தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தமிழின் பெருமை

  • 3.4 தமிழின் பெருமை

    தமிழ்மொழிமீதும், தமிழ்நாட்டின்மீதும் மிகுந்த பற்றுக்கொண்ட மக்கள் பலர் தங்கள் பெயர்களிலேயே தமிழைத் தாங்கித் தமிழ்நாட்டில் வாழ்ந்தனர் என்பதைக் கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் காணுகின்றோம். தமிழுக்குச் சிறப்புமிக்க அடைமொழிகளைக் கொடுத்தே அவர்கள் தமிழ்மொழியைக் குறித்துள்ளனர் என்ற செய்திகளையும் காணுகின்றோம்.

    3.4.1 அடைமொழிகளும் பெயர்களும்

    பராந்தக வீரநாராயணன் என்ற பாண்டிய மன்னனின் தளவாய்புரச் செப்பேட்டில் பல இடங்களில் தமிழ், சிறப்பு அடையுடன் குறிக்கப்பட்டுள்ளது.

    ‘அருந்தமிழின் பாத்தொகுப்பின் பயன் உணர்வோன்
    ‘திருமலி சாசனம் இதற்குச் செழுந்தமிழ் பாடினோன்
    ‘சீர்மிகு செப்பேட்டினுக்குச் செந்தமிழில் பாத்தொடை தொடுத்தோன்
    ‘வண்டமிழ்க்கோன் அதிகாரி
                                     (தளவாய்புரச் செப்பேடு)

    என்பன தளவாய்புரச் செப்பேட்டில் காணும் தொடர்கள். இச்செப்பேடு ஆரியம் விராய்த் தமிழ் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. (ஆரியம் விராய் - டமொழி கலந்து) இதன் தமிழ்ப் பகுதியைப் பாடியவன் பெயர் ‘பாண்டித் தமிழாபரணன்‘ என்பதாகும்.

    பிற்காலப் பல்லவ மரபினன் கோப்பெருஞ்சிங்கனைக் கல்வெட்டுப் பாடல் ஒன்று ‘பேணு செந்தமிழ் வாழப் பிறந்தவன்’ என்று புகழ்கிறது. தமிழின் பெருமையும் சிறப்பும் இதன்மூலம் தெரிகிறது.

புதுப்பிக்கபட்ட நாள் : 11-08-2017 12:37:18(இந்திய நேரம்)