தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

1.2 சிற்றிலக்கியப் பாகுபாடுகள்

  • 1.2 சிற்றிலக்கியப் பாகுபாடுகள்

    தமிழ்மொழியில் காணப்படும் சிற்றிலக்கியங்கள் அவற்றின் அமைப்பு, பாடுபொருள், யாப்பு முதலியனவற்றை அடிப்படையாகக் கொண்டு பாகுபாடு செய்யலாம். அவை பற்றி இனிக் காணலாம்.

    1.2.1 பொருள் அடிப்படைப் பாகுபாடு

    சிற்றிலக்கியங்களில் இடம்பெறும் பொருளை அடிப்படையாகக் கொண்டு அகப்பொருள் சார்பு உடைய சிற்றிலக்கியங்கள், புறப் பொருள் சார்பு உடைய சிற்றிலக்கியங்கள், துதிப்பொருள் சார்பு உடைய சிற்றிலக்கியங்கள், தத்துவப்பொருள் சார்பு உடைய சிற்றிலக்கியங்கள், நீதிப்பொருள் சார்பு உடைய சிற்றிலக்கியங்கள் என்று வகைப்படுத்தலாம். இதனைப் பின்வரும் வரைபடம் மூலம் நீங்கள் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

    TVU-c01231d2

    1.2.2 எண்ணிக்கை அடிப்படைப் பாகுபாடு

    சிற்றிலக்கிய வகைகளில் இடம்பெறும் பாடல்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டும் சிற்றிலக்கியங்களைப் பாகுபாடு செய்யலாம். சான்றுகளாகச் சிலவற்றைப் பார்ப்போமா?

    ஐந்து பாடல்களைக் கொண்டு சில சிற்றிலக்கிய வகைகள் காணப்படுகின்றன. சான்றாகப் பஞ்சகம் என்ற சிற்றிலக்கிய வகையைக் கூறலாம். சில சிற்றிலக்கிய வகைகள் பத்துப் பாடல்களைக் கொண்டு விளங்குகின்றன. சான்றுகளாகப் பத்து, பதிகம் என்ற சிற்றிலக்கிய வகைகளைக் காட்டலாம். வேறு சில சிற்றிலக்கிய வகைகள் நூறு பாடல்களைக் கொண்டு விளங்குகின்றன. சான்றாகச் சதகம் என்ற சிற்றிலக்கிய வகையைக் கூறலாம்.

    1.2.3 யாப்பு அடிப்படைப் பாகுபாடு

    சில சிற்றிலக்கிய வகைகளை அவை இயற்றப்பட்ட யாப்பு வகைகளின் அடிப்படையில் பாகுபாடு செய்யும் நிலையும் உள்ளது. சான்றுகளாக ஊர் நேரிசை, ஊர் வெண்பா, அரசன் விருத்தம், பெயர் இன்னிசை ஆகிய இலக்கிய வகைகளைக் கூறலாம். பாட்டுடைத் தலைவனின் ஊரின் சிறப்பை நேரிசை வெண்பாக்களால் பாடுவது ஊர் நேரிசை என்ற இலக்கிய வகை ஆகும். பொது நிலையில் ஓர் ஊரின் சிறப்புகளை வெண்பாக்களால் புகழ்ந்து பாடுவது ஊர் வெண்பா என்ற இலக்கிய வகை ஆகும். அரசனின் சிறப்புகளை விருத்தப்பா வகையால் பாடுவது அரசன் விருத்தம் என்ற இலக்கிய வகை ஆகும். பாட்டுடைத் தலைவனின் ஊர்ச் சிறப்பை இன்னிசைவெண்பாவால் புகழ்ந்து பாடும் இலக்கிய வகை ஊர் இன்னிசை எனப்படும்.

    1.2.4 சொல்முடிவு அடிப்படைப் பாகுபாடு

    சிற்றிலக்கிய நூல்களின் பெயர்கள் எந்தச் சொல்லை இறுதியில் பெற்றுள்ளன என்பதை அடிப்படையாகக் கொண்டும் சிற்றிலக்கியங்கள் வகைப்படுத்தப்படுகின்றன. சான்றுகளாகச் சிலவற்றைக் காண்போமா?

    இரட்டை மணிமாலை, மும்மணிமாலை, நான்மணி மாலை போன்ற சிற்றிலக்கிய வகைகள் இறுதியில் மாலை என்ற சொல்லைப் பெற்று முடிகின்றன. எனவே, இவை மாலை இலக்கிய வகைகள் என்று வகைப்படுத்தப்படுகின்றன.

    வாயுறை வாழ்த்து, புறநிலை வாழ்த்து, இயன்மொழி வாழ்த்து என்பதை வாழ்த்து என்ற சொல்லை இறுதியில் பெற்றுள்ளன. எனவே, இவை வாழ்த்து வகைச் சிற்றிலக்கியங்கள் என்று பாகுபாடு செய்யப்படுகின்றன.

    கண்படை நிலை, துயில் எடை நிலை, விளக்கு நிலை என்பன. இறுதியில் நிலை என்ற சொல்லைக் கொண்டுள்ளன. எனவே, இவை நிலை இலக்கிய வகைகள் என்ற பாகுபாட்டுள் அடக்கப் படுகின்றன.

    1.2.5 நாட்டுப்புற இலக்கிய அடிப்படைப் பாகுபாடு

    அம்மானை, ஊசல், தாலாட்டு, பள்ளு, குறவஞ்சி, குறம் முதலியவை நாட்டுப்புற இலக்கியங்கள் ஆகும். இந்த இலக்கியங்களைப் பற்றி நீங்கள் பின்னால் வரும் பாடங்களின் மூலம் விளக்கமாக அறிந்து கொள்ளலாம். இத்தகைய நாட்டுப்புற இலக்கியங்களின் அடிப்படையில் இயற்றப்படும் சிற்றிலக்கியங்களைத் தனி ஒரு வகையாக வகைப்படுத்தலாம்.

    1.2.6 உறுப்புகள் அடிப்படைப் பாகுபாடு

    கடவுளர், ஆடவர், பெண்கள் முதலியோரின் உறுப்புகளைப் புகழ்ந்து பாடும் நோக்கில் இயற்றப்பட்டன. சிற்றிலக்கியங்களை உறுப்புகள் அடிப்படைப் பாகுபாடு என்ற வகையில் அடக்கலாம். சான்றுகளாகச் சிலவற்றைப் பார்ப்போமா?

    பெண்களின் மார்பைப் புகழ்ந்து பாடும் இலக்கிய வகை பயோதரப்பத்து என்று அழைக்கப்படுகின்றது. பயோதரம் என்றால் மார்பு என்று பொருள். பெண்களின் கண்களைப் புகழ்ந்து பாடும் இலக்கிய வகை நயனப்பத்து என்று அழைக்கப்படுகிறது. நயனம் என்றால் கண் என்று பொருள். இறைவனைப் பற்றிப் பாடும்போது பாதாதி கேச வருணனையும், மனிதர்களைப் பற்றிப் பாடும்போது கேசாதிபாத வருணனையும் மரபாகப் பின்பற்றப்படுகிறது.

    இதைப் போன்று உறுப்புகளைப் பாதம் முதல் தலை வரை புகழ்ந்து பாடும் இலக்கிய வகை பாதாதிகேசம் எனப்படுகிறது. தலை முதல் பாதம் வரை உள்ள உறுப்புகளைப் புகழ்ந்து பாடும் இலக்கியவகை கேசாதிபாதம் எனப்படுகிறது. கேசம் என்றால் தலை என்று பொருள்.

    1.2.7 இசை அடிப்படைப் பாகுபாடு

    குறிப்பிட்ட சில இசை வகைகளை அடிப்படையாகக் கொண்டும் சில இலக்கியங்கள் இயற்றப்படுகின்றன. அவற்றை இசை அடிப்படைப் பாகுபாடு என்ற வகையுள் அடக்கலாம். சான்றுகளாகக் கும்மி, சிந்து, தெம்மாங்கு போன்ற இலக்கிய வகைகளைக் குறிப்பிடலாம்.

    1.2.8 தொழில் அடிப்படைப் பாகுபாடு

    குறிப்பிட்ட சில தொழில்களைச் செய்பவர்கள் அத்தொழில் களைச் செய்யும்போது பாடல்கள் பாடுவர், உழைப்பின் கடுமை தெரியாமல் இருக்க அவர்கள் பாடும் பாடல்களைத் தொழில் பாடல்கள் என்று கூறலாம். இத்தகைய தொழில் பாடல்களை அடிப்படையாகக் கொண்டும் சில வகை இலக்கியங்கள் தோன்றி உள்ளன. அவற்றைத் தொழில் அடிப்படைப் பாகுபாட்டில் கொண்டு வரலாம்.

    சான்றுகளாக வண்ணப்பாட்டு, ஓடப்பாட்டு, வண்டிக்காரன் பாட்டு போன்ற சிற்றிலக்கிய வகைகளைக் குறிப்பிடலாம்.

    இதுவரை நீங்கள் அறிமுகப்படுத்திக் கொண்ட சிற்றிலக்கிய வகைகளைப் பின்வரும் அட்டவணை மூலம் மீண்டும் நினைவுபடுத்திக் கொள்கிறீர்களா?


புதுப்பிக்கபட்ட நாள் : 09-08-2017 18:04:50(இந்திய நேரம்)