தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Paripadal


இ-மகன்:- அனைத்தாக,
         வெண்ணெய்த் தெழிகேட்கும் அண்மையால் சேய்த்தன்றி
         அண்ணணித் தூராயின் நன்பகற் போழ்தாயின்
         கண்ணோக்கு ஒழிக்கும் கவின்பெறு பெண்ணீர்மை
         மயிலெருத்து வண்ணத்து மாயோய்மற் றின்ன
         வெயிலொ டெவன் விரைந்துசேறி உதுக்காண்
         பிடிதுஞ்சு அன்ன அறைமேல நுங்கின்
         தடிகண் புரையும் குறுஞ்சுனை யாடிப்
         பனிப்பூந் தளவொடு முல்லை பறித்துத்
         தனிக்காயாந் தண்பொழில் எம்மொடு வைகிப்
         பனிப்படச் செல்வாய்நும் ஊர்க்கு;

இ-மகள்:- இனிச் செல்வேம் யாம்
         மாமருண் டன்ன மழைக்கண்சிற் றாய்த்தியர்
         நீமருட்டுஞ் சொற்கண் மருள்வார்க் குரையவை
         ஆமுனியா ஏறுபோல் வைகல் பதின்மரைக்
         காமுற்றுச் செல்வாயோர் கட்குத்திக் கள்வனை
         நீஎவன் செய்தி பிறர்க்கு;
         யாம்எவன் செய்து நினக்கு.

இ-மகன்:- கொலையுண்கண் கூரெயிற்றுக் கொய்தளிர் மேனி
         இனைவனப்பின் மாயோய் நின்னிற் சிறந்தார்
         நிலவுலகத் தின்மை தெளிநீ வருதி
         மலையொடு மார்பமைந்த செல்வன் அடியைத்
         தலையினால் தொட்டுற்றேன் சூள்;

இ-மகள்:- ஆங்கு உணரார் நேர்ப! அது பொய்ப்பாய் நீயாயின்
          தேங்கொள் பொருப்பன் சிறுகுடி எம்ஆயர்
          வேந்தூட் டரவத்து நின்பெண்டிர் காணாமல்
          காஞ்சித்தா துக்கென்ன தாதெரு மன்றத்துத்
          தூங்குங் குரவையுள் நின் பெண்டிர் கேளாமை
         ஆம்பற் குழலால் பயிர்பயிர் எம்படப்பைக்
         காஞ்சிக்கீழ் செய்தோம் குறி.

(முல்லைக்கலி - 8.)

என்பதாம்.

அன்பர்களே! இந் நாடகத்தினைப் பொருளுணர்ந் தோதுந்
திருவுடையார்க்கு இதனினும் சிறந்த இலக்கியவின்பம் கெழுமிய
உளக்காட்சி நாடகம் பிறிதொன்றுளதாகக் கருதவும் இயலுமோ?
இங்ஙனமே நாடக வழக்காகப் படைத்தற்குக் கலியும் பரிபாட்டுமே தகுந்த
பாடல்கள் ஆதற்கு அவற்றின் இசைநலம் கெழுமிய யாப்பமைதியே
காரணமாகும். இத்தகைய நாடகம் பல, பரிபாடலின் கண் உள்ளன.
அவற்றை நூலின்கட் காண்க.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 12:59:13(இந்திய நேரம்)