Primary tabs
-
5.9 தொகுப்புரை
மேற்குறித்த சிற்றிலக்கியங்கள் அல்லாது சிவன், உமை, முருகன், விநாயகன் முதலிய கடவுளர் மீது பாடப்பெற்ற ஏராளமான சிற்றிலக்கியங்களும், தனிப்பாடல்களும் தமிழில் உள்ளன. அவற்றை எல்லாம் அறிமுகப்படுத்த இப்பாடத்தில் போதிய வாய்ப்பு அமையவில்லை. அம்மை குறித்த நூல்களுள் அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி சிறப்புடையது. அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச் சிந்து, பாம்பன் சுவாமிகள், வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள், திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் ஆகியோர் பாடிய முருகன் பற்றிய சிற்றிலக்கியங்கள் யாவும் சிறப்புடையன. தமிழ் மொழி வளர்ச்சியில் சைவச் சிற்றிலக்கியங்கள் வகிக்கும் சிறப்பிடத்தை ஒருவாறு இப்பாடம் தொகுத்துரைத்துள்ளது. சைவச் சிற்றிலக்கியங்களின் எண்ணிக்கை நம்மை வியக்க வைக்கின்றன. சமயம் சார்ந்து மொழி வளர்ச்சி பெற்ற வரலாற்றை இதைப்போல் வேறு மொழிகளில் காண இயலவில்லை. யாப்பியல், சந்தம், புத்திலக்கிய வடிவங்கள், சமூக நலம் குறித்த பல் துறை சைவச் சிற்றிலக்கியங்கள் தமிழ்மொழிக்கு அழகு சேர்த்துள்ளன என்பது பெருமைக்கு உரியதாக அமைந்துள்ளது.
தன் மதிப்பீடு : வினாக்கள் - II