தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

3.2-சட்ட மொழிபெயர்ப்புகள்

  • 3.2 சட்ட மொழிபெயர்ப்புகள்

    19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மாயூரம் வேதநாயகம் பிள்ளை, ஆங்கிலத்திலிருந்த சில வழக்குகளின் தீர்ப்புகளைத் தமிழ் ஆக்கி வெளியிட்டார். இதுவே தமிழில் வெளியான சட்ட மொழி பெயர்ப்புகளில் முதன்மையானதாகும்.

    1957-ஆம் ஆண்டு தமிழகத்தின் ஆட்சி மொழியாகத் தமிழ் சட்டப் பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதன் பின்னர் சட்டம், நீதி, நிருவாகம் ஆகிய துறைகளில் தமிழில் பல்வேறு நூல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

    1980-ஆம் ஆண்டு முதல் ‘தீர்ப்புத் திரட்டு’ என்ற சட்டத் தமிழ் மாத இதழில், தமிழில் வெளியான பழந்தமிழ்த் தீர்ப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றின் மொழியமைப்பினை ஆராய்கையில், சட்டத்தமிழில் வடமொழி, ஆங்கிலம், அரபு, பாரசீகம், உருது போன்ற பிற மொழிச் சொற்கள் பெற்றிருந்த செல்வாக்கினை ஆராய முடிகின்றது.

    1934-ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாடு அரசு இதழில் சட்டம் தொடர்பான செய்திகள் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டு வருகின்றன.

    சட்டக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் படிப்பதற்கு ஏற்ற வகையில் இன்று பல்வேறு சட்ட நூற்கள் தமிழாக்கப்பட்டு வெளியிடப்பட்டு வருகின்றன.

    3.2.1 தன்மைகள்

    இலக்கிய மொழிபெயர்ப்பிலிருந்து சட்டமொழிபெயர்ப்பு பெரிதும் வேறுபாடு உடையது. சட்டத் தமிழில் மிகையுணர்ச்சி, நயங்காணுதல், கற்பனை போன்றவற்றுக்குச் சிறிதும் இடமில்லை. மூல மொழியில் சட்டம் பற்றிக் கூறப்பட்டுள்ள கருத்துகளைத் தமிழில் மொழிபெயர்க்கையில் மிகைபடக் கூறாமலும் சுருக்கிக் கூறாமலும் இருத்தல் வேண்டும். ‘தழுவல்’ என்பது சட்ட மொழி பெயர்ப்புக்கு முரணானது. மூலப் பிரதிக்குத் தொடர்புடையதாக, உள்ளதை உள்ளவாறு, எளிமையான நடையமைப்பில் கூற வேண்டியது சட்டத்தமிழின் அடிப்படையாகும். ஒரு மொழியின் பயன்பாட்டில் சொல்லவந்த செய்தியைத் துல்லியமாகச் சொல்ல முயலுவது சட்டமொழிபெயர்ப்பில் பின்பற்றப்பட வேண்டியதாகும்.

    இந்தியக் குற்ற விசாரணை முறைத் தொகுப்புச் சட்டத்திலுள்ள வாக்கிய அமைப்பைப் பார்த்தால், பல பக்கங்கள் தொடராக வரும் ஒரு சில வாக்கியங்களைக் கொண்ட சிறப்புடையது. இத்தகைய பெரிய வாக்கியங்களைப் பொருள் மாறாது மொழி பெயர்ப்பது, சற்றுச் சிரமமான செயலே. பெரிய வாக்கிய அமைப்புகள் பக்கம் பக்கமாக இடம் பெறும்பொழுது, அதன் உட்கருத்தையும் பொருளையும் மனத்தில் கவனமாகச் கொண்டு, அவற்றைத் தனித்த வாக்கியங்களாகப் பிரித்து மொழிபெயர்த்துப் பின்னர் அவற்றின் பொருள் மாறாதவாறு ஒன்று சேர்க்க வேண்டும். இச்சட்டக் கருத்துகளை வெளியிடுவதற்கு ஆங்கிலேயர் இணை அமைப்பு வாக்கியங்களைப் பயன்படுத்தியுள்ளனர். இவ்வகை ஆங்கிலச் சட்ட வரைவுகளில் காணப்படும் கருத்துச் செறிவும் நுட்பமும் அப்படியே தமிழில் மொழி பெயர்க்கப்படுவதற்கு. சட்ட நூல்களுடன் பல்லாண்டுத் தொடர்பு, சட்டத்தமிழ், ஆங்கிலப் புலமை, மொழி பெயர்ப்புத் திறன் ஆகியவை அடிப்படைத்தேவைகளாகும்.

    3.2.2 சிறப்பியல்புகள்

    மக்களின் அன்றாட வாழ்வில் நெருங்கிய தொடர்புடைய சட்டத்தினை மொழி பெயர்க்கும் போது, மொழிபெயர்ப்பாளர் சொற்கள், தொடரமைப்பு, நடை, பொருண்மை குறித்துத் தனிக் கவனம் செலுத்த வேண்டும். சட்டத்துடன் தொடர்புடைய பொது மக்களை மூன்று பிரிவினராகப் பிரிக்கலாம்.

    1. சட்டத்தை இயற்றும் வல்லுநர் பிரிவு.
    2. சட்டத்தினால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களின் வழக்கறிஞர்கள், சட்டத்தை நிருவகிக்கும் அதிகாரிகள்
    3. நீதியரசர்கள் அடங்கிய பிரிவு.

    சட்டம், தனித்தன்மை கொண்ட மொழியின் வழியே கட்டமைக்கப்பட்டுள்ளது. எனவே கற்றுத் துறை போகிய சிலருக்கு மட்டுமே சட்டம் விளங்கக் கூடியது. மூலச் சட்டமே இந்நிலைக்குரியது என்றால், அதைச் சார்ந்த மொழிபெயர்ப்பு இன்னும் கடினமானது. எனவே சட்டத் தமிழ் மொழிபெயர்ப்புகள், நடையின் காரணமாக விமரிசனத்திற்கு உள்ளாக்கப்படுகின்றன. மொழிபெயர்ப்பில் காற்புள்ளிகள், நிறுத்தற்குறிகள் போன்றன விடுபடாமல் தமிழாக்கப்படும்போது மொழி பெயரப்பாளர் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் அளவற்றவை. சட்டத்துறைத் தமிழ் அகராதிகள் இன்னும் விரிவான அளவில் வெளியிடப்படும்போது, இத்தகைய சிக்கல்கள் எதிர்காலத்தில் நீங்கும் என்பது உறுதி. தொழிலாளர்கள், குடியானவர்கள் முதலியோர் அறிந்து கொள்ளும் வகையில், பொதுமக்கள் தொடர்பான வழக்குகளைத் தொகுத்துத் தமிழாக்கி, சிறு நூற்களாக வெளியிடும்போது சட்டத்தமிழ் இன்னும் வளர்ச்சி அடையும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 11:01:39(இந்திய நேரம்)