தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

4.1 உலா

4.1 உலா

உலா என்னும் சொல் 'உலா வருதல்' எனும் குறிப்பு
உடையது. உலாத்துதல், உலாவுதல் என்னும் பொருள்
உடையது. தலைவன் ஒருவன் உலா வருதலும் அவனைக்
கண்டு மகளிர் மனம் மகிழ்தலும் உலா இலக்கியத்தின்
பொருள் ஆகின்றது. உலா வருதலைப் 'பட்டணப் பிரவேசம்',
என்றும் 'ஊர்வலம்' என்றும் கூறுவர்.

இறைவனின் திருமேனியோ, மன்னனோ உலா வருவது
பழங்காலத்து மரபு. யானை, குதிரை, தேர் ஆகியவற்றுள்
ஏதேனும் ஒன்றில் ஏறி உலாவருவது உண்டு. உடன் வருவோர்
அவர்களைச் சூழ்ந்து வருவர். இசைக்கருவிகள் முழங்கும்.
இவ்வாறாக வீதியில் பவனி வருவதை உலா வருதல் என்று
கூறுவர். உலா வரும் தலைவன் மீ்து ஏழு பருவ மகளிர்
காதல் கொண்டு வாடுவர். அவர்தம் வாட்டத்தைப் புலவர்கள்
கற்பனை நயத்தோடு பாடுவர். பாட்டுடைத்தலைவரான
இறைவன் அல்லது மன்னனின் பெருமை பேசப்படும்.

4.1.1 உலாவின் இலக்கணம்

உலா எனும் சிற்றிலக்கியம் தனியொரு இலக்கியமாகப்
பிற்காலத்தில் உருப்பெற்றது. ஆனால் அதற்கும் முன்பு உலா
பற்றிய இலக்கணக் கூறுகள் காணப்படுவதையும் அறிய
முடிகின்றது.

  • தொல்காப்பியத்தில் உலா இலக்கணம்



  • உலாவிற்கான     லக்கணம் தொல்காப்பியத்திலேயே
    அமைந்துள்ளது.
    ஊரொடு தோற்றமும் உரித்தென மொழிப
    வழக்கொடு சிவணிய வகைமையான

    (தொல். பொருள். புறம். 25)


    இந்நூற்பாவிற்குப் பழைய உரையாசிரியர் இளம்பூரணர் உரை
    எழுதி உள்ளார். அது வருமாறு:

    நகர வீதிகளில் விருப்பத்திற்குரியவர்கள் உலா வருவது
    உண்டு. அவ்வாறு வரும் தலைவர்களைக் கண்டு மகளிர்
    காதல் கொள்வதும் உண்டு. ஆண் மகனுடைய பண்புகளை
    விரித்துக் கூறுவது பாடாண் திணை எனப்படும். இந்தப்
    பாடாண் திணையில் பெண்கள் தலைவன் மேல் கொள்ளும்
    காதலைப் பாடுவதும் அடங்கும். இக்கருத்து மேலே
    கூறப்பெற்ற     நூற்பாவால் பெறப்படுகிறது. இக்கருத்தே
    பிற்காலத்தில் 'உலா' தனி இலக்கியமாக உருவாவதற்குக்
    காரணமாகியது.

  • பாட்டியல் நூல்களில் உலா இலக்கணம்



  • அவிநயம், பன்னிரு பாட்டியல் முதலான பாட்டியல்
    நூல்கள் உலா பற்றி விரிவான விளக்கங்களைக் கூறி
    உள்ளன. பன்னிரு பாட்டியல் உலா இலக்கியப்
    பாடுபொருளை இரண்டு வகையாகப் பிரித்துள்ளது.
    c01244d1.gif (3439 bytes)

  • முதல் நிலை



  • முதல் நிலைப் பகுதியில் பாட்டுடைத் தலைவனின்
    சிறப்புகள் கூறப்படும். பாட்டுடைத் தலைவனின் குடிச்சிறப்பு -
    நீதிமுறை - கொடைப்பண்பு - உலாச் செல்ல நீராடுதல் -
    நல்ல அணிகளை அணிதல் - நகர் முழுவதும் மக்கள்
    வரவேற்றல் - நகர வீதிகளில் களிறு முதலியவற்றின் மீது ஏறி
    வருதல் - முதலிய செய்திகள் இப்பகுதியில் பாடப் பெறும்.

  • பின் எழு நிலை



  • பாட்டுடைத் தலைவன் உலா வரும்போது பெண்டிர்
    அவன் மீது காதல் கொண்டு வாடுவர். இப்பகுதி்யை
    விவரிப்பது பின் எழுநிலை ஆகும். காதல் கொள்ளும்
    மகளிரை ஏழுவகையாகப் பாட்டியல் நூல்கள் பிரித்து
    உள்ளன.

    1) பேதை
    - வயது ஐந்து முதல் ஏழு வரை
    2) பெதும்பை
    - வயது எட்டு முதல் பதினொன்று வரை
    3) மங்கை
    - வயது பன்னிரண்டு முதல் பதின்மூன்று வரை
    4) மடந்தை
    - வயது பதினான்கு முதல் பத்தொன்பது வரை
    5) அரிவை
    - வயது இருபது முதல் இருபத்தைந்து வரை
    6) தெரிவை
    - வயது இருபத்தாறு முதல் முப்பத்தொன்று
    வரை
    7) பேரிளம்
    பெண்
    - வயது முப்பத்திரண்டு முதல் நாற்பது வரை

    பாட்டுடைத் தலைவனைக் கண்டு விரும்புவதாகப் பாடும்
    எழுபருவ மகளிர்க்கு உரிய விளையாடல்களைப் பன்னிரு
    பாட்டியல் பட்டியல் இட்டுள்ளது.

    4.1.2 உலாவின் தோற்றமும் வளர்ச்சியும்

    தொல்காப்பியத்தில் உலா இலக்கியத்திற்கான தோற்றுவாய்
    காணப்படுகிறது. ஆனால் முழுமை பெற்ற உலா நூல்களை
    அறியமுடியவில்லை. ஆயின் இறைவன்/ தலைவன் உலா
    சென்றமைக்கான இலக்கியச் சான்றுகள் கிடைத்துள்ளன. சங்க
    இலக்கியத்தில் உலாவின் கூறுகளைக் காண முடிகின்றது.
    இறைவன் உலா வருதல் கூறப்பட்டுள்ளது. திருச்சின்னங்கள்
    எடுத்துச்     செல்லப்படுகின்றன.     இசைக் கருவிகள்
    முழங்குகின்றன. மகளிர்     மாடமாளிகையில் இருந்து
    அக்காட்சியைக் கண்டு களிக்கின்றனர்.

    சிலப்பதிகாரத்தில் வரும்

    மங்கல அணி எழுந்தது
    தலைக்கோல் வலம் வந்தது


    முதலிய     தொடர்கள்     உலாவின் கூறுகளாக
    விளங்குகின்றன. மங்கல அணி உலாச் சென்றபோதும்
    தலைக்கோல் உலா சென்றபோதும் வெண்குடை முதலிய
    சின்னங்கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

    திருநாவுக்கரசர் தாம் வாழ்ந்த காலத்தில் திருவாரூரில்
    நடைபெற்ற திருவாதிரைத்     திருவிழாவைப் பற்றிக்
    கூறியுள்ளார். இறைவன் திருத்தேரில் ஏறித் திருத்தொண்டர்
    குழாம் புடைசூழ உலாச் சென்றதை வருணித்துள்ளார்.
    (தேவா. 4.21.8)


    உதயணனுக்கும் வாசவதத்தைக்கும் திருமணம் நிகழும்
    முன்பு உலாச் செல்கின்றனர். இதனைப் பெருங்கதை
    கூறுகின்றது. உதயணன் வீதி உலா வருவதை நகர் வலம்
    கண்டது எனும் பகுதி சிறப்புடன் விளக்கி உள்ளது. சீவக
    சிந்தாமணியில் சீவகன் உலா குறிக்கப்பட்டுள்ளது. வேடர்கள்
    கவர்ந்து சென்ற ஆநிரைகளைச் (பசு) சீவகன் மீட்டு
    வருகிறான். மீட்டு வந்த வெற்றிப் பெருமிதத்தோடு வீதி
    உலாச் செல்கிறான். சீதையை மணம் செய்து கொள்ளும்
    முன்பு இராமன் மிதிலை வீதிகளில் உலா வருகின்றான்.
    இதனை உலாவியற் படலம் விவரிக்கிறது.

    முத்தொள்ளாயிரம் போன்ற தொகுப்பு நூல்களிலும்
    உலாச் செய்திகள் இடம் பெற்று உள்ளன. மூவேந்தர்களாகிய
    சேரர், சோழர், பாண்டியர் ஆகியோர் மகளிர்க்குக் காம
    நோய் உண்டாக வீதி உலாச் செல்கின்றனர். இதனை
    முத்தொள்ளாயிரம் கூறுகின்றது.

    பல்லவர்     காலத்தில்தான்     முதல்     உலா
    படைக்கப்பட்டுள்ளது. சேரமான் பெருமாள் நாயனார்
    படைத்த திருக்கயிலாய ஞான உலாவே உலா நூல்களில்
    காலத்தால் முந்தியது. இதனை ஆதி உலா என்றும் கூறுவர்.
    இறைவன் முன்னர்     அரங்கேற்றப்பட்ட சிறப்பினை
    உடையதால் இது ஞான உலா என்றும் பெயர் பெற்றது.

    சில உலா நூல்கள் வருமாறு:

  • திருக்கயிலாய ஞான உலா



  • சேரமான் பெருமாள் நாயனார் சிவபெருமான் மீது
    பாடியது இந்த உலா. இதுவே முழுமை பெற்ற முதல் உலா
    நூல் என்பர். திருமாலும் பிரம்மனும் காணமுடியாத
    பரம்பொருள் ஆகிய சிவபெருமானின் காட்சியைத் தேவர்கள்
    காண விரும்பினர். இறைவனும் சிறந்த அணிகளை அணிந்த
    சுந்தரத் (அழகான) தோற்றத்துடன் திருவீதியில் உலாச்
    சென்றார். இந்நிகழ்ச்சியை விவரிப்பதே இந்த உலா.

  • ஆளுடைப் பிள்ளையார் திருவுலாமாலை



  • நம்பியாண்டார் நம்பி இயற்றியது. திருஞானசம்பந்தர்
    பாட்டுடைத்தலைவர். இவ்வுலாவில் ஏழு பருவ மகளிரின்
    செயல்கள் தனித்தனியே கூறப் பெறாமல், ஒன்றாகக் கூறப்
    பெற்றுள்ளன.

  • திருவாரூர் உலா



  • அந்தகக் கவி வீரராகவ முதலியார் இயற்றியது. திருவாரூர்
    இறைவனைப் பற்றியது.

  • திருக்கீழ்வேளூர் உலா



  • இந்த நூலையும் அந்தகக்கவ வீரராக முதலியாரே இயற்றி
    உள்ளார். இவ்வுலா வேளூர் இறைவன் கேடிலியப்பர் மீது
    பாடப்பட்டது.

  • தமிழன் உலா



  • இநநூலை இராசை. கி. அரங்கசாமி இயற்றி உள்ளார்.
    தமிழர் வரலாற்று நாயகர்களின் பரம்பரையில் வந்த தமிழன்
    ஒருவன் உலா வருவதை இந்த உலா விவரிக்கிறது. தமிழரின்
    வரலாறு, பண்பாடு, மொழி முதலியவற்றின் ஒட்டு
    மொத்தமான குறியீடாக இத்தலைவனை ஆசிரியர் படைத்து
    உள்ளார்.
    1.
    பண்டைய உலாக்களில் பாட்டுடைத் தலைமை
    பெற்றோர் யார் யார்?
    2.
    உலா இலக்கணத்தை முதலில் கூறிய நூல் எது?
    3.
    உலாவில் இடம்பெறும் ஏழுவகைப் பருவ மகளிர்
    பெயர்களைக் குறிப்பிடுக?
    4.
    முதல் உலா நூல் எது? அதன் ஆசிரியர் யார்?
    5.
    பண்டைய உலா நூல்களில் நான்கின் பெயரைக்
    குறிப்பிடுக?

    Tags   :

    புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 09:07:51(இந்திய நேரம்)