தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கட்டளை

  •     

    6.2 கட்டளை

        தேவாரப் பாடல்களை இன்ன கட்டளையில் பாட வேண்டும் என்று உமாபதி சிவாசாரியார் திருமுறை கண்ட புராணத்தில் கூறுகிறார். இங்குக் கூறப்படும் கட்டளையைச் சந்தம் என்று கூறலாம். பாடலில் வரும் எழுத்தோசை  அளவுக் கூறுகளைக் கட்டளை என்பர்.

        கட்டு + அளவு - கட்டப்பட்ட அளவு - கட்டளை

    இயல் தமிழில் கட்டளைக் கலித்துறை, கட்டளைக்  கலிப்பா என்ற பாவகைகள் உள்ளன. இவை எழுத்து எண்ணிப் பாடப்படும் பாடலாகும். இயல் தமிழில் வரும்  கட்டளை எழுத்து எண்ணிக்கை உடையது. இசைத்தமிழில் வரும் கட்டளை எழுத்தோசை பற்றியதாகும். செய்யுளில் வரும் கட்டளை யாப்புப் பற்றியது. இசையில் வரும் கட்டளை தாளம் பற்றிய சந்தமாகும்.

    6.2.1 கட்டளைய கீதம்

        இசைத்தமிழில் கட்டளைய கீதம் என்ற இசை உருப்படி பற்றி அடியார்க்கு நல்லார் குறிப்பிடுகிறார். (சிலம்பு 3:10-11) தாளத்திற்கு ஏற்ப எழுத்தசைவுகளையமைத்துக் கட்டிய  சிறு பாடலைக் கட்டளைய கீதம் என்பர். தற்காலத்தில்  இதனைக் கீதம் என்று அழைக்கின்றனர். இது தாளத்திற்கேற்ற எழுத்தளவு உடைய உருப்படியாகும். இவ்வாறு தாள  அனுமானத்துடன்    எழுத்துகளைக்    காட்டும் பொழுது  நெடிலைக் குறிலாகவும் குறிலை நெடிலாகவும் ஒலிக்கும்  சூழலும் தோன்றும். இங்கு, தாளச் சந்த அமைதியே முக்கிய  இடம் பெறும். உதாரணமாக, திருப்புகழ்ப் பாடலில் ஒரு   தொடரைக் காண்போம்.

    தத்தன தனதன தத்தன தனதன
    தத்தன தனதன தனதான
    கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி
    கப்பிய கரிமுக னடிபேணி


    இதில் கைத்தல என்ற சொல்லின் முதலில் வரும் கை என்பது நெடிலாகும். ஆனால் சந்தத்தில் இரு மாத்திரை  பெறும் நெடிலாக இடம் பெறாமல் ஒரு மாத்திரை பெறும் குறிலே சந்தமாக வந்துள்ளது. இசை மரபில் எழுத்துகள்  தத்தமக்குரிய மாத்திரை அளவிலிருந்து மாறி ஒலிப்பதும்  ஒற்றெழுத்துகள் நீட்டி ஒலிப்பதும் ஆகிய மரபுண்டு என்று
    தொல்காப்பியரும் கூறியுள்ளார்.

    அளபிறந்து உயிர்த்தலும் ஒற்றிசை நீடலும்
    உளவென மொழிப இசையொடு சிவணிய
    நரம்பின் மறைய என்மனார் புலவர் (தொல்.எழுத்து. 33)

    6.2.2 தேவாரப் பாடல்களில் கட்டளை

        தேவாரப் பாடல்களில் அமையும் சந்த அமைப்பைக்  கட்டளை என்ற பெயரால் அழைப்பர். தேவாரப் பாடல்கள்  என்று குறிப்பிடும் பொழுது திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர்,  சுந்தரர்    பாடல்களையே    அது  குறிக்கும். இவை  பண்ணமைதியோடு கூடியவை. பண்களின் அடிப்படையில்
    கட்டளைகள் வகுக்கப்பட்டுள்ளன. இவற்றைக் காண்போம்.

        கொற்றவன் குடி உமாபதி சிவாசாரியார் திருமுறை  கண்ட புராணம் என்னும் தம் நூலில் கட்டளை பற்றிய விளக்கங்களைத் தந்துள்ளார்.‘சொல் நட்டபாடைக்குத் தொகை எட்டுக் கட்டளை’    எனத் தொடங்கும் திருமுறை  கண்டபுராணம் ஒன்பது பகுதிகளைக் கொண்டுள்ளது. இதில் இன்னின்ன பண்ணிலே பாடப்பட்டுள்ள பாடல்களுக்கு  இன்னின்ன கட்டளைகள் என்று பகுத்துக்கூறப்பட்டுள்ளது.

    திருஞானசம்பந்தர் பதிகங்கள்


    எண்.
    பண்
    கட்டளை
    1)
    நட்டபாடை
    8
    2)
    தக்கராகம்
    7
    3)
    பழந்தக்கராகம்
    3
    4)
    தக்கேசி
    2
    5)
    குறிஞ்சி
    5
    6)
    வியாழக்குறிஞ்சி
    6
    7)
    மேகராகக்குறிஞ்சி
    2
    8)
    இந்தளம்
    4
    9)
    சீகாமரம்
    2
    10)
    காந்தாரம்
    3

        இவ்வாறே 22 பண்களுக்கும் கட்டளை அமைப்புத்  தரப்பட்டுள்ளது.

        இவை போல் திருநாவுக்கரசர், சுந்தரர் பாடிய  பதிகங்களுக்கும் கட்டளைகள் கூறப்பட்டுள்ளன.

        இக் கட்டளைகள் சிலவற்றால் காணப்படும் சந்த  அமைதிகளைக் காண்போம்.

    • நட்டபாடையில் கட்டளை

          நட்டபாடை எட்டுக் கட்டளைகள் பெறும் என்பர். இதில் முதல் கட்டளை ஞானசம்பந்தர் முதலில் பாடிய சீர்காழிப் பதிகமான தோடுடைய செவியன் என்ற பாடலில் வரும் கட்டளையாகும் .

    தானன தானன தானன தானன தானா தனதானா
    தோடுடை யசெவி யன்விடை யேறியோர் தூவெண்
    மதிசூடிக் காடுடையசுட லைப்பொடி பூசியென் னுள்ளங்
    கவர்கள்வன் ஏடுடையமல ரான்முனை நாட்பணிந்தேத்த
    அருள்செய்த
    டுடை யபிர மாபுரம் மேவிய ெம்மா                 னிவன்றே


    இதில் முதலடியில் என்ன சந்தம் அமைந்ததோ அதுவே ஏனைய அடிகளிலும் உரிய சந்தமாக அமையும். அதுபோல  ஏனைய பதிகப் பாடல்களிலும் இதுவே சந்தமாக அமையும்.  இச் சந்தக் கட்டுக்கோப்புப் பாடலைச் சிதைவு அடையாமல்  காக்கும்.

    • யாழ்முரி

        திருஞானசம்பந்தர்     தந்த     அற்புதமான சந்த  அமைப்புப் பதிகங்களில் ஒன்று யாழ் முரியாகும். இது  காரைக்கால    அடுத்துள்ள தருமபுரத்தில் பாடப்பட்டது.  மேகராகக் குறிஞ்சிப் பண்ணில் அமைந்ததாகும். இதனை  நீலாம்பரி இராகத்தில் பாட வேண்டும். ஆனால் தற்காலத்தில்
    இதனை அடாணா இராகத்தில் பாடி வருகின்றனர். யாழ்  முரியைச் சிலர் பண்ணாகவும் கூறுவர். இது தவறு. இது பண்ணன்று , பதிகப் பெயர் என்பது பலரின் முடிவு.

        இது முரி என்ற இசை வகைக்குரிய பாடலாகும். எடுத்த  இயலும் இசையும் முரித்துப் பாடுதலின் இது முரியாயிற்று. இசையின் உள்ளோசைகள் நிறைந்த பதிகமாகும். தற்காலத்தில் இசைவாணர்கள் பாடிவரும் பல்லவி பாடும் முறைக்கு இப்பதிகம் முன்னோடியான பதிகமாகும். திருமுறைகண்ட  புராணம் இதற்குத் தனிக் கட்டளை கூறவில்லை. இது மேகராகக் குறிஞ்சியின் கட்டளையின் பாற்படும்.

    தான தனத்தனனா - தன - தானன தானனா
    தனா - தனா - தனா - தனா - தனதன தனனா
    மாதர் மடப்பிடியும் மட அன்னமு மன்னதோர்
    நடை யுடைம் மலை மகள் துணையென மகிழ்வர்
    பூதவி னப்படைநின் றிசை பாடவு மாடுவர்
    அவர் படர் சடைந் நெடு முடியதொர் புனலர்
                     (1.136.1)
    இதில்
    தான     
    - 1
    தனத்தனனா
    - 1
    தன     
    - 1
    தானன
    - 1
    தானனா
    - 1
    தனா
    - 4
    தனதன
    - 1
    தனனா
    - 1
    -----
    11
    -----
    இதில் சந்தம் முரிந்து வருகிறது.
    • திருஇருக்குக் குறள்

    ஞானசம்பந்தர் பாடிய     சந்தமார் இன்னிசைப் பாவில் திருஇருக்குக்    குறளும்     ஒன்றாகும்.  இது ஒரு புதுவகையான இசை உருப்படியாகும். இது இரு சீரசையாகிய குறளடியால் அமைந்தது . வட மொழியாகிய இருக்கு வேதத்தினைப் போன்று தமிழ்மறையாக இது
    திகழ்வதால் சேக்கிழார் இதனைத் தமிழ் இருக்குக் குறள்  என்பர். இது குறிஞ்சிப் பண். தலம் திருவீழிமிழலை.

    தனை தானனா தனன தானனா
    வாசி தீரவே காசு நல்குவீர்
    மாசின் மிழலையீர் ஏச லில்லையே (1.92-1)

    இதில் தனன தானனா என்ற சந்தம் இருமுறை வந்துள்ளது.

        தேவாரப் பதிகங்களையும் திவ்விய    பிரபந்தப் பதிகங்களையும் இவ் வகையில் காணலாம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 23:55:44(இந்திய நேரம்)