Primary tabs
-
6.3 நில வருணனை
குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல், முல்லை ஆகிய ஐந்து நில வருணனைகளும் இந்நூலில் அமைந்துள்ளன.
நெடிது உயர்ந்த மலை நிலங்களுக்குத் தலைவன் நல்லியக்கோடன். இவனைக் குறிஞ்சிக் கோமான் என்று குறிப்பிடுகிறது சிறுபாணாற்றுப்படை.
தொண்டை மண்டலக் குறிஞ்சி நிலத்தைப் பேரழகு வாய்ந்த பெண்ணாகப் புலவர் வருணிக்கிறார். அம்மலையில் வளரும் மூங்கிலை அவளது அழகிய தோள்களுக்கு ஒப்பிடுகிறார். மலைவீழ் அருவியை அந்த நிலப்பெண் அணிந்துள்ள முத்தாரமாகக் கற்பனை செய்கிறார்.
பெண்கள் அகில் புகை ஊட்டுவதற்காகத் தம் கருநிறக் கூந்தலை விரித்து நின்றமை அம்மலையில் வாழும் மயில்கள் கார் கால மேகம் கண்டு தோகை விரித்து ஆடுவது போன்று இருந்தது.
கார் காலத்தில் பெய்த மழைநீர் உயர்ந்த மலையினின்றும் அருவியாகக் கீழ் நோக்கி வேகமாக வீழ்கிறது. அந்நீரின் வேகத்தால் பாறைகள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்கின்றன. அதனால் அப்பாறைகள் உடைந்தும் சிதைந்தும் நுண்மணலாகிப் போகின்றன. இங்ஙனம் உருவான மணல் முல்லை நிலப்பரப்பில் மணல் படுகையாகக் கிடக்கிறது.
இத்தகைய மணல் படுகை சுழல் காற்றின் சுழற்சிக்கு உட்பட்டு அலை அலையாய்ப் படிந்து கிடக்கும் காட்சி நிலமகளின் கூந்தல் நெளி நெளியாக இருப்பதை ஒத்து இருக்கிறது.
இம் மணல் வெயில் கால வெப்பத்தை மிகுதியாக ஏற்றுக்கொண்டு கொல்லன் உலைக்கல்லில் சூடேற்றிய இரும்பு போலக் கொதிக்கிறதாம். இது,
கதுப்பு விரித்தன்ன காழ்அக நுணங்குஅறல்
அயில்உருப்பு அனைய ஆகி ஐதுநடந்து
வெயில்உருப் புற்ற வெம்பரல் கிழிப்ப
வேனில் நின்ற வெம்பத வழிநாள்
காலை ஞாயிற்றுக் கதிர்கடா வுறுப்ப
பாலை நின்ற பாலை நெடுவழிச்
சுரன்முதல் மராஅத்த வரிநிழல் அசைஇ(சிறுபாணாற்றுப்படை - 6-12)
என்று வருணிக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.
சோழ நாட்டின் மருத நில வளத்தைக் கூறும் சிறுபாணாற்றுப்படை, நறுநீர்ப் பொய்கை ஒன்றை வருணனை செய்கிறது.
நறுநீர்ப் பொய்கை ஓவியம் போன்று உள்ளது. இப்பொய்கையின் கரைகளில் கடப்ப மரங்கள் செழித்து வளர்ந்துள்ளன. இம்மரங்களில் இருந்து பூக்கள் கொத்துக் கொத்தாகப் பூமாலைகள் போல் தொங்குகின்றன. இம்மலர்களில் இருந்து இந்திர கோபத்தை ஒத்த மகரந்தப் பொடிகள் பொய்கை எங்கும் வீழ்கின்றன. இப்பொடிகளின் இடைவிடாத தூறலால் முகிழ்த்த தாமரை மொட்டுகள் கட்டவிழ்ந்து திறந்து கொள்கின்றன. இதனால் தாமரையின் பொகுட்டுகள் வெளிப்படுகின்றன. அப்பொகுட்டின் மீது வண்டினங்கள் தங்கள் பெண் இன வண்டுகளைத் தழுவியவாறே சீகாமரப் பண்ணைப் பாடிக் கொண்டே மொய்க்கின்றன. இவ்வழகிய வருணனை சிறுபாணாற்றுப்படையின் 68 முதல் 78 வரையிலான அடிகளில் காணப்படுகிறது.
நெய்தல் நிலம் எங்கும் தாழைப் புதர்கள் மண்டிக் கிடக்கின்றன. அச்செடிகள், பருத்துத் தோன்றும் வெண்மையான பூக்கள் பலவற்றைப் பூத்திருக்கின்றன. அத்தோற்றம் அன்னப் பறவைகள் பல அங்கே அமர்ந்து இருப்பது போன்று காட்சியளிக்கிறது.
இளவேனில் பொழுதில் நன்கு செழித்து வளரக் கூடிய நெய்தல் நிலச் செருந்தி, கண்டார் வியக்கும் வகையில் பொன் நிறத்தில் பூத்துக் கிடக்கிறது. கழிமுள்ளிச் செடிகள், உப்பங்கழிகள் தோறும் பரந்து வளர்ந்திருக்கின்றன. அவற்றில் இருந்து பூக்கள் கொத்துக் கொத்தாகக் கருநிற மணிகள் போன்று பூத்துள்ளன.
கடற்கரையில் நெடிது உயர்ந்து நிற்கும் புன்னை மரங்கள் முத்துகள் போல அரும்புகளை அந்நிலம் முழுவதும் உதிர்த்து வைத்திருக்கின்றன. புலவனின் கற்பனையில் உதித்த அடிகள் இதோ:
அலைநீர்த் தாழை அன்னம் பூப்பவும்
தலைநாள் செருந்தி தமனியம் மருட்டவும்
கடுஞ்சூல் முண்டகம் கதிர்மணி காஅலவும்
நெடுங்கால் புன்னை நித்திலம் வைப்பவும்
கானல் வெண்மணல் கடல்உலாய் நிமிர்தரப்
பாடல் சான்ற நெய்தல் நெடுவழி.(சிறுபாணாற்றுப்படை, 146-151)
பசுமையான அவரைக் கொடிகள் பவளம் போன்று அரும்புகளைத் தொடுத்திருக்கின்றன. காயாம் புதர்கள் மயிலின் கழுத்து நிறம் போன்று கருநிறப் பூக்களுடன் பூத்துக் கிடக்கின்றன. முசுண்டைச் செடிகள் ஓலைப் பெட்டிகளைப் போன்ற பூக்களுடன் காட்சி அளிக்கின்றன. கைவிரல்கள் விரித்ததைப் போன்று காந்தள் மலர்கள் பூத்துள்ளன. முல்லைக் காடென முல்லைப் பூக்களும் பூத்துச் சிரிக்கின்றன.
இங்ஙனம் சிறுபாணாற்றுப்படையில் குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல், முல்லை ஆகிய ஐவகை நிலங்களும் அழகிய முறையில் வர்ணிக்கப் பட்டுள்ளன.
பைந்நனை அவரை பவழம் கோப்பவும்
கருநனைக் காயா கணமயில் அவிழவும்
கொழுங்கொடி முசுண்டை கொட்டம் கொள்ளவும்
செழுங்குலைக் காந்தள் கைவிரல் பூப்பவும்
கொல்லை நெடுவழிக் கோபம் ஊரவும்
முல்லை சான்ற முல்லையம் புறவின் . . ..(அடிகள் 164-169)