தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

3.4 பாவேந்தரின் பார்வையில் சாதியம்

  • புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் 1936இல் தாழ்த்தப்பட்டோர் சமத்துவப் பாடல் என்ற நூல் எழுதி வெளியிட்டார். இந்நூலில் தீண்டாமையால் ஏற்படும் கொடுமைகளைக் கடிந்துள்ளார். சாதிகள் மறுக்கப்பட்டு, பின் ஒதுக்கப்பட வேண்டும் என்பதே இந்நூலின் நோக்கம். மக்களின் உயர்வு தாழ்வுகளைக் கண்டுக் குமுறிய பாவேந்தர்

    சேரிப் பறையர் என்றும்
    தீண்டார் என்றும் சொல்லும்
    வீரர் நம் உற்றாரடி - சகியே
    வீரர் நம் உற்றாரடி!

         (பாரதிதாசன் கவிதைகள்)

    என்று பாடுகின்றார்.

    நாம் எவ்வளவுதான் அறிவியல் ஆராய்ச்சி, அணுவியல் ஆராய்ச்சி என்று உலகில் வலம் வந்து கொண்டிருந்தாலும் சாதிகளை வளர்த்து இருட்டறையிலேயே இன்னும் வாழ்ந்து வருகின்றோம். சாதி இருக்கின்றது என்பானும் வாழ்ந்து வருகின்றான். மருட்டுகின்ற சமயத் தலைவரும் சிறப்பாக வாழ்ந்து வாயடி கையடியும் செய்து மறையாது பாதுகாத்து வருகின்றனர் என்பதைக் கண்ட பாவேந்தர்,

    இருட்டறையில் உள்ளதடா உலகம்- சாதி
    இருக்கின்ற தென்பானும் இருக்கின்றானே
    !

    என்றும்,

    பஞ்சமர் பார்ப்பனர் என்பதெல்லாம் என்ன?
    பாரத நாட்டுப் பழிச் சின்னத்தின் பெயர் தோழா

    (பாரதிதாசன் கவிதைகள்)

    என்றும் பாடுகிறார்.

    சாதி என்பது நம் நாட்டில் ஒரு பழிச் சின்னமாகவே திகழ்கிறது என்கிறார். மேலும் சாதி, மதம் என்றும் என் சாதி, உன் சாதி என்றும் எண்ணுவது இழிந்த, சீழ் பிடித்த எண்ணம் என்கிறார். எனவே, சாதி, மதம் போன்ற பார்வை நீங்க வேண்டும் என்று

    அறிவை விருத்தி செய்! அகண்டமாக்கு!
    விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை

    (பாரதிதாசன் கவிதைகள்)

    என்று மக்களின் பார்வையை விசாலப் படுத்துகின்றார்.

புதுப்பிக்கபட்ட நாள் : 21-08-2018 11:23:05(இந்திய நேரம்)