தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

5.3 மடக்கு - சொல்லணி்

  • 5.3 மடக்கு - சொல்லணி

    தமிழ்நாட்டில் ‘இவன், அவனை மடக்கி விட்டான்’ என்ற
    தொடர் பேச்சுவழக்கில் தற்காலத்தில் அடிக்கடி இடம் பெறும்
    தொடராகும். இத்தொடருக்கு பொருள் என்னவென்றால் ‘ஒருவன்
    தன் சொல்லாலோ, செயலாலோ மற்றொருவனை அடக்கி
    தனக்குக் கீழாக ஆக்கிவிட்டான்’ என்பதாகும். இவ்வாறு
    சொல்லால் செய்யுளின்     ஓட்டத்தை     மடக்கி அழகு
    தருவது, கற்பவருக்குச் சுவை தருவது, வேறு வேறு பொருள்
    தருவது மடக்கு என்னும் சொல்லணியாகும்.

        சொன்னது தப்பாதப்பா

    என்பது ஒரு தமிழ்த் திரைப்படப் பாடலில் இடம்பெறும் ஓர்
    அடியாகும். (படம் : சிந்துபைரவி, பாடலின் முதலடி நானொரு
    சிந்து) இதனைப் பாடிய பாடகி இவ்வடியை இருமுறை பாடுவார்.

    முதன்முறை “சொன்னது தப்பாதப்பா” என்று பாடுவார்.
    அதாவது நான் சொல்வது தப்பாதப்பா = தவறாது, நிச்சயம்
    நடைபெறும்” என்ற பொருள்படி இவ்வடி முதலில் பாடப்
    பெற்றிருக்கும்.

    இரண்டாம் முறை “சொன்னது தப்பா? தப்பா?” என்று
    பிரித்து அப்பாடகி பாடுவார். அதாவது “நான் சொன்னதில்
    ஏதேனும் தப்பு உண்டா? தப்பு உண்டா (தவறு உண்டா)” என்று
    பொருள்படும்படி இத்தொடர் பிரித்துப் பாடப் பெற்றிருக்கும்.

    தப்பா தப்பா என்ற சொற்களை இணைத்துக் கூறுகையில் ஒரு
    பொருளையும், பிரித்துக் கூறுகையில் வேறொரு பொருளையும்
    தரும் நிலையையே இலக்கண ஆசிரியர்கள் மடக்கு என்னும்
    சொல்லணியாகக் கருதுகின்றனர்.

    5.3.1 மடக்கு - இலக்கணம்

    எழுத்தின் கூட்டம் இடை பிறிது இன்றியும்
    பெயர்த்தும் பொருள்தரின் மடக்கு எனும் பெயர்த்தே

    (தண்டியலங்காரம் - 92)

    செய்யுளில் இடம்பெறும் சொற்களில் அடங்கியுள்ள எழுத்துக்கள்
    இடையிலே பிரிப்பு இல்லாமலும், அதே சொற்கள் இடையிலே
    பிரிக்கப் பெற்றும் வேறு வேறு பொருள்களைத் தந்தால் அதற்கு
    மடக்கு
    என்று பெயராகும்.

    மேற்கண்ட நூற்பாவை விளக்க பின்வரும் மரபுக்கவிதையைக்
    காணலாம்.

    உமாதர னுமாதர
    - (1)
    னுமாதர னுமாதர
    - (2)
    னுமாதர னுமாதர
    - (3)
    னுமாதர னுமாதரன்
    - (4)

    என்பது ஒரு மரபுக் கவிதையாகும். இதைப் படிப்பவர்கள்
    இரண்டாம் அடியிலேயே, ஒரு சொல்லே திரும்பத் திரும்ப
    வருகிறது என்பதை உணர்ந்து விடுவார்கள் ; அச்சொல்
    ‘உமாதர’ என்பதும் தெரிந்து விடும். இந்த ஒரே ஒரு சொல்லை
    மட்டும் வைத்துக் கொண்டு இதை படைத்தப் புலவர் (பெயர்
    தெரியவில்லை) பல்வேறு பொருள்களை மடக்கணி அமைப்பில்
    தந்துள்ளார். அவற்றின் பொருளை இனிக் காண்போம்.

    முதலடி

    உமாதர னுமாதர
    - இயல்பு நிலை
    உமாதரன் ஆதரனும்
    - பிரிப்பு நிலை

    பொருள்:

    (1)
    உமாதரன்
    - உமா தேவியின் கணவன்.
    (2)
    ஆதரனும்
    - ஆதரவாக இருப்பவன்.

    இரண்டாம் அடி

    (னு) மாதர னுமாதர
    - இயல்பு நிலை
    (னு) மாதரனும் ஆதர
    - பிரிப்பு நிலை

    பொருள்:

    னு முதலடிக்குப் பொருள் கருதிச் சென்று விட்டது.
    மீதமுள்ளவை:

    (1)
    மாதரனும்
    - மானை ஏந்தியவன்.
    (2)
    ஆதர (னு)
    - (ஆ- உயிர்) உயிரை ஆள்பவன்.

    மூன்றாம் அடி

    னுமாதர னுமாதர
    - இயல்புநிலை
    (னு) மாதரனும் ஆதர
    - பிரிப்பு நிலை

    பொருள்:

    னு முதலடிக்குப் பொருள் கருதிச் சென்று விட்டது.
    மீதமுள்ளவை:

    (1)
    மாதரனும்
    - யானைத் தோலை அணிந்தவன்.
    (2)
    ஆதர
    - (ஆ - இடபம் - மாடு) இடபத்தை
    வாகனமாக உடையவனும்.

    நான்காம் அடி

    னுமாதர னுமாதரன்
    - இயல்புநிலை
    (னு) மாதரனும் ஆதரன்
    - பிரிப்பு நிலை

    பொருள்:

    னு முதலடிக்குப் பொருள் கருதிச் சென்று விட்டது.

    (1)
    மாதரனும்
    - திரு (செல்வம்) வை உடையவன்
    (2)
    ஆதரன்
    - இத்தகைய பெருமைகளைப் பெற்றவன்
    சிவபெருமான்.

    உமாதரன், மாதரன் (மான், யானை, திரு), ஆதரன்
    (ஆதாரமானவன், உயிரை ஆள்பவன், இடபத்தை வாகனமாக
    உடையவன், பெருமை பெற்றவன்) என்ற சொற்கள் பல
    வகைகளில் பிரிந்து நின்று பலவகைப் பொருள்களைத்
    தந்துள்ளன. இப்பாடலைப் படிப்போர் விரைவில் இதனை
    மனப்பாடம் செய்து விடலாம். ஏனெனில் ஒரு சொல்லே மீண்டும்
    மீண்டும் வந்துள்ளது.

    ஒரு சொல்லே நான்கடியிலும் இங்கு மடங்கி வந்துள்ளது.
    இவ்வகை மடக்கு அணியை இயமாலி யமகம் என்பர். இது
    குறித்து வகை என்னும் தலைப்பில் மேலும் அறிவோம்.
    மடக்கணியின் வலிமையை, புலவர் சொல் மடக்கால் நம்மை
    மடக்கிய அருமையை நீங்கள் இப்பொழுது முழுவதும்
    உணர்ந்திருப்பீர்கள்.

    5.3.2 மடக்கு - சொல்லணியின் இடம்

    சொல்லணி ஒரு செய்யுளில் இடம்பெறும் அடிகளில்
    முதலாவதாக அமையலாம். இடைநிலையிலும், இறுதியிலும்
    அமையலாம்.

    இதன் வழியாக இடம் கருதி மடக்கணி,

    (1)
    முதன் மடக்கு
    (2)
    இடை மடக்கு
    (3)
    கடை மடக்கு

    என மூவகையாகின்றது.

    மேலும்,

    (1)
    முதலடியும் இடையடியும்
    - முதல், இடை, கடை
    (2)
    முதலடியும் கடையடியும்
    - முதல், இடை , கடை
    (3)
    கடையடியும் இடையடியும்
    - முதல், இடை, கடை
    (4)
    நான்கடிகளிலும்
    - முதல், இடை, கடை

    எனவும் மடக்கு அமையலாம். இதனை,

    ஆதி, இடை, கடை ; ஆதியோடு இடை கடை,
    இடையோடு கடை முழுது என எழுவகைத்தே

    (தண்டியலங்காரம்)

    என ஏழாகக்     காண்கிறது தண்டியலங்காரம். இவை
    மேற்காட்டியபடி மேலும் விரிவுபடலாம்.

    வரைய, வரைய சுரஞ்சென்றார் மாற்றம்
    புரைய, புரைய வெனப் பொன்னே
    நனைய, நனைய தொடை நம்மை வேய்வர்
    வினையர், வினையர் விரைந்து

    என்ற பாடல் முதன் முற்று மடக்கு அணிக்குச் சான்றாகும்.
    அதாவது அடிகள் அனைத்திலும் மடக்கு வந்தால் அது
    முற்றுமடக்கணி
    யாகும். இப்பாடலில் முற்றும் அதே நேரத்தில்
    அடிகளின் முதலில் வந்துள்ளமையால் மடக்கணி - முதன்முற்று
    மடக்கணி எனப்படுகின்றது.

    பொருள்:

    வரைய வரைய சுரஞ்சென்றார்

    (1)
    வரைய
    = திருமணம் செய்து கொள்ளவேண்டும்
    எனவும்
    (2)
    வரைய
    = பொருள் ஈட்ட வேண்டும் எனவும்

    பாலை நிலம் நோக்கித் தலைவர் சென்றார். இவ்வடிகள்
    சொல் பிரிப்பு இல்லாமல் வந்த மடக்கணி என்பதும்
    உணரக்கத்தக்கது.

    இவை போலவே மற்ற அடிகளும் பொருள் கொள்ளத்தக்கன.

    மற்ற எடுத்துக்காட்டுக்காட்டுகளை மேல்நிலையில் அறியலாம்.

    5.3.3 ஓர் எழுத்து மடக்கு

    ஓர் எழுத்து மடக்காலும் உரித்து எனமொழிப

    (தண்டியலங்காரம்-97)

    ஓர் எழுத்தே மடங்கி நின்று பல பொருள் தரலும் உண்டு
    என்கிறார் தண்டியலங்கார ஆசிரியர். இவற்றில் பல வகையுண்டு.
    அவை,

    (1)
    ஒர் எழுத்தே எல்லா அடிகளிலும் இடம்பெற்று
    மடக்காதல்.
    (2)
    நெட்டெழுத்துக்கள் மட்டுமே செய்யுளில் இடம்
    பெற்று மடக்காதல்.
    (3)
    குறில் எழுத்துக்கள் மட்டுமே செய்யுளில் இடம்
    பெற்று மடக்காதல்.
    (4)
    ககர விகற்பத்தான் (க, கா, கி... ) மடக்காதல்.
    (5)
    தகர விகற்பத்தான் (த, தா, தி... ) மடக்காதல்.
    (6)
    ஈரெழுத்தால் வருவன.
    (7)
    மூவெழுத்தால் வருவன.
    (8)
    நான்கெழுத்தால் வருவன.

    என இப்பட்டியல் நீளும்.

    இவற்றுள் ககர விகற்பத்திற்கு மட்டும் எடுத்துக்காட்டு சுட்டப்
    பெறுகின்றது.

    காக்கைக்கா காகூகை, கூகைக்கா காகாக்கை,
    கோக்குக்கூக், காக்கைக்குக் கொக்கொக்க கைக்கைக்குக்
    காக்கைக்குக் கைக்கைக்கா கா

    என்ற பாடல் மடக்கிற்குச் சிறந்த காட்டாகும்.

    பாடல் பிரிப்பு கொள்ள வேண்டிய இடங்கள் = 2. அவை
    பின்வருமாறு:

    (1)

    காக்கைக்கா காகூகை = காக்கைக்கு ஆகா கூகை

    (2)
    கூகைக்கா காகாக்கை = கூகைக்கு ஆகா காக்கை

    பாடல் பொருள்:

    இரவில் காக்கைக்கு ஆகாது கூகை (ஆந்தை). அதாவது
    காக்கையும் கூகையும் பகையானவை. பகலில் கூகைக்குக் காக்கை
    ஆகாது. பகலில் காக்கை வலிமை பெறும். இரவில் கூகை
    வலிமை பெறும். அதுபோல காலம் கருதி, அரசன் கொக்கைப்
    போல காத்திருந்து எதிரிகளை அழிக்க வேண்டும். இல்லை
    யென்றால் எவ்வெற்றியும் இந்திரனாக இருந்தாலும் கிடைக்காது.
    என்று பாடல் பொருள் தருகிறது. அதே நிலையில் சொல்
    வகையாலும் அழகு பெறுகிறது. இதனை உணர்ந்து, இதே
    வகையில் நாமும் சொல்லணி வயப்படுவோம்.

    5.3.4 மடக்கணியின் சிறப்பு வகைகள்

    ஏகபாதம், இயமாலியமாகம், பாடகம் என்பன மடக்கணியின்
    சிறப்பு வகைகளாகும். அவை பற்றிய அறிமுகத்தை மட்டும்
    இங்குக் காண்போம்.

    அ) ஏகபாதம்

    செய்யுளின் நான்கடிகளும் ஒரே நிலையில் அமைந்து மடங்கி
    வருவது ஏகபாதம் ஆகும்.

    ஆ) இயமாலியமகம்

    ஒரு சொல்லே செய்யுள் முழுவதிலும் இடம்பெற்று, மடங்கி
    நின்று பொருள் தருவது இயமாலியமகம் ஆகும்.

    இ) பாடகம்

    பாடகம் என்பது வளைவாக மடங்கி இருக்கும் காலணியாகும்.
    இவ்வகை போல இரண்டு இரண்டு அடிகளில் மடங்குவது
    பாடகம்
    ஆகும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 14:33:51(இந்திய நேரம்)