தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

மூவர் உலா

  • 4.2 மூவர் உலா

    ஒட்டக் கூத்தர் இயற்றிய உலாக்கள் மூன்று.

    1) விக்கிரம சோழன் உலா
    2) குலோத்துங்க சோழன் உலா
    3) இராசராச சோழன் உலா

    இம்மூன்றும் பாட்டன், தந்தை, மகன் ஆகிய மூவரையும் பாடுவன. மூவரைப் பாடுவதால் மூவர் உலா என்ற பெயரையும் பெற்றது.

    4.2.1 இராசராச சோழன் உலா

    இராசராச சோழன் உலா சிறந்த கவிநயம் வாய்ந்த பாடல்களை உடையது. இப்பாடல்கள் 'கண்ணி' என்று கூறப்படும். (கண்ணி = இரண்டு அடிகள் கொண்டது.) நண்பர்களே! இராசராச சோழன் உலா பற்றி நாம் விரிவாகத் தெரிந்து கொள்ளலாம்)

    4.2.2 நூலாசிரியர்

    இந்நூலை இயற்றியவர் கவிச் சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் ஆவார். கவிச் சக்கரவர்த்தி என்ற தொடர் கல்வெட்டு மூலம் தெரிய வருகின்றது. (ஏ. ஆர் எண். 109, 110 & 1027, 8). ஒட்டக்கூத்தர் குலோத்துங்கன் மீது பிள்ளைத்தமிழ் பாடி உள்ளார். அரிசில் ஆற்றங்கரை மீது உள்ளது கூத்தனூர் என்பது. இவ்வூர் ஒட்டக்கூத்தர் புலமைக்காகச் சோழர்கள் வழங்கியது என்பர்.

    ஒட்டக்கூத்தர் இராசராசசோழன் உலாவைப் பாடி அரங்கேற்றம் செய்தார். ஒவ்வொரு கண்ணியும் அரங்கேறும் போது ஓராயிரம் பொன் மன்னன் வழங்கி உள்ளான். இக்கொடையைச் சங்கர சோழன் உலாவும் தமிழ் விடு தூதும் விவரித்துள்ளன.

    ஒட்டக்கூத்தர், விக்கிரமசோழன் காலத்தில் அவைப் புலவராக இருந்துள்ளார். தொடர்ந்து அவன் மகன் குலோத்துங்கன் காலத்திலும் அவன் மகன் இராசராசன் காலத்திலும் அவைப்புலவராக இருந்துள்ளார். இம்மூவர் காலத்தைக் கி.பி. 1118-1173 வரை வரையறை செய்வர்.

    4.2.3 பாட்டுடைத் தலைவன்

    இரண்டாம் குலோத்துங்க சோழனுடைய மகனே இராசராசசோழன் ஆவான். இவனே இவ்வுலாவின் தலைவன். தக்கயாகப் பரணி உருவாகக் காரணம் ஆனவனும் இவனே. இவன் கி.பி. 1146-இல் அரசு கட்டில் ஏறியுள்ளான். இவனுக்குப் பல பட்டப் பெயர்கள் உண்டு. சோழேந்திர சிம்மன், கண்டன், இராச கம்பீரன், திரிபுவனச் சக்கரவர்த்தி முதலியன.

    இவன் காலத்தில் கும்பகோணத்திற்கு அடுத்துள்ள தாராசுரத்தில் சிவன் கோயில் ஒன்று கட்டப்பட்டது. இக்கோயில் சிற்பங்களால் புகழ் பெற்றுத் திகழ்கின்றது. தாராசுரம் சோழர் காலத்தில் இராஜராஜபுரம் என்று அழைக்கப்படடது. இக்கோயிலில் நாயன்மார் அறுபத்து மூவர் உருவங்கள் சிற்பங்களாக உள்ளன. ஒட்டக்கூத்தர் சிலையும் உள்ளது.

    4.2.4 இலக்கியச் சிறப்புகள்

    இராசராசசோழன் உலாவும் அமைப்பு வகையில் இரு பிரிவாக உள்ளது.

    1)
    பாட்டுடைத் தலைவனின் சிறப்புகள் பற்றிய செய்திகள் முதலில் கூறப்படுகின்றன.
    2)
    தலைவன் உலாப் போகும் காலத்தில் ஏழு பருவ மகளிரின் காதல் செயல்கள் அடுத்து இடம் பெறுகின்றன.

    நண்பர்களே! இவற்றைப் பற்றி விரிவாக நாம் பார்ப்போம்.

    • பாட்டுடைத் தலைவனின் முன்னோர்கள்

    இந்த உலாவில் இராசராசசோழனுடைய முன்னோர்களின் புகழ் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. அவற்றை இனிக் காண்போம்.

    ஒரு புறாவின் துன்பத்தைப் போக்குவதற்காகத் தன் தசையை அரிந்து தராசுத் தட்டில் இட்டவன் இவனது முன்னோன் ஆவான்.

    வானோர் பகைவனாகிய சம்பரன் என்ற அசுரனை அழித்துத் தேவர்களைக் காத்தவன் இவன் முன்னோன்.

    மேல் கடலும் கீழ்க்கடலும் காவிரியால் ஒன்றாகிக் கலக்குமாறு இடையில் உள்ள மலைகளை எல்லாம் வெட்டியவன்.

    ஆதிசேடனுடைய மகளாகிய நாகர் கன்னியை மணம் புரிந்து கொண்டவன்.

    தெய்வத்தன்மை வாய்ந்தது மேருமலை. இம்மலையில் புலிக்கொடி பறக்குமாறு செய்தவன்.

    பொய்கையார் எனும் புலவர் களவழி நாற்பது எனும் நூலைப் பாடினார். அந்நூலுக்காகச் சேரன் ஒருவனின் கால் விலங்கை நீக்கியவன்.

    போர்க்களம் சென்று போர்புரிந்து கொண்டே இருந்ததால் 96 விழுப்புண்களைத் தன் உடம்பில் பெற்றவன்.

    மதயானைகளால் பதினெட்டுப் பாலை நிலங்களையும் அழித்தவன். உதகை என்ற ஊரினை எரித்தவன்.

    கங்கை, நருமதை, கௌதமி, காவிரி முதலிய ஆறுகளுக்குச் சென்று தன் மனைவியுடன் நீராடியவன்.

    கொப்பம் எனும் ஊரில் பெரும்போர் நிகழ்ந்தது. யானைகள் பலவற்றைப் பேய்கள் உண்டு மகிழ்ந்தன. இதனால் ஒப்பற்ற பரணி நூலைப் பெற்றவன்.

    நாட்டில் உண்டாகிய கலகத்தை நீக்கியவன்; சுங்க வரியைத் தவிர்த்தவன், வறுமையை விரட்டியவன்.

    தில்லைக் கோயிலைப் பொன்னால் வேய்ந்தவன். தில்லையின் சிற்றம்பலம் - பேரம்பலம் - மண்டபங்கள் - கோபுரங்கள் முதலியவற்றைப் பொன்னால் செய்தவன்.

    தில்லைக் கோயிலில் இருந்த திருமால் மூர்த்தியை எடுத்துக் கடலில் மூழ்கச் செய்தவன்.

    (இராச.உலா. கண்ணி. 1-67)

    இவ்வாறாக இராசராசசோழனின் முன்னோர்களின் புகழ்மிக்க செயல்கள் கூறப்பட்டுள்ளன. இத்தகு புகழ்மிக்க குலத்தில் தோன்றியவன் இராசராசன் என்று ஒட்டக்கூத்தர் விவரிக்கிறார்.

    • பாட்டுடைத் தலைவன் சிறப்புகள்

    பாட்டுடைத் தலைவனின் சிறப்புகள் அடுத்துக் கூறப்பட்டுள்ளன.

    மங்கலமான இராசராசன் என்ற பெயரை உடையவன். சூரிய குலத்தில் தோன்றியவன். திருமால் பத்து அவதாரங்களைச் செய்தார். என்றாலும் தேவர் பகை முழுவதையும் தொலைக்க முடியவில்லை. எனவே எஞ்சிய தேவர் பகையைத் தொலைக்கச் சூரிய குலத்தில் இராசராசனாகப் பிறந்துள்ளான் என்பர்.

    மனிதகுலத்தில் பிறந்து மேருமலை போன்ற உயர்ந்த புகழினை உடையவன். ஏழ்ஏழ் பதினான்கு உலகையும் வென்று தன் கீழ் வருமாறு செய்தவன். சக்கரப் படையை உடைய கண்ணன். சூரியனையும் குளிர வைக்கும் குளிர்ச்சி பொருந்திய வெண்கொற்றக் குடையை உடையவன். சூரிய குலத்திற்குத் திலகம் போன்றவன். இதனைப் பின்வரும் பாடல்அடி விவரிக்கிறது.

    திருமகன் சீராசராசன் கதிரோன்
    மருமகனாகி மறித்தும் திருநெடுமால்
    ஆதிப் பிறவி அனைத்தினும் உம்பர்க்குப்
    பாதிப் பகை கடிந்து பாதிக்கு மேதினியில்
    செந்தாமரையாள் திருமார்பில் வீற்றிருக்க
    வந்தான் மனு வம்ச மாமேரு.

    (இராச.உலா.கண்ணி. 67-72)

    (கதிரோன் = சூரியன், நெடுமால் = திருமால், உம்பர் = தேவர், மேதினி = உலகு, செந்தாமரையாள் = திருமகள்)

    இவ்வாறாகப் பாட்டுடைத் தலைவனின் சிறப்புகள் இவ்வுலா நூலில் கூறப் பெற்று உள்ளன.

    • மக்களின் மகிழ்வான பேச்சு

    பாட்டுடைத் தலைவன் வீதியில் உலாப் போகிறான். அவனைக் காண ஆயிரக்கணக்கானோர் வீதியில் கூடி உள்ளனர். தலைவனின் அழகைப் பார்க்கின்றனர். அவனைப் பாராட்டிப் பேசுகின்றனர்.

    நங்கையீரே! இந்திரனது வச்சிரப்படையை (ஒரு போர்க்கருவி) அழித்த வில்லின் அழகைப் பாருங்கள். பெரிய கடலானது வற்றுமாறு அம்பு விடுத்த வில்லினைப் பாருங்கள்.. சோழ நாட்டு மக்கள் நல்வாழ்வு வாழக் காவிரி ஆறு செல்வதற்கு மலைகளை வெட்டி வழிவிட்ட வாள் ஆயுதத்தைப் பாருங்கள். சந்திரனை வென்று மேகத்தை அகற்றித் தூங்கெயில் எனும் மதிலை அழித்த வாள் படையைப் பாருங்கள் என்று மக்கள் தம்முள் பேசிக் கொள்கின்றனர்.

    இதனைத்

    தற்கோடி ஓரிரண்டு கொண்டு சதகோடி
    கற்கோடி சென்ற சிலைகாணீர் - முற்கோலி

    வட்ட மகோததி வேவ ஒருவாளி
    விட்ட திருக்கொற்ற வில்காணீர் - வெட்டிச்

    சுழியிட்ட காவிரிக்குச் சோணாடு - வாழ
    வழிவிட்ட வாள்காண வாரீர் - ஒழிய

    மதியெறிந்து வல்லேற்று வான்எறிந்து தூங்கும்
    பதியெறிந்த கொற்றவாள் பாரீர்

    (இராச.உலா. 165-172)

    (கோடி = முனை; வில்முனை, சதகோடி = நூறு முனைகளுடைய வச்சிராயுதம், மகோததி = கடல், சிலை = வில், வாளி = அம்பு, தூங்கும்பதி = தூங்கும் எயில்(மதில்), சோணாடு = சோழநாடு)

    என்று புலவர் பாடுகின்றார்.

    சேரர்களின் வஞ்சி நகரத்தை வென்று திறையாகப் பெற்ற முரசத்தைப் பாருங்கள். போரில் தோற்ற மன்னர்கள் பின்னர்த் தம் நாட்டைப் பெற்றுக் கொண்டனர். இதற்காக அம்மன்னர்கள் தலையில் மண் சுமந்து காவிரி அணையைக் கட்டினர். அவ்வாறு கட்டச் செய்த போர் முரசத்தைப் பாருங்கள். இருபத்தொரு தலைமுறை அரசர்களைக் கொன்று அவர் சூடிய முடிகளைக் கொண்ட மகுடத்தைக் காணுங்கள் என்று மக்கள் பேசுகின்றனர். இதனைப் பின்வரும் அடிகள் விவரிக்கும்:

    ...............................................................உதியர்
    இடப்புண்ட பேர்இஞ்சி வஞ்சியில் இட்ட
    கடப்ப முதுமுரசம் காணீர் - கொடுப்பத்

    தரை கொண்ட வேற்று அரசர் தம்சென்னிப் பொன்னிக்
    கரை கண்ட போர்முரசம் காணீர்.

    (இராச.உலா. 173-177)

    (இஞ்சி = மதில், வஞ்சி = சேரர் நகர், முது = பழைய / தொன்மையான, சென்னி = தலை, பொன்னி = காவிரி)

    இவ்வாறாக மக்கள் பாட்டுடைத் தலைவனைப் பலவாறு புகழ்ந்து பேசுவதாகப் புலவர் பாடி உள்ளார். இப்புகழ் மொழிகள் பாட்டுடைத் தலைவனின் முன்னோர் செயல்களாக இருப்பதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

    • வணங்கினாள் பேதைப் பெண்

    பேதைப் பருவம் உடைய பெண்மகள் ஒருத்தி, மன்னனைக் கண்டு பணியும் நிகழ்ச்சியைப் புலவர் நயம்பட விவரித்து உள்ளார். இப்பகுதியில் முதலில் பேதைப் பருவமகளின் இளம் பருவம் கூறப்பட்டுள்ளது. பேதைப் பெண் எப்படிப்பட்டவள்?

    அண்மையில் பிறந்த கிளிக்குஞ்சு போன்றவள். தாய்ப்பாலை அண்மையில் மறந்த இளமான் போன்றவள். தோகை வளராத மயில் போன்றவள். சுற்றத்தார்க்கு மகிழ்ச்சி உண்டாக்கும் கரும்பு போன்றவள். முல்லை மாலை போன்ற பற்களை உடையவள். இது எம்முடைய பாவை; இது எம்முடைய கொல்லிப்பாவை என்று கூறிப் பாவைப் பாட்டுப் பாடும் விதம் அறிந்தவள் என இப்பருவமகளின் இளம் பருவம் வருணிக்கப்படுகிறது. இதனைப் பின்வரும் அடிகள் விவரிக்கும்.

    பிறந்தணிய கிள்ளை பெறாத் தாயர் கொங்கை
    மறந்தணிய செவ்விமடமான் - புறந்தணியத்

    தோகை தொடாமஞ்ஞை தோற்றத்தால் சுற்றத்தார்க்கு
    உவகை விளைக்கும் ஒரு கரும்பு - பாகைத்

    தொடை போய முல்லைத் தொடையலே போல
    இடை போய தூய எயிற்றாள்

    (இராச.உலா. 231-236)

    (கிள்ளை = கிளி, மஞ்ஞை = மயில், தொடைபோய = தொடுக்கப்பட்ட, தொடையல் = மாலை, எயிறு = பல்)

    இத்தகைய பேதைப் பருவ மகள், உலா வரும் மன்னனைக் காண விரைகின்றாள். கோடிக் கணக்கான மாதர்களோடு தானும் பின் தொடர்ந்து ஓடுகின்றாள். மற்றவர் காணும் வேட்கை கண்டு தணிய, தானும் தணிகிறாள். சுற்றத்தாரும் பிறரும் பணியக் கண்டு தானும் பணிகிறாள், மன்னன் மார்பில் அணிந்துள்ள ஆத்தி மாலையைக் காணுகிறாள். பட்டத்து யானையைப் பார்க்கிறாள். கோரம் என்ற பட்டத்துக் குதிரையையும் பார்க்கிறாள். கும்பிட்டாள். மன்னனுடைய கொடியில் தீட்டிய புலி உருவம் பார்த்து மயங்கினாள், இதனைப் பின்வரும் அடிகள் விளக்கும்.

    ....................................பலகோடித்
    தோகைய ரோடத் தொடர்ந்து ஓடி-தாகம்
    தணியத் தணியத் தமரும் பிறரும்

    பணியப் பணியப் பணிந்தாள் - மணிமார்பில்
    ஆரந்தான் கண்டாள் அயிரா வதம் தொழுதாள்

    கோரம் தெரியவும் கும்பிட்டாள் - வீரன்
    படாகைப் பெரும் புலியும் பார்த்து ஒழிந்தாள்

    (இராச.உலா. 256-262)

    (தோகையர் = மகளிர், தமர் = சுற்றத்தார், ஆரம் = மாலை, அயிராவதம் = பட்டத்துயானை, கோரம் = பட்டத்துக் குதிரை, படாகை = கொடி)

    இவ்வாறாகப் பேதைப் பருவ மகளின் செயல்கள் விவரிக்கப் பட்டுள்ளன. பேதைப்பருவம் மிகவும் இளம்பருவம். எனவே காமச் செயல்கள் எதுவும் புனைவது வழக்கம் இல்லை.

    • மங்கை மன மயக்கம்

    உலா வரும் தலைவனைக் கண்டு மங்கைப் பருவ மாது ஒருத்தி மயக்கம் கொள்கிறாள். இதனை ஆசிரியர் நயம்படப் புனைந்துள்ளார். மங்கையின் எழில் வருணனை முதலில் இடம் பெறுகிறது.

    மங்கை முத்துகளைப் பதித்தது போன்ற பல் வரிசைகளை உடையவள்; பொன் மலையில் பிறந்த வயிரம் போன்றவள்; நாகலோக மன்னனது மணி முடியில் வெளிப்பட்ட நாக மணியை ஒத்தவள்; திருமாலாகிய சோழனைக் கூடுவதற்காகச் சோழநாட்டில் வந்து பிறந்த திருமகள்; இதனைப் புலப்படுத்தும் பாடல் அடிகள்.

    நிலையிற் சிறந்த நிகரிலா மேரு
    மலையிற் பிறந்த வயிரம் - தொழத்தகும்
    முன்னை உலகம் முழுதும் தரும்முரக
    மன்னன் அபிடேக மாணிக்கம் - முன்னவன்
    பாற்கடல் நீங்கு நாள்நீங்கிப் பழம்படியே
    நாற்கடல் நாயகனை நண்ணுவாள்

    (இராச.உலா. 349-356)

    (மேரு = மலை, உரக மன்னன் = நாகர் உலகத்து மன்னன், அபிடேகம் = மன்னன் திருமுடி, முன்னவன் = முதல்வன், நண்ணுதல் = பொருந்துதல்)

    மேலும் மங்கையின் சிறப்பினைப் புலவர் புலப்படுத்துகிறார். அன்னப் பெடையின் ஒலியோ என்று எண்ணுமாறு ஒலிக்கும் மழலையை உடையவள்; நாகமணியைக் கோத்து அணியும் அரைக் கச்சினை உடையவள்; குபேரனது சங்கநிதியில் (குபேரனது நிதிகளில் ஒன்று) தோன்றிய முத்துமாலையை அணிந்தவள்; அவனது பதும நிதியில் தோன்றிய நவமணிகள் (ஒன்பது மணிகள்) பதித்த வளை அணிந்தவள்.

    இத்தகைய மங்கைப் பருவத்தாளைச் சூழ்ந்து பாணரும் விறலியும் சோழனது புகார் நகரச் சிறப்பினைப் பாடுகின்றனர்.

    அந்தச் சமயத்தில் மாது ஒருத்தி விரைந்து வந்து தலைவியே! கங்கைத் துறைவனும் பொறையனும் தமிழ் நாடனும் ஆகிய இராசராசன் நாளை பவனி வருகிறான் என்று கூறினாள்.

    உடனே மங்கை மிகவும் மகிழ்ந்து உலாவைக் காண்பதற்கு விரும்பினாள். ஆனால் உலா மறுநாள் என்பதால் இரவுப் பொழுது தடையாக நின்றது. இதற்காக வருந்தினாள். (இராசராச. 357-382)

    மன்னனைக் காண முடியாமல் மங்கை மதி மயங்கினாள்.

    மங்கையர்க்குப் பகைவனான நிலவை வேண்டாமல் சோழனது குலமுதல்வனாகிய சூரியனின் ஒளி தன் மீது பட விரும்பினாள்.

    காதலர் உயிரைக் கொல்லும் பொதியமலைத் தென்றலை வெறுத்தாள்; புலிக்கொடி பறக்கும் பொன்மலையிலிருந்து வரும் வாடைக்காற்றை விரும்பினாள்.

    தனக்கு எதிராகப் போர் செய்ய வரும் கடல் ஒலி அடங்க விரும்பினாள்; தன் தலைவனாகிய திருமால் பள்ளி கொண்ட பாற்கடலை விரும்பினாள்.

    மழையை விரும்பிப் பாடிக் கூவும் வானம்பாடிப் பறவைக்கு, நஞ்சை ஊட்டித் தலைவன் பெயரைப் பாடும் பறவைக்கு அமுதத்தை ஊட்ட வேண்டினாள். இரவுப் பொழுதை யுகமாக நீளச்செய்யும் குயிலை விரட்ட வேண்டினாள். விடியலைக் கூவி அழைக்கும் கோழியை விரும்பினாள்.

    இவ்வாறாக மங்கையாகிய தலைவி இரவுப்பொழுதைக் கழித்தாள். இதனைப் பின்வரும் அடிகள் விவரிக்கும்.

    தென் மலயத் தென்றலை ஓட்டிப் புலி இருந்த
    பொன் மலய வாடாய் புகுதென்னும் - முன்மலையும்
    கார்க்கடல் வாய்அடங்க நாயகன் கண்வளர்ந்த
    பாற்கடல் வாராய் பரந்து என்னும் - மேற்பரந்து
    கார் பாடும் புள்வாய்க் கடுப்பெய்து அமுது இறைவன்
    பேர் பாடும் புள்வாயிற் பெய்க என்னும் -

    (இராச.உலா. 385-390)

    (தென்மலயம் = பொதியமலை, வாடை = காற்று, கார்க்கடல் = கரிய நிறக்கடல், கார் பாடும் புள் = வானம்பாடி, கடு = நஞ்சு)

    இவ்வாறு இரவு முழுவதும் காதல் நோயினால் வாடிய தலைவி பொழுது விடிந்ததும் மன்னனை வரவேற்கத் தயார் ஆனாள். மலர்ச் சோலைக்குச் சென்று மலர் பறித்து எடுத்து வந்தாள்.

    • மன்னனின் உலா

    தலைவியும் மலர்களைப் பறித்துச் சோலையில் இருந்து வெளிப்பட்ட போதே மன்னனும் உலா வந்தான். மகளிரும் மங்கை நல்லாளும் எதிரே நின்று மலர்களைத் தூவினர்; கையில் மலர்களைக் கொடுத்தனர். பருவம் அல்லாத காலத்திலும் மலர்ந்த மலர்களைக் கண்டு பரிசிலாக அவன் ஏற்றுக் கொண்டான். மங்கையின் அரிய பட்டாடையும் சேலையும் வளையலும் மேகலை மணியும் மன்னனைக் கவர்ந்தன. பலமுறை மங்கையையே நோக்கி நின்றான். மங்கை இதனைக் கண்டு நாணினாள். மன்னன் மணி முடியையும் பட்டத்து யானையையும் பதினான்கு உலகத்தையும் மங்கைக்கே கொடுப்பவன் போலப் பலமுறை பார்த்துப் பின்பு அவளை விட்டு நீங்கினான்.

    இலகும் சுடர்முடியும் யானையும் ஈர்ஏழ்
    உலகும் கொடுப்பானே ஒப்பப் - பலகால்

    கொடாத திருநோக்கம் முற்றும் கொடுத்து
    விடாது களிறு அகல விட்டான்.

    (இராசராச. 427-430)

    (ஈர்ஏழ் = பதினான்கு, நோக்கம் = பார்வை, களிறு = யானை)

    இவ்வாறாக மன்னன் உலாப் போகும் காலத்தில் மங்கைப் பருவத்தாள் காம நிகழ்ச்சிகளைப் புலவர் சுவைபடப் புனைந்துள்ளதைப் படித்து மகிழலாம்.

    • திருமகள் போன்றவள்

    மன்னன் உலாப் போகும் காலத்தில் பேரிளம்பெண் ஒருத்தியின் மனநிலையை ஆசிரியர் புனைந்துரைத்துள்ளார்.

    இத்தலைவி பவனி வரும் சோழ மன்னனை நேர் நின்று நோக்கினாள். பரந்த விழிகளின் வெண்மை சிவப்பு நிறமாக மாறியது. அவள் நெற்றித்திலகம் குறு வியர்வையால் மறைந்தது. அவளது மழலைச் சொற்கள் தடுமாற்றம் அடைந்தன. மனத்தெளிவு மன மயக்கமாக மாறியது. நாணம் தொலைந்தது. கூந்தலாகிய மேகம் அவிழ்ந்து தொங்கியது. இதனைப் பின்வரும் வரிகள் விவரிக்கும்.

    கண்டனை மேதினியாள் காந்தனை வந்துய்யக்
    கொண்டனை என்று குறுகுவாள் - கண்டு
    மலர்க்கண் வெளுப்புச் சிவப்பூர மற்றத்
    திலகம் குறுவியரால் தேம்ப - பல குதலை
    மாற்றம் தடுமாற்றம் எய்த மனத்துள்ள
    தேற்றம்பித் தேற்றம் சிதைவிப்ப -ஏற்று
    துகில் அசைந்து நாணும் தொலைய....

    (இராச.உலா. 717-723)

    (கண்டன் = சோழனுடைய பட்டப்பெயர், மேதினியாள் = திருமகள், காந்தன் = கணவன், குறுகுவாள் = நெருங்குவாள், திலகம் = நெற்றிப்பொட்டு, வியர் = வியர்வை, குதலை = மழலை, தேம்ப = மறைய, பித்தேற்றம் = மயக்கம், துகில்= உடை)

    இவ்வாறாக மன்னனைக் கண்ட பேரிளம் பெண்ணின் நிலையைப் புலவர் கூறியுள்ளதை அறியலாம்.

    • பேரிளம் பெண்ணின் காதல்

    உலா வரும் சோழ மன்னனை நேருக்கு நேர் நின்று பேரிளம் பெண் வேண்டுகோள் விடுக்கிறாள். தம்மை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டுகிறாள். தங்களின் நிலையை விவரிக்கிறாள்.

    ''தலைவனே! குளிர்ச்சி இல்லாத நிலவு எங்களுடையது. உண்மையை அறியாத மயக்க உணர்ச்சியை உடையோம். விடியல் பொழுதையே அறியாத இரவினை உடையோம். நீங்காத காதலை உடையோம். ஓரிடத்திலும் தங்காத மேகலை அணியை உடையோம். கொங்கையினை இறுக்கி நில்லாத கச்சினை உடையோம்... மனத்தாலும் நினைப்பதற்கு அரிய பெருமையை உடையவன் நீ. ஆதலால் எங்கள் விண்ணப்பத்தையும் நீ ஏற்றுக் கொள்ள வேண்டும்'' என்று வேண்டுகிறாள். இவ்வாறு பேரிளம் பெண் கூறியது கேட்டு மன்னன் சிறுநகை செய்தான். பின்பு முத்துமாலை முதலான பல்வேறு அணி மணிகளும் அவளுக்குத் தர ஏவலர்க்கு ஆணை இட்டான். ஆனாலும் அவள் அவற்றை ஏற்காமல் காதல் துயரால் வாடிச் செவிலியர் மீது மயங்கி வீழ்ந்தாள்.

    இவ்வாறாக மன்னன் மீது ஏழ்பருவ மகளிரும் மயக்கம் கொண்டு நிலை தடுமாறப் பதினான்கு உலகத்தையும் உடையவன் உலாச் சென்றான்.

    பேதை முதலாகப் பேரிளம் பெண் ஈறாக
    மாதர் மனம்கொள்ளா மால்கொள்ளச் - சோதி

    இலகுடையான் கொற்றக் குடை நிழற்ற ஈர்ஏழ்
    உலகுடையான் போந்தான் உலா.

    (இராச.உலா. 779-782)

    (மாதர் = பெண்கள், மால் = மயக்கம், சோதி = ஒளி, சோதி இலகுடையான் = திருமால்)

    நண்பர்களே! இதுவரையும் இராசராசசோழன் உலாவில் இருந்து சில காட்சிகளை அறிந்து இருப்பீர்கள். மீண்டும் அக்காட்சிகளை நினைவுபடுத்திப் பாருங்கள்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 18-09-2017 10:19:18(இந்திய நேரம்)