தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

1.3 அகத்திணைகள்

  • 1.3 அகத்திணைகள்

    அகத்திணைகள் ஏழு வகைப்படும். அவை:

    (1)
    கைக்கிளை
    (2)
    குறிஞ்சி
    (3)
    முல்லை
    (4)
    மருதம்
    (5)
    நெய்தல்
    (6)
    பாலை
    (7)
    பெருந்திணை

    குறிஞ்சி முதல் பாலை வரையிலானவை அன்பின் ஐந்திணை
    என்று அழைக்கப்படும். அஃதாவது உயர்ந்த ஒழுக்கம் ஆகும்.
    கைக்கிளையும் பெருந்திணையும் இழிந்த ஒழுக்கங்கள் ஆகும்.

    1.3.1 கைக்கிளை

    கைக்கிளை என்பது ஒருதலைக் காதலைக் குறிக்கும். இஃது
    இழிந்த ஒழுக்கமாகக் கருதப்பட்டாலும் நம்பியகப் பொருளின்
    களவியலில் இழிபொருளில் வரவில்லை. மாறாக, தலைவனும்
    தலைவியும் களவு வாழ்க்கையில் ஈடுபடுவதற்கு முந்தைய
    நிகழ்வாக அமைந்துள்ளதைக் காணலாம்.

    1.3.2 கைக்கிளைப் பாகுபாடு

    கைக்கிளையானது காட்சி, ஐயம், துணிவு, குறிப்பறிதல் என்று
    நான்கு வகைப்படும். இதை,

    காட்சி ஐயம் துணிவு குறிப்பறிவுஎன
    மாட்சி நான்கு வகைத்தே கைக்கிளை

    (களவியல் -சூ. 2)

    என்று நம்பியகப் பொருள் குறிப்பிடுகிறது. இனி இவ்வகைகளை
    விளக்குவோம்.

    1.3.3 காட்சி

    தலைவனும் தலைவியும் முற்பிறவியில் கூடி இன்பம்
    பெற்றவர்கள் ஆவர். இவர்கள் இப்பிறவியில் கூடுவதும் பிரிவதும்
    நல்வினை, தீவினைகளால் ஆகும். நல்வினையின் பயனாய்,
    அறிவாலும் பிறவற்றாலும் ஒத்தத் தன்மை உடைய தலைவனும்
    தலைவியும் எதிர்பாராத விதமாக சந்திப்பதே காட்சி ஆகும்.
    இவ்விருவருள் தலைவன் தலைவியை விட உயர்ந்தோனாய்
    இருப்பினும் தவறில்லை. அக இலக்கியங்களில் தலைவனும்
    தலைவியும் சந்திக்கின்ற முதல் சந்திப்பு (காட்சி) இவ்விதமாகவே
    அமைக்கப்பட்டுள்ளதைக் காண முடிகிறது.

    1.3.4 ஐயம்

    நல்வினையின் பயனாய்த் தலைவியைக் கண்ட தலைவன்,
    அவளின் உருவ அழகு, அவளைத் தாம் கண்ட இடம்
    முதலியவற்றால் தாம் காண்பது கனவோ, நனவோ என்று ஐயம்
    கொள்வான்.

    (எ.டு) ஒரு தலைவன் தான் கண்ட தலைவியின் அழகைக் கண்டு
    ஐயுற்று அவள் தெய்வமோ, மயிலோ, மானுடப் பெண்ணோ
    என்று ஐயப்படுவதைத் திருவள்ளுவர்,

    அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
    மாதர்கொல் மாலும்என் நெஞ்சு

    (குறள் - 1081)

    என்று குறிப்பிடுகிறார்.

    1.3.5 துணிவு
    தலைவியைத் தெய்வமோ, மயிலோ, மானுடப்
    பெண்ணோ என்று ஐயுற்றத் தலைவன் அவள்
    மானுடப் பெண்தான் என்று தெளிவடைதல்
    துணிவாகும். அவன் துணிவுக்குக் காரணங்கள்
    ஏழு ஆகும். அவை:

    வ.எண்
    காரணங்கள்
    விளக்கங்கள்
    (1)
    எழுதிய வல்லி
    முலை, தோள்களில் வல்லிக்
    கொடியால் எழுதுவது மானுடப்
    பெண்களின் இயல்பு; தெய்வப்
    பெண்டிர்களின் இயல்பு இல்லை.
    இப்பெண் வல்லிக் கொடியால்
    எழுதியுள்ளாள்.
    (2)
    தொழில்
    புனைகலன்

    தெய்வம்     அணிந்துள்ள
    அணிகலன்கள்     உடலோடு
    ஒட்டியிருக்கும்;     மானுடப்
    பெண்களின்     அணிகலன்கள்
    அப்படி இருப்பதில்லை. இப்பெண்
    அணிந்துள்ள அணிகலன்கள் உடல்
    வேறு அணிகலன் வேறு என்ற
    நிலையில் உள்ளன.
    (3)
    வாடிய மலர்
    தெய்வப் பெண் அணிந்துள்ள மலர்
    வாடாது; மானுடப்     பெண்
    அணிந்துள்ள மலர் வாடிவிடும்.
    இப்பெண் அணிந்துள்ள மலர்
    வாடியுள்ளது.
    (4)
    கூடிய வண்டு
    தெய்வப் பெண் அணிந்துள்ள
    மலரில் தேன் இருக்காது. எனவே,
    வண்டுகள் சூழா. ஆனால்,
    மானுடப் பெண் அணிந்துள்ள
    மலரில் தேன் இருக்கும். எனவே,
    வண்டுகள் சூழும். இப்பெண்
    அணிந்துள்ள மலர்களில் வண்டுகள்
    சூழ்கின்றன
    (5)
    நடைபயில் அடி
    தெய்வப் பெண்ணின் திருவடி
    அசைவில்லாது நிற்கும். மானுடப்
    பெண்ணின் அடிகள் அசையும்.
    இப்பெண்ணின் அடிகள்
    அசைகின்றன.
    (6)
    புடைபெயர்கண்
    தெய்வப் பெண்ணின் கண் இமைகள்
    அசையாது நிலைத்து நிற்கும்.
    மானுடப் பெண்ணின் கண் இமைகள்
    அசையும். இப்பெண்ணின் கண்
    இமைகள் அசைகின்றன.

    (7)
    அச்சம்
    ஆண்களைக் கண்டவுடன் மானுடப்
    பெண்களிடத்து மட்டும் அச்ச
    உணர்வு     எழும். தெய்வப்
    பெண்களிடத்து எழாது.
    இப்பெண்ணிடத்து அச்ச உணர்வு
    எழுகிறது.

    இவ்வேழு காரணங்கள் மட்டுமன்றி உரையாசிரியர்கள் மேலும்
    நான்கு காரணங்களைக் குறிப்பிடுள்ளனர். அவை:

    வ.எண்
    காரணங்கள்
    விளக்கங்கள்
    (1)
    கால் நிலம்
    தோய்தல்
    தெய்வப் பெண்டிரின் கால்கள்
    நிலத்தில் படா;     மானுடப்
    பெண்டிரின் கால்கள் நிலத்தில்
    படும். இப்பெண்ணின் கால்
    நிலத்தில் படுகிறது.
    (2)
    உடல் வியர்த்தல்
    தெய்வப் பெண்டிரின் உடல்
    வியர்க்காது; மானுடப் பெண்டிர்
    உடல் வியர்க்கும். இப்பெண்ணின்
    உடல் வியர்க்கிறது.
    (3)
    நிழல் வீழ்தல்
    தெய்வப் பெண்டிரின் உடல் நிழல்
    நிலத்தில் வீழாது; மானுடப்
    பெண்டிரின் உடல் நிழல் நிலத்தில்
    வீழும். இப்பெண்ணின் உடல்
    நிழல் நிலத்தில் வீழ்கிறது.
    (4)
    ஆடை மாசு
    உண்டாதல்
    தெய்வப் பெண்டிரின் ஆடை
    அழுக்காகாது;     மானுடப்
    பெண்டிரின் ஆடை அழுக்காகும்.
    ஆடை அழுக்காகி உள்ளது.

    இக்காரணங்களால் இவள் மானுடப் பெண்தான் என்று
    தலைவன் முடிவுக்கு வருகிறான்.

    1.3.6 குறிப்பறிதல்
    தலைமகன் மேல் தனக்கிருக்கும் ஆசையைத்
    தலைமகள் குறிப்பால் (கண் பார்வையால்)
    உணர்த்துவாள். அக்குறிப்பைத் தலைவன்
    அறிந்து கொள்ளுதலே குறிப்பறிதல் ஆகும்.
    1.
    ஐந்து இலக்கணங்களைக் கூறும் இலக்கண நூல் ஒன்றைக்
    கூறுக.
    2.
    நம்பி அகப்பொருளின் வேறு பெயர் என்ன?
    3.
    நாற்கவிராச நம்பி நான்கு வகைக் கவிகளிலும் வல்லவர்.
    சரியா? தவறா?
    4.
    கைகோள் என்றால் ஒழுக்கம் என்று பொருள். சரியா?
    தவறா?
    5.
    வடமொழியாளர் குறிப்பிடும் மணங்கள் -------.
    6.
    அகத்திணைகள் ----------- வகைப்படும்.
    7.
    கைக்கிளைத் திணையின் வகைகள் யாவை?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 14:27:16(இந்திய நேரம்)