தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

4.2 பிற வெண்பாக்களின் இனம்

  • 4.2 பிற வெண்பாக்களின் இனம்

    குறள்வெண்பா நீங்கிய ஏனைய வெண்பாக்களின் இனங்கள்

    வெளிவிருத்தம்
    வெண்டாழிசை
    வெண்டுறை

    என்ற மூன்றும் ஆகும்.

    4.2.1 வெளிவிருத்தம்

    (1)
    இது மூன்று அல்லது நான்கு அளவடிகளைப்
    (நாற்சீரடி) பெற்றிருக்கும்.
    (2)
    அடிகள் தம்முள் அளவொத்து வரும்.
    (3)
    அடிதோறும் இறுதியில் ஒரு சொல் தனிச்
    சொல்லாய் வரும்.
    இந்தத் தனிச்சொல் அளவடியில் அடங்காத
    தனிச்சொல்லாக இருக்கும்.

    (எ.கா)

    ஆவா வென்றே அஞ்சினர் ஆழ்ந்தார் - ஒருசாரார்
    கூகூ வென்றே கூவிளி கொண்டார் - ஒருசாரார்
    மாமா வென்றே மாய்ந்தனர் நீந்தார் - ஒருசாரார்
    ஏகீர் நாய்கீர் என்செய்து மென்றார் - ஒருசாரார்

    இந்தப் பாடல் நான்கு அளவடிகளைப் பெற்று ஒருசாரார்
    என்ற தனிச்சொல்லை அடிதோறும் பெற்று வந்த வெளிவிருத்தம்.

    4.2.2 வெண்டாழிசை

    இது,

    (1)
    மூன்றடியாய் வரும்.
    (2)
    வெண்பாவைப் போலக் கடைசி அடி சிந்தடியாக
    (முச்சீரடி) வரும். ஏனைய அடிகள் அளவடிகளாக
    வரும்.

    (எ.கா)

    நண்பி தென்று தீய சொல்லார்
    முன்பு நின்று முனிவு செய்யார்
    அன்பு வேண்டு பவர்

    (நண்பிது என்று = நட்பு என்று சொல்லி; முனிவு =
    சினமுண்டாக்கும் செயல்)

    இந்தப் பாடல் மூன்றடியால் அமைந்து வெண்பாவைப் போல்
    ஈற்றடி சிந்தடியாக வந்ததனால் வெண்டாழிசை ஆயிற்று.

    4.2.3 வெண்டுறை

    இது,

    (1)

    மூன்றடிக்குக் குறையாமல் வரும். ஏழடிக்கு மேல்
    போகாது.

    (2)

    4 அடி, 5 அடி, அல்லது 6 அடியால் வரலாம்.

    (3)

    பின்னால் வரும் சில அடிகளில் சில சீர்கள்
    குறைந்து வரும்

    (எ.கா)

    தாளாள ரல்லாதார் தாம்பலர் ஆயக்கால் என்னாம்
    என்னாம்
    ஆளியைக் கண்டஞ்சி யானைதன் கோடிரண்டும்
    பீலிபோல் சாய்த்துவிழும் பிளிற்றி யாங்கே

    (தாள் = முயற்சி; ஆளி = சிங்கம்; பீலி = மயில்தோகை)

    இப்பாடல் மூன்றடியால் அமைந்து, முதலடியைவிடப்
    பின்னால் வரும் அடிகள் இரண்டு சீர் குறைந்து வந்துள்ளது.
    ஆகவே இது வெண்டுறையாகும்.

    (1)

    நீங்கள் முன்பு பயின்ற வெண்பா வகைகள் மூன்றடி
    (சிந்தியல் வெண்பா), நான்கடி (நேரிசை வெண்பா,
    இன்னிசை வெண்பா), ஐந்தும் அதற்கு மேற்பட்ட
    அடிகளும் (பஃறொடை வெண்பா) பெற்று வருவதைப்
    பார்த்திருக்கிறீர்கள். இப்போது இவ்வினங்களில் மூன்றடி,
    நான்கடி ஐந்தடி, ஆறடி, ஏழடி என அடி எண்ணிக்கை
    அமைந்திருப்பதைக் காண்கிறீர்கள்.
    (2)
    தனிச்சீர் வருவது நேரிசை வெண்பாவின் சிறப்பான
    இலக்கணம். இங்கும் வெளிவிருத்தத்தில் தனிச்சீர்
    வருவதைக் காண்கிறீர்கள். இக்காரணங்களால் இவை பிற
    வெண்பாக்களின் இனங்களாக வகுக்கப்பட்டன என்பதை
    நீங்கள் எளி்தில் உணரலாம்.
புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 14:32:19(இந்திய நேரம்)