Primary tabs
xxix
உடம்படுமெய் பற்றி நன்னூலார்போலவே குறிப்பிட்டு, உரையில் ஏகரம் அளபெடைக்கண் ஈறாகவரும் ஆதலின் அந்நிலையில் உண்டேஎயிகல், சேஎவடைந்தது என எகரத்தின் முன்னும் யகர உடம்படுமெய்யும் வகர உடம்படுமெய்யும் ஏற்றபெற்றி வருவதற்கு வாய்ப்பு உண்மையையும், ‘விண்வத்துக் கொட்கும்’ எனச் சிறுபான்மை உடம்படுமெய் புள்ளியீற்றின் முன்னும் வருமாற்றையும் சுட்டி, உடம்படுமெய் வருதல் ஒருதலையன்று என்பதனையும் நுவல்கிறார்.
‘எண்மூ எழுத்தீற்று எவ்வகை மொழிக்கும் - முன்வரு ஞநமய வக்கள் இயல்பாம்’ என்னும் இவர் அவ்வியல்பு புணர்ச்சிக்குக் குறிப்பிடும் எடுத்துக்காட்டுக்களில், பெயர் வினை இடை உரி என்ற நான்கும் இடம்பெறுகின்றன. தொல்காப்பியனார் குறிப்பிட்டுள்ள ‘மெல்லெழுத்து உறழ்தல’ அவர்காலத்துக்குப் பின் தொடர் மொழிக்கண் மாத்திரமன்றி ஓரெழுத்தொருமொழி ஈரெழுத்தொருமொழி என்பனவற்றின்கண்ணும் பிற்காலத்தில் நிகழ்வதனை உட்கொண்டு, நச்சினார்க்கினியர் சுட்டியவாறே எடுத்துக்காட்டுக்களில் தொடர்மொழி அல்லனவற்றையும் சுட்டுகிறார். ‘மண்யாத்த’ ‘மண்ஞாத்த’ முதலிய எழுத்துப்போலிகளும் ஈண்டே இடம் பெறுகின்றன. இந்நூற்பாப் பகுதியில் ‘னலணளவழி ந திரியும்’ என்ற செய்தி சுட்டப்பட்டமையின், தொல்காப்பியனாரை ஒரு வழி அடியொற்றி ‘ண ள முன் ட ண வும்’ என்ற மெய்யீற்றுப் புணர்ச்சிச் செய்தியை இயை புபற்றி ஈண்டே குறிப்பிட்டுள்ளமை உளங்கொளத்தக்கது.
பின், பொதுப்பெயர் உயர்திணைப்பெயர்ப் புணர்ச்சி பற்றிய நூற்பாவினை நன்னூலை அடியொற்றி நுவன்று, தொல்காப்பியனார் ‘உயிரீறாகிய’ ,’அவற்றுள், இகர இறு பெயர்’ ‘அஃறிணை விரவுப்பெயர்’ என்றமைத்த நூற்பாக்களில் நச்சினார்க்கினியர் சுட்டும்