சக்தியாக (Potential energy) அல்லது செயல்படும் இயங்கு சக்தியாக (Kinetic energy) எல்லாப் பொருளிலும் நிறைந்து காணப்படுகிறது. அந்த ஆற்றலைத் தெய்வமாக மதிக்கிறார் பாரதி. இந்த உலகு அனைத்தையும் தோற்றுவிப்பவள் அன்னை அல்லவா? ஆகவே, உலகிலுள்ள தெய்வம் உட்பட அனைத்துப் பொருள்களும் காளியிடமிருந்து பிறப்பதாக எண்ணுகிறார். எல்லாம் அவளுடைய அம்சம் தானே! குழந்தை தனக்கு வேண்டியதை யாரிடம் கேட்கும்? அன்னையிடம். எனவே, தம் பாவங்கள் போகத் தம் உடல், பொருள், ஆவி அனைத்தையும் இறைவனுக்கு அர்ப்பணம் செய்ய விரும்பித் தம் உடல் உறுப்புகள் அனைத்தையும் சக்திக்கு அர்ப்பணம் செய்கிறார்.அவளைச் சரணடைந்தால் கவலை தீரும், துன்பம் நீங்கி இன்பம் பெருகும். சக்தியை வழிபடுங்கள். சொல், செயல், எண்ணம் இவை மூன்றும் சக்தியைப் பற்றியே இருக்க வேண்டும் என்று சக்திக்கு ஆத்ம சமர்ப்பணம் என்னும் பாடலில் சக்தி தனக்கே உரிமையாக்கு என்று பாடுவதைக் காணலாம்.
ஜீவாத்மாவாகிய உயிர் இறுதியில் பரமாத்மாவான இறைவனை அடைய முழு சரணாகதியே சிறந்த வழி என்று நம்பிய பாரதி,
கரணமும் தனுவும் நினக்கெனத் தந்தேன்
(மகாசக்தி பஞ்சகம்)
(கரணம் - மனம், தனு - உடல்)
என்று முழுவதுமாகத் தம்மை அர்ப்பணிக்கிறார்.
தெய்வத்தின் உதவியின்றி மனித முயற்சியால் மட்டுமே எந்தச் செயலையும் செய்ய முடியாது என்பது பாரதியின் எண்ணம். ஆகவே
நல்லதும் தீயதும் செய்திடும் சக்தி
நலத்தை நமக்கிழைப் பாள்
அல்லது நீங்கும் . . . . . .(ஓம் சக்தி - 2)
(அல்லது - துன்பம்)
என்று குறிப்பிடுகிறார்.
மகாபாரதத்தில் திரௌபதி கண்ணனிடம்,
வையகம் காத்திடு வாய் கண்ணா!
மணிவண்ணா என்றன் மனச்சுடரே!
ஐய, நின் பதமலரே - சரண்
ஹரி ஹரி ஹரி ஹரி ஹரி(பாஞ்.சப.299)
என்று முழு சரணாகதி அடைந்த பிறகே அவளுக்குக் கண்ணன் அருள் கிடைத்தது என்பதை நீங்கள் அறிவீர்கள்.
யாதுமாகி நிற்கும் தெய்வம்
காளியாகிய சக்தி உலகில் எல்லா இடங்களிலும் நீக்கமற நிலைத்து, நிறைந்து இருப்பதை,
யாதுமாகி நின்றாய் - காளி! எங்கும் நீநி றைந்தாய்
பூதம் ஐந்தும் ஆனாய் - காளி! பொறிகள் ஐந்தும் ஆனாய்(காளிப்பாட்டு)
என்று பாடுகிறார். நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் ஐந்து பூதங்களும் அவளே. கண், செவி, வாய், மூக்கு, மெய் என்னும் ஐந்து பொறிகளும் அவளே. இவற்றில் இயக்கம் இல்லாவிடில் உலகிலும் உடலிலும் சலனம் இருக்காது. உள்ளுக்குள் இருந்து செயல்படச் செய்பவள் அவளே.
ஒன்றில் பல
பராசக்தி என்ற ஒப்பற்ற சக்தியிடம் பல தெய்வங்களையும், இயற்கையையும் பார்க்கிறார் பாரதி. உருவமும் பெயரும் வேறாக இருந்தாலும் தெய்வம் ஒன்று என்று காட்டுகிறார். தெய்வத்தைப் பல பெயர்களில் குறிப்பிட்டாலும் எந்தப் பெயரில், எந்த வடிவத்தில் மனம் ஒருமுகப்படுகிறதோ அந்தத் தெய்வத்தை மக்கள் வழிபடுகின்றனர். இந்தப் பிரபஞ்சம் (அண்ட சராசரங்கள், அனைத்து உலகமும்) முழுவதும் சக்தி கலந்து ஊடுருவியிருப்பதை,
பரிதி யென்னும் பொருளிடை ஏய்ந்தனை
கரிய மேகத் திரளெனச் செல்லுவை
காலும் மின்னென வந்துயிர் கொல்லுவை
சொரியு நீரெனப் பல்லுயிர் போற்றுவை
வாயு வாகி வெளியை அளந்தனை
(மகாசக்தி வாழ்த்து 3,4)
(பரிதி - சூரியன், ஏய்ந்தனை - பொருந்தினாய், காலும் - பொழியும், வெளி -வானவெளி)
என்னும் பாடல் குறிப்பிடுகிறது.
சக்தியிடம் முருகனையும், சங்கரனையும், கண்ணனையும் காண்கிறார் பாரதி. இதை,
சக்தியென்று புகழ்ந்திடுவோம் முருகன் என்போம்
சங்கரனென்று உரைத்திடுவோம் கண்ணன் என்போம்(பேதை நெஞ்சே - 3)
என்ற பாடல் உணர்த்துகிறது. மேலும், சக்தியை வேதக் கருப்பொருளாய்க் கலைமகளாய்க் (ஓம்சக்தி - 5) காண்பது மட்டுமன்றி, எல்லாவற்றிற்கும் மலோன பரம்பொருளாய், சர்வேஸ்வரியாய்க் காண்கிறார். நவராத்திரி பாட்டில் சர்வேஸ்வரியாம் பரம்பொருளை வாணி, ஸ்ரீ தேவி, பார்வதி ஆகிய மூவராகப் பார்த்துப் பாடுகிறார்,
பின்னாளில் சிறு தெய்வமாக வணங்கப்படும் தேசமுத்து மாரியிடமும் (தேசமுத்துமாரி - 1) சக்தியையே காண்கிறார்.
கல்விக்குத் தெய்வமாகக் கருதப்படுபவள் கலைமகள். படைப்புக் கடவுளான பிரம்மனின் மனைவி. ஒரு படைப்பாளிக்கு மிகுந்த அறிவு தேவை. அதன் அடிப்படையில் பிரம்மன் மனைவியாக விளங்குபவள். கலைமகள் மீது ஸரஸ்வதி ஸ்தோத்திரம், ஸரஸ்வதி தேவியின் புகழ், மூன்று காதல் என்னும் பாடல்கள் பாடியுள்ளார் பாரதியார்.
புண்ணியம் பெறும் வழி
வெள்ளைத் தாமரையில், வீணை செய்யும் ஒலியில், பாவலர் மனத்தில், வேதத்தில், பாட்டில், மக்கள் பேசும் மழலையில் (சரஸ்வதி தேவியின் புகழ் 1,2) கலைமகள் இருப்பதாக விளக்கியுள்ள பாரதி, புண்ணியம் என்னும் கல்வியறிவைப் பெறும் வழியைக் காட்டுகிறார்.
பூமணித் தாளினையே கண்ணிலொற்றிப்
புண்ணிய மெய்திடுவோம்(ஆறுதுணை - 4)
‘புண்ணியம்’ என்று அவர் நினைப்பது கல்வியை எனக் கொள்ளலாம்.
கவிதை இயற்றக் கல்வியறிவு தேவை, அந்த அறிவைப் பெற விரும்பும் பாரதி, ஒரு கணப் (விநாடி) பொழுதும் கலைமகளைப் பிரிய விரும்பவில்லை. கலைமகளிடம்
எங்ஙனம் சென்றிருந்தீர் - என
தின்னுயரே! யென்றன் இசையமுதே!(ஸரஸ்வதி ஸ்தோத்திரம் - 1)
என்று கேட்ட பாரதி,
பாதங்கள் போற்று கின்றேன் - என்றன்
பாவ மெலாங் கெட்டு ஞானகங்கை
நாதமொடு எப்பொழுதும் - என்றன்
நாவினி லேபொழிந் திடவேண்டும்(ஸரஸ்வதி ஸ்தோத்திரம் - 2)
என்று வேண்டுகிறார். ஞானம் வந்து விட்டால் அகந்தை கெடும். எனவே ஞானம் வேண்டுகிறார்.
தொழில் கல்வி
கற்றவர்க்கும் கல்லாதவர்க்கும் தெய்வமாகத் திகழ்பவள் கலைமகள். கொல்லர், தச்சர், வணிகர் ஆகியோருக்கும் தெய்வமாக விளங்குகிறாள். ஏட்டுக் கல்வி மட்டுமல்லாமல் தொழில் கல்விக்கும் அவளே துணை என்று காட்டுகிறார் பாரதி. ஏட்டுக்கல்வி, மற்றும் ஏட்டுக் கொள்கை இவை மட்டுமே அறிவு என்று கருதும் அறியாமையைச் சாடுகிறார். தொழில் கல்வியைப் போற்றுகிறார். வெள்ளையர் ஆட்சியில் இந்திய நாட்டுக் கைத்தொழில்கள் நலிவடைந்ததால் அவற்றைப் புத்துயிர் பெறச் செய்யும் நோக்கில் அவர் இவ்வாறு பாடியிருக்கலாம்.
கலைமகளை வழிபடும் விதம்
மந்திரம் சொல்லி புத்தகங்களை வரிசையாக அடுக்கி வைத்து வழிபடுவது கலைமகள் பூசை அல்ல என்று கண்டிக்கிற பாரதி, அவளை முறையாக வழிபடுவது எங்ஙனம் என்று தெளிவுபடுத்துகிறார். அறியாமையில் மூழ்கிக் கிடக்கும் மக்கள் மனத்தில் அறிவுத் தீயை ஏற்றுகிறார். எனவே
மந்திரத்தை முணுமுணுத்து ஏட்டை
வரிசையாக அடுக்கி அதன்மேல்
சந்தனத்தை மலரை யிடுவோர்
சாத்தி ரமிவள் பூசனை யன்றாம்(ஸரஸ்வதி தேவியின் புகழ் - 5)
என்று கலைமகளை வழிபடும் விதத்தைக் கண்டிக்கிறார். பின் எது தான் முறையான பூசை? இதோ அவரது விளக்கம்:
வீடு தோறும் கலையின் விளக்கம்
வீதி தோறும் இரண்டொரு பள்ளி
நாடு முற்றிலும் உள்ளன வூர்கள்
நகர்கள் எங்கும் பலபல பள்ளி
தேடு கல்வியி லாததொரு ஊரைத்
தீயி னுக்கிரை யாக மடுத்தல்(ஸரஸ்வதி தேவியின் புகழ் - 5)
(விளக்கம் - இருப்பிடம், மடுத்தல் - மூட்டுதல், அழித்தல்)
ஏடுகளை அடுக்கி வைத்து இன்னமுது படையலிட்டால் அறிவு வளராது, அறியாமை நீங்காது. அறிவு வளர வீடுகளிலும் வீதிகளிலும் கல்வி முழக்கம் செழிக்க வேண்டும். கல்வியில்லாத ஊரைத் தீக்கிரையாக்க வேண்டுமென்று சினந்து கூறுகிறார் பாரதி. ஊரையும் நாட்டையும் அழிக்கச் சொல்வது அவர் நோக்கமல்ல.
கலைமகளின் ஒளி பாரத நாட்டில் மட்டுமல்லாது யவனம், சீனம், பாரசீகம் போன்ற அயல் நாடுகளிலும் பரவவேண்டுமென்று பாரதி விரும்புகின்றார். (சரஸ்வதி தேவியின் புகழ் - 7) மக்கள் அனைவரும் கலைமகள் அருள் பெற்றால் அக இருள் நீங்கி அறிவு பெருகும். அப்போது உலகில் ஒற்றுமை ஓங்கும் அல்லவா?
புண்ணியம் கோடி
ஓர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் எல்லாத் தானங்களையும் விடச் சிறந்தது. அதனால் கோடி புண்ணியம் கிடைக்கும் என்று எழுத்தறிவு கொடுக்கத் தூண்டுகிறார். தூண்டல் (stimulus) வலிமை பெற்றால் துலங்கல் (response) பொலிவு பெறும் அல்லவா?
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறி வித்தல்(வெள்ளைத்தாமரை - 9)
அந்தச் செயலை நடைமுறையில் கொண்டு வர மக்களிடம் நிதி கேட்கிறார், நிதி கொடுக்க முடியாதவர்களிடம் உழைப்பைக் கேட்கிறார், அதுவும் செய்ய இயலாதவர் அது குறித்துப் பிறரிடம் பேச வேண்டும் என்கிறார். இவ்வாறு அவர் கூறுவு எதையும் கொடுத்து எழுத்தறிவு பெறச் செய்ய வேண்டும் என்னும் உறுதிப்பாடு, அனைவருக்கும் கட்டாயக் கல்வி அளிக்க வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் இருந்ததையே காட்டுகிறது. இது கடவுளை வணங்கும் பார்வையாக இல்லாமல் அதன் வழிக் கல்வி கற்பிக்கும் புத்திப் பார்வையாக விளங்குகிறது. மேலும் ‘உழைப்பினை நல்கீர்’ (வெள்ளைத்தாமரை - 10) என்ற பாடல் அடி செயல் செய்வதைச் சுட்டும் கர்மயோகப் பார்வையாக அமைந்துள்ளது.
பெண்கல்வி பெருக வேண்டும் என்னும் நோக்கில்,
தேமொழி மாதர்க ளெல்லாம்
வாணிபூசைக் குரியன பேசீர்(ஸரஸ்வதி தேவியின் புகழ் - 10)
(வாணி = கலைமகள்)
என்று பாடியிருக்கிறார். பெண்கள் கல்வியில் ஈடுபாடு கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறார். ஓர் ஆண் கல்வி கற்றால் அவன் மட்டும் பயனடைவான். ஆனால், ஒரு பெண் கல்வி கற்றால் அந்தக் குடும்பமே பயனடையும். இவ்வாறு பாரதியின் பார்வை வெறும் பக்திப் பார்வையாக இல்லாமல் புத்திப் பார்வையாக, கர்மயோகப் பார்வையாக விளங்குகிறது.
திருமகள் காக்கும் கடவுளான திருமாலின் மனைவி. செல்வத்திற்கு அதிபதி. உயிர்களைக் காக்கப் பொருள் தேவை. ஆகவே, காக்கும் கடவுளாம் திருமாலுக்கு மனைவியாகத் திருமகள் விளங்குகிறாள் எனக் கொள்ளலாம்.
திருமகளைப் பற்றிப் பாரதியார் லக்ஷ்மி தேவி சரண் புகுதல், லக்ஷ்மி பிரார்த்தனை, ஸ்ரீ தேவி ஸ்துதி, திருக்காதல், மூன்று காதல் என்னும் தலைப்புகளில் பாடியுள்ளார்.
இருப்பிடம்
இலக்குமியின் இருப்பிடம் திருமாலின் மார்பு என்று கூறுவர். ஆனால் பாரதி அவள் திருமால் மார்பில் மட்டுமல்லாது வீரர் தோள், கன்னியர் நகை, காடு, சோலை, மன்னர் முகம் முதலிய இடங்களில் இருப்பதாகப் பாடி யிருப்பது புதுமையாக உள்ளது. (லக்ஷ்மி தேவி - சரண் புகுதல் - 4)
மேலும் பாரதி,
செல்வம் எட்டும் எய்தி - நின்னாற்
செம்மையுற வாழ்வேன்(இலக்குமி பிரார்த்தனை - 5)
என்று பாடுவது இலக்குமியிடம் பொருள் பெற்றுச் சிறப்பாக வாழ வேண்டும். அவர் நம்பியதைக் காட்டுகிறது. இல்லாமை என்னும் கொடுமை உலகில் யாருக்கும் ஏற்படக் கூடாது, எல்லோரும் எல்லாம் பெற்று வாழ வேண்டும் என்ற எண்ணத்தில்,
இல்லை என்ற கொடுமை உலகில்
இல்லையாக வைப்பேன்
எல்லையற்ற சுவையே எனை நீ
என்றும் வாழ வைப்பாய்(இலக்குமி பிரார்த்தனை - 5)
என்று ஒரு கவிஞனுக்கே உரிய தன்னம்பிக்கையுடன் கேட்கின்றார். எல்லோரும் எல்லாம் பெற்று எப்படி வாழ முடியும் என்ற அவநம்பிக்கை, சோர்வு வாதம் (pessimism) அவரிடம் எழவில்லை. எதிலும் நல்லார்வ நலமே (optimism) ஓங்கி நிற்கிறது.