தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாட முன்னுரை

  • 3.0 பாட முன்னுரை

    பல்லவரது சம காலத்தவரான பாண்டியர் பல்லவரது குடைவரை
    மரபைப் பின்பற்றிப் பாண்டிய நாட்டில் குடைவரைகளைத்
    தோற்றுவித்தனர். பல்லவர்கள் குடைவரைகளைத் தொடங்கிய
    போது அவற்றில் இறையுருவங்களைச் செதுக்கவில்லை. பிற்காலக்
    குடைவரைகளிலேதான்     கருவறைகளின்     பின்சுவர்களில்
    இறையுருவைப் புடைப்பு உருவமாகச் செதுக்கினர். ஆனால்
    பாண்டியர்கள் குடைவரைகளைத்     தொடங்கியது முதல்
    கருவறைகளில் இறையுருவைத் தவறாது இடம்பெறச் செய்துள்ளனர்.

    ஒற்றைக்கல் இரதமான கழுகுமலை வெட்டுவான் கோயில்
    இன்றளவும் மிகச் சிறப்பான ஒரு படைப்பாகக் கருதப்படுகிறது.
    காரணம், வேறு ஒற்றைக்கல் இரதங்கள் பாண்டிய நாட்டில்
    தோற்றுவிக்கப் படவில்லை என்பதுவே. மேலும் கலை அழகு
    வாய்ந்த, எழிலார்ந்த சிற்பங்களைக் கொண்டு விளங்குவதால்
    அது தென்னக எல்லோரா என்று சிறப்பிக்கப்படுகிறது.


    கழுகுமலை வெட்டுவான் கோயில்

    முற்காலப் பாண்டியர்களின் கட்டுமானக் கோயில்கள்
    முற்றிலுமாக அழிந்து விட்டன. பிற்காலப் பாண்டியர்களின்
    கட்டுமானக் கோயில்களில் சில மட்டுமே எஞ்சியுள்ளன.
    அவற்றில் காணப்படும் சிற்பங்கள் பாண்டியர்களுக்கே உரிய
    கலைப் பாணியை உணர்த்துவனவாக உள்ளன.

    முற்காலப் பாண்டியர் கோயில்கள் சிலவற்றில் ஓவியங்கள்
    இடம் பெற்றுள்ளன. சிற்ப ஓவியக் கலைச் சிறப்பில் பிற்காலப்
    பாண்டியரை விட முற்காலப் பாண்டியரே சிறப்பிடம்
    பெறுகின்றனர். முற்காலப் பாண்டியர் காலம் கி.பி.600 முதல் 850
    வரையுள்ளதாகும். இனி இவ்வெல்லாவற்றையும் விரிவாகக்
    காணலாம். இவர்கள் படைத்த குடைவரைகளையும், ஒற்றைக்கல்
    இரதத்தையும், கட்டுமானக் கோயில்களையும் கொண்டு அவற்றின்
    சிற்பச் சிறப்பைக் காணலாம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 15:40:21(இந்திய நேரம்)