தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

4.2 இருதிணைப் பொதுப்பெயர்கள்

  • 4.2 இருதிணைப் பொதுப்பெயர்கள்

    பண்டைக் காலத்தில், மக்களுக்கு வைக்கும் பெயர்களைத் தம்மோடு வாழும் விலங்கு, தோட்டம் போன்றவற்றிற்கும் இட்டு வழங்கினர். அதனால் ஒரே பெயர் இருதிணைகளிலும் கலந்து வழங்கிற்று. அதனை “விரவுப் பெயர்” என்று வழங்கினர். மேலும் சூரியன் உதித்தான், சூரியன் உதித்தது, சந்திரன் உதித்தான், சந்திரன் உதித்தது என ஒரு பொருளையே இருதிணையிலும் குறிப்பிடுவதும் உண்டு. உயர் திணைக்கும் அஃறிணைக்கும் பொதுவான இப்பெயர்கள் இருதிணைப் பொதுப் பெயர்கள் என அழைக்கப்படுகின்றன. இவை தம்மோடு வரும் பெயராலும் வினையாலும் பால்களைச் சுட்டி நிற்கும்.

    முதற் பெயர்கள் நான்கும் சினைப் பெயர்கள் நான்கும், சினைமுதற் பெயர்கள் நான்கும், முறைப் பெயர்கள் இரண்டும், தன்மைப் பெயர் நான்கும், முன்னிலைப் பெயர்கள் ஐந்தும், எல்லாம், தான், தாம் என்பனவும், இவை போன்ற பிறவும் இருதிணைக்கும் உரிய பொதுப் பெயர்களாம்.

    முதற்பெயர்
    - 4(ஆண்மை,பெண்மை,ஒருமை,பன்மை)
    சினைப்பெயர்
    - 4(ஆண்மை,பெண்மை,ஒருமை,பன்மை)
    சினைமுதற்பெயர்
    - 4(ஆண்மை,பெண்மை,ஒருமை,பன்மை)
    முறைப்பெயர்
    - 2 (ஆண்மை,பெண்மை)
    தன்மைப்பெயர்
    - 4 (யான்,நான்,யாம்,நாம்)
    முன்னிலைப்பெயர்
    - 5 (எல்லீர்,நீயிர்,நீவிர்,நீர்,நீ)
    படர்க்கைப் பெயர்
    - 2 (தான்,தாம்)
    மூவிடப் பொதுப்பெயர்
    - 1 (எல்லாம்)
    26

    ஆக இருதிணைப் பொதுப் பெயர்கள் மொத்தம் இருபத்து ஆறு ஆகும்.

    முதற்பெயர் நான்கும் சினைப்பெயர் நான்கும் சினைமுதல் பெயரொரு நான்கும் முறை இரண்டும் தன்மை நான்கும் முன்னிலை ஐந்தும் எல்லாம் தாம் தான் இன்னன பொதுப்பெயர்

    (நன்னூல்:282)

    4.2.1 ஆண்மை முதற்பெயர்

    முதற்பெயர் என்பது முழுமையான ஒரு பொருளுக்கு வழங்கப்பட்டு வரும் பெயர் ஆகும். இது ஆண்மை, பெண்மை, ஒருமை, பன்மை என நான்கு வகைப்படும். (1) ஆண்மை முதற்பெயர்

    சாத்தன்
    இவன்
    சாத்தன்
    இவ்வெருது

    சாத்தன் என்னும் ஆண்மை முதற்பெயர் இருதிணை ஆண்பாலுக்கும் பொது ஆயிற்று. சாத்தன் என்ற பெயர் வீட்டில் உள்ள மகனுக்கும், அதே வீட்டில் வளருகின்ற ஒரு காளை மாட்டுக்கும் பெயராக அமைந்துள்ளது. எனவே சாத்தன் என்பது இரு திணை ஆண்பாலுக்கும் பொதுவாக வந்துள்ளது. (2) பெண்மை முதற்பெயர்

    சாத்தி
    இவள்
    சாத்தி
    இப்பசு

    சாத்தி என்னும் பெண்மை முதற்பெயர் இருதிணைப் பெண்பாலுக்கும் பொது ஆயிற்று. மேலே கூறியது போலவே, மகளுக்கும், வீட்டில் வளருகின்ற பசுமாட்டிற்கும் சாத்தி என்ற பெயர் பொதுவாக வந்துள்ளது. (3) ஒருமை முதற்பெயர்

    கோதை இவன்
    - உயர்திணை ஆண்பால்
    கோதை இவள்
    - உயர்திணைப் பெண்பால்
    கோதை இது
    - அஃறிணை ஒன்றன்பால்

    கோதை என்ற ஒருமை முதற்பெயர், இருதிணையிலும் ஒருமை மூன்றற்கும் பொதுவாகி வந்துள்ளது. (4) பன்மை முதற்பெயர்

    கோதைகள் இவர்
    - உயர்திணைப் பலர்பால்
    கோதைகள் இவை
    - அஃறிணைப் பலவின்பால்

    கோதைகள் என்னும் பன்மை முதற்பெயர் இருதிணைப் பன்மைக்கும் பொது ஆயிற்று.

    4.2.2 சினைப்பெயர்

    உறுப்பின் காரணமாக வைக்கப்பட்டு வழங்கி வரும் பெயர் சினைப்பெயர் ஆகும். இதுவும் ஆண்மை, பெண்மை, ஒருமை,பன்மை என நான்காகும்.

    (1) ஆண்மைச் சினைப் பெயர்

    முடவன் இவன்
    உயர்திணை ஆண்பால்
    முடவன் இவ்வெருது
    அஃறிணை ஆண்பால்

    முடவன் என்ற ஆண்மைச் சினைப்பெயர் இருதிணை, ஆண்பாலுக்கும் பொதுவாயிற்று.

    (2) பெண்மைச் சினைப்பெயர்

    முடத்தி இவள
    உயர்திணைப் பெண்பால்
    முடத்தி இப்பசு
    அஃறிணைப் பெண்பால்

    முடத்தி என்னும் பெண்மைச் சினைப்பெயர் இருதிணைப் பெண்பாலுக்கும் பொது ஆயிற்று.

    (3) ஒருமைச் சினைப்பெயர்

    செவியிலி இவன்
    - உயர்திணை ஆண்பால்
    செவியிலி இவள்
    - உயர்திணைப் பெண்பால்
    செவிலியி இது
    - அஃறிணை ஒன்றன்பால்

    செவியிலி என்ற ஒருமைச் சினைப்பெயர் இருதிணையிலும் ஒருமை மூன்றற்கும் பொது ஆயிற்று.

    செவியிலிகள் இவர்
    - உயர்திணைப் பலர்பால்
    செவியிலிகள் இவை
    - அஃறிணைப் பலவின்பால்

    செவியிலிகள் என்ற பன்மைச் சினைப்பெயர் இருதிணையிலும் பன்மைக்குப் பொது ஆயிற்று.

    4.2.3 சினைமுதற்பெயர்

    உறுப்பையும் உறுப்பை உடைய முதற்பொருளையும் கொண்டு வழங்கும் பெயர் சினை முதற்பெயர் ஆகும். இதுவும் ஆண்மை, பெண்மை, ஒருமை, பன்மை என நான்காகும்.

    (1) ஆண்மைச்சினைமுதற்பெயர்

    முடக்கொற்றன் இவன்
    - உயர்திணை ஆண்பால்
    முடக்கொற்றன் இவ்வெருது
    - அஃறிணை ஆண்பால்

    இப்பெயர் இருதிணையிலும் ஆண்பாலுக்குப் பொதுவாக வந்தது. (2) பெண்மைச்சினைமுதற்பெயர்

    முடக்கொற்றி இவள்
    - உயர்திணைப் பெண்பால்
    முடக்கொற்றி இப்பசு
    - அஃறிணைப் பெண்பால்

    இப்பெயர் இருதிணையிலும் பெண்பாலுக்குப் பொதுவாக வந்தது. (3) ஒருமைச் சினைமுதற்பெயர்

    கொடும்புற மருதி இவன்
    - உயர்திணை ஆண்பால்
    கொடும்புற மருதி இவள்
    - உயர்திணைப் பெண்பால்
    கொடும்புற மருதி இது
    - அஃறிணை ஒன்றன்பால்

    இப்பெயர் இருதிணையிலும் ஆண், பெண், ஒன்று என மூன்று ஒருமைக்கும் பொதுவாக வந்தது. (4) பன்மைச் சினைமுதற்பெயர்

    கொடும்புற மருதிகள் இவர்
    - உயர்திணைப் பலர்பால்
    கொடும்புற மருதிகள் இவை
    - அஃறிணைப் பலவின்பால்

    இப்பெயர் இருதிணைப் பன்மைக்கும் பொதுவாக வந்தது.

    4.2.4 முறைப் பெயர் 2 (தந்தை-தாய்)

    உறவு பற்றி வரும் பெயர்கள் முறைப்பெயர் எனப்படும்.

    தந்தை இவன்
    ஆண்மை முறைப்பெயர், இருதிணை ஆண்பாலுக்கும் பொது ஆயிற்று.
    தந்தை இவ்வெருது
    தாய் இவள்
    பெண்மை முறைப்பெயர், இருதிணைப் பெண்பாலுக்கும் பொது ஆயிற்று.
    தாய் இப்பசு

    4.2.5 தன்மைப் பெயர் (4)

    தன்மையில் வரும் யான், நான், யாம், நாம் ஆகிய நான்கும் இருதிணைக்கும் பொதுவாகும்.

    யான் நம்பி
    யான் என்ற தன்மைப் பெயர், இரு திணை ஒருமை மூன்றற்கும் பொது ஆயிற்று.
    யான் நங்கை
    யான் பறவை

    யாம் மக்கள்
    யாம் என்ற தன்மைப் பெயர், இரு திணைப் பன்மைக்கும் பொது ஆயிற்று.
    யாம் பறவைகள்

    நான், நாம் என்பனவும் நான் நம்பி, நான் நங்கை, நான் பறவை, நாம் மக்கள், நாம் பறவைகள் என வரும்.

    4.2.6 முன்னிலைப் பெயர் (5)

    நீ நம்பி
    நீ என்ற முன்னிலை ஒருமைப் பெயர் இருதிணை ஒருமை மூன்றிற்கும் பொது ஆயிற்று. நீர் என்ற முன்னிலைப் பன்மைப்பெயர் இருதிணைப் பன்மைக்கும் பொது ஆயிற்று.
    நீ நங்கை
    நீ அன்னம்
    நீர் மக்கள்
    நீர் அன்னங்கள்

    எல்லீர், நீயிர், நீவிர் என்பனவும் இவ்வாறே இருதிணைக்கும் பொதுவாக வரும்.

    4.2.7 படர்க்கைப் பெயர் (2)

    அவர் தாம்
    தாம் என்னும் படர்க்கைப் பெயர் இருதிணைப் பன்மைக்கும் பொது ஆயிற்று
    அவை தாம்

    அவன்தான்
    தான் என்னும் படர்க்கைப் பெயர் இருதிணை ஒருமை மூன்றற்கும் பொது ஆயிற்று
    அவள்தான்
    அதுதான்

    4.2.8 மூவிடப் பொதுப் பெயர் (1)

    நாம் எல்லாம்
    எல்லாம் என்னும் மூவிடப் பொதுப் பெயர் மூவிடங்களுக்கும் பொது ஆயிற்று. இருதிணைப் பன்மைக்கும் பொது ஆயிற்று.
    நீவிர் எல்லாம்
    அவர் எல்லாம்
    அவை எல்லாம்

    4.2.9 பொதுப்பெயர்கள் வினைச்சொல் கொண்டு பால் உணர்த்தும்

    பொதுப்பெயர்கள் தம்மோடு சேர்ந்து வரும் பெயர் கொண்டும் வினைகொண்டும் இன்னபால் என அறியப்படும் என முன்னர்க் கண்டோம். இதுவரை நாம் கண்ட எடுத்துக் காட்டுகளில் பெயர்ச்சொல் கொண்டு பால் தெளிவுபடுவதைக் கண்டோம். இனி, தொடர்ந்து வரும் வினைச்சொல் மூலம் பொதுப்பெயர் பால் உணர்த்துவதற்குச் சில எடுத்துக்காட்டுகள் காண்போம்.

    சாத்தன் வந்தான்
    - உயர்திணை ஆண்பால்
    சாத்தன் வந்தது
    - அஃறிணையில் ஆண்பால்
    குழந்தையைத் தேடித் தாய் வந்தாள்
    - உயர்திணைப் பெண்பால்
    கன்றைத் தேடித் தாய் வந்தது
    - அஃறிணையில் பெண்பால்
    தான் சொன்னான்
    - உயர்திணை ஆண்பால்
    தான் செய்தாள்
    - உயர்திணைப் பெண்பால்
    தான் மேய்ந்தது
    - அஃறிணை ஒன்றன்பால்
    1.
    பால்பகா அஃறிணைப் பெயர்கள் - விளக்குக.
    2.
    பொதுப் பெயர்கள் - அப்பெயர் வரக் காரணம் என்ன?
    3.
    முறைப் பெயர் - பொதுப் பெயராவதை விளக்குக.
    4.
    தன்மைப் பொதுப் பெயர்கள் யாவை?
    5.
    முன்னிலைப் பொதுப் பெயர்களைக் குறிப்பிடுக.
    6.
    படர்க்கைப் பொதுப் பெயர்கள் யாவை?
புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 18:49:07(இந்திய நேரம்)