Primary tabs
4.1 வஞ்சித் திணையும் துறைகளும்
வஞ்சித் திணை என்பதன் விளக்கத்தையும் அதன் துறைகளையும் பற்றி இனிப் பார்ப்போம்.
வஞ்சித் திணை - வஞ்சி ஒழுக்கம். வஞ்சிப் பூவை அணிந்து கொண்டு நிகழ்த்தலின், இப்பெயர் பெற்றது.
- கொளுப் பொருளும் கொளுவும்
வாடுதல் இல்லாத வஞ்சிப்பூ மாலையை ஒர் அரசன் தன் தலையில் சூடிப் பகைவருடைய நிலத்தைக் கைப்பற்றுவது குறித்தது வஞ்சித் திணை எனப்படும்.
வாடாவஞ்சி தலைமலைந்து
கூடார்மண் கொளல்குறித்தன்று(கூடார் = பகைவர்)
எடுத்துக்காட்டு வெண்பா
செங்கண் மழவிடையின் தண்டிச் சிலைமறவர்
வெங்கள் மகிழ்ந்து விழவுஅமர - அங்குழைய
வஞ்சி வணங்கார் வணக்கிய வண்டார்ப்பக்
குஞ்சி மலைந்தான்எம் கோ- வெண்பாவின் கருத்து
மறவர்கள் வில்விழாவாம் போரை விரும்பினார்கள். விரும்பவும், அவர்களுடைய மன்னன் வணங்காத பகைவரை வணங்கப் பண்ண வஞ்சி மாலையைச் சூடினான். அஃதாவது, பகைநாட்டின் மேல் போர் அறிவித்தான் என்பதாம்.
- துறைப் பொருத்தம்
வணங்காதாரை வணக்க வஞ்சி வேந்தன் வஞ்சி மாலையைச் சூடினான்; மறவர் போரை விரும்பினர் என்பவற்றில் துறைப் பொருள் பொதிந்துள்ளதை அறிகின்றோம். துறை பொருந்துமாறும் புலனாகின்றது.
வஞ்சி அரவம், குடை நிலை, வாள் நிலை, கொற்றவை நிலை, கொற்ற வஞ்சி, கொற்ற வள்ளை, பேராண் வஞ்சி, மாராய வஞ்சி, நெடுமொழி வஞ்சி, முதுமொழி வஞ்சி, உழபுல வஞ்சி, மழபுல வஞ்சி, கொடை வஞ்சி, குறுவஞ்சி, ஒருதனி நிலை, தழிஞ்சி, பாசறை, பெருவஞ்சி, பெருஞ்சோற்று நிலை, நல்லிசை வஞ்சி என்னும் இருபதும் வஞ்சித் திணைத் துறைகள் ஆகும் என்பர் ஐயனாரிதனார்.
வாடா வஞ்சி, வஞ்சி அரவம்
கூடார்ப் பிணிக்கும் குடைநிலை, வாள்நிலை,
கொற்றவை நிலையே, கொற்ற வஞ்சி,
குற்றமில் சிறப்பின் கொற்ற வள்ளை,
பேராண் வஞ்சி, மாராய வஞ்சி,
நெடுமொழி வஞ்சி, முதுமொழி வஞ்சி,
உழபுல வஞ்சி, மழபுல வஞ்சி,
கொடையின் வஞ்சி, குறுவஞ் சிய்யே,
ஒருதனி நிலையொடு, தழிஞ்சி, பாசறை,
பெருவஞ் சிய்யே, பெருஞ்சோற்று நிலையொடு,
நல்லிசை வஞ்சியென நாட்டினர் தொகுத்த
எஞ்சாச் சீர்த்தி இருபத் தொன்றும்
வஞ்சியும் வஞ்சித் துறையும் ஆகும்- (புறப்.வெண்.மாலை , சூ-3)இந்நூற்பா வஞ்சித் திணையையும் சேர்த்து இருபத்தொன்று என்று கணக்கிடுகிறது.
வஞ்சித் திணையுள் இருபது துறைகள் (நிகழ்வுகள்) இடம் பெறுகின்றன. இவற்றைப் போருக்கு முன்னர், போரின் பின்னர் எனப் பிரிக்கலாம்.