தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

வஞ்சிமன்னன் சிறப்புகள்

  • 4.3 வஞ்சிமன்னன் சிறப்புகள்

    வஞ்சி மன்னன் சிறப்பைக் கூறும் சில துறைகளைப் பார்க்கலாம்.

    4.3.1 கொற்றவஞ்சி

    கொற்றம் - வெற்றி. வஞ்சி வேந்தன் வாள் போரினால் மிக்க செய்தியை (வெற்றியை)ச் சொல்வது ஆதலின் கொற்ற வஞ்சி என்னும் பெயர் பெற்றது.

    • கொளுப் பொருளும் கொளுவும்

    உலகவர் தன்னை வணங்கும்படியாக வாளாலே பகைவரை எறிந்தனன் என்று வீரக்கழல் அணிந்த வஞ்சிவேந்தனின் பெருமையைச் சொல்லுவது கொற்ற வஞ்சி என்னும் துறையாகும்.

    வையகம் வணங்க வாளோச் சினன்எனச்
    செய்கழல் வேந்தன் சீர்மிகுத் தன்று

    4.3.2 கொற்றவள்ளை

    கொற்றம் - வெற்றி ; வள்ளை - உரல் பாட்டு. பாடும் வள்ளையுள் வேந்தன் புகழையும் பகைவர் நாட்டழிவையும் வைத்துப் பாடுவர். ஆகலான், கொற்றவள்ளை எனப் பெற்றது.

    • கொளுப் பொருளும் கொளுவும்

    வஞ்சி வேந்தனின் சீர்த்தியை (சிறப்பை) எடுத்தோதி, அதே சமயத்தில் பகைவர் நாடு அழிந்தமைக்கும் வருந்துவது, கொற்றவள்ளை என்னும் துறையின் பொருளாகும்.

    மன்னவன் புகழ்கிளந்து
    ஒன்னார்நாடு அழிபுஇரங்கின்று

    (அழிபு = அழிவு)

    4.3.3 பேராண் வஞ்சி

    பெருமை + ஆண்மை = பேராண்மை. பகைவர்தம் வீரத்தை மதியாத ஆண்மையினர்க்கு அரசன் சிறப்புச் செய்வது பேராண் வஞ்சி எனப் பெற்றது.

    • கொளுப் பொருளும் கொளுவும்

    நண்பினர் அல்லாத பகைவரது போர்முனையைத் தொலைத்த (அழித்த) தலைமைத் தன்மையுடைய வஞ்சி மறவர்க்கு அரசன் சிறப்பு வழங்கியதைச் சொல்லுவது, பேராண் வஞ்சி ஆகும்.

    கேள்அல்லார் முனைகெடுத்த
    மீளியார்க்கு மிகஉய்த்தன்று.

    (கேள் அல்லார் = பகைவர் ; மீளியார் = மறவர்)

    • எடுத்துக்காட்டு வெண்பா
    பலிபெறு நன்னகரும் பள்ளி இடனும்
    ஒலிகெழு நான்மறையோர் இல்லும் - நலிவுஒரீஇப்
    புல்லார் இரியப் பொருதார் முனைகெடுத்த
    வில்லார்க்கு அருள்சுரந்தான் வேந்து.

    கோயில், பள்ளியிடம், வேதம் ஓதும் அந்தணர் இல்லம் ஆகியன அழிவுக்குள்ளாகாதபடி பாதுகாத்தும் பகைவர் இரிந்து (சிதறி) ஓடும்படி போர் புரிந்தும் சிறந்த வஞ்சி மறவர்க்கு அவர்கள் மன்னன் மிக்க அருளைப் பொழிந்தான் என்று எடுத்துக்காட்டு வெண்பா கூறுகிறது.

    • இதுவும் அது (பேராண் வஞ்சி)

    வஞ்சி மன்னன் திறையை ஏற்றுக் கொண்டு போரினைக் கைவிட்டு, தன் நாடு திரும்புதலும் பேராண் வஞ்சி எனப் பெறும்.

    • கொளுப் பொருளும் கொளுவும்

    பெறற்கரிய திறைப் பொருளைப் பகைமன்னன் முகந்து கொடுக்கக் கோபம் தணிந்த வஞ்சிவேந்தன், அவனைத் தன் மறத்தால் மேலும் வருத்தாமல், போர்க்களத்தினின்றும் தன் நாட்டிற்கு மீண்டு போதலும் பேராண் வஞ்சித் துறை என்பார்கள்.

    அருந்திறை அளப்ப ஆறிய சினத்தோடு
    பெரும்பூண் மன்னவன் பெயர்தலும் அதுவே

    4.3.4 மாராய வஞ்சி

    அரசனால் செய்யப் பெறும் சிறப்பு மாராயம் எனப்படும். வீரர்களுக்கு வஞ்சிப் போரில் செய்யும் மாராயம் கருதி மாராய வஞ்சி எனப் பெயர் பெற்றது.

    • கொளுப் பொருளும் கொளுவும்

    வஞ்சி வேந்தன் தறுகண்மை உடையவன். அவனால் சிறப்புச் செய்யப் பெற்றார்கள் வஞ்சி மறவர்கள். இம்மறவர்கள் வெற்றிக்குக் காரணமான வேற்படையைக் கையில் கொண்டவர்கள். இவர்களுடைய மாண்பினை எடுத்துரைப்பது, மாராய வஞ்சி என்னும் துறையாம்.

    மறவேந்தனின் சிறப்பெய்திய
    விறல்வேலோர் நிலைஉரைத்தன்று
    • எடுத்துக்காட்டு வெண்பாவின் கருத்து

    வஞ்சி மன்னன் சினந்து பார்த்த போர் முனையை அவனுடைய மறவர்கள் தாக்கினர். தாக்கிய போரில் பகைவரது வேலை ஏற்ற வஞ்சி மறவர்களின் மார்புகள் வஞ்சி மன்னன் வழங்கிய முத்துமாலையைச் சூடிக் கொண்டன.

புதுப்பிக்கபட்ட நாள் : 06-11-2017 16:24:54(இந்திய நேரம்)