Primary tabs
இங்ஙனம் ஆரியத்தால் ஏற்பட்ட அவலங்கள் போதாவென்று, புத்தம் சமணம் முதலிய துன்பமதங்களும் உலகாயதம் பூதம் முதலிய சிற்றின்ப மதங்களும், தமிழகத்தை அளவிறந்து அலைக்கழித்தன.
7. திருவள்ளுவர் திருக்குறளியற்றிய நோக்கம்
ஆரியத்தாலும் நம்பா ( நாத்திக) மதங்களாலும், சிறப்பாக ஆரியத்தால், குமுகாயத்துறையிலும் சமயத்துறையிலும் தமிழகத்திற்கு ஏற்பட்ட எல்லாக் கேடுகளும் பாடுகளும் துன்பங்களும் தொல்லைகளும் நீங்கி எல்லாரும் இன்பமாக வாழவேண்டுமென்னும் இன்னருள் நோக்கங்கொண்டே, தெள்ளிய மனமும் ஒள்ளிய அறிவும் திண்ணிய நெஞ்சும் நுண்ணிய மதியும் கொண்ட திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார் என்க.
"அந்தண ரென்போர்
அறவோர்மற் றெவ்வுயிர்க்குஞ்
செந்தண்மை பூண்டொழுக லான்".
"அறத்தாற்றின் இல்வாழ்க்கை யாற்றின் புறத்தாற்றிற்
போஒய்ப் பெறுவ தெவன்".
"ஒழுக்க முடைமை குடிமை யிழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்".
"மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்".
"அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று".
"ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூன்மறப்பர்
காவலன் காவா னெனின்".
"பிறப்பொக்கு மெல்லா வுயிர்க்குஞ் சிறப்பொவ்வா
செய்தொழில் வேறுமை யான்".
"சுழன்றுமேர்ப் பின்ன துலகம் அதனால்
உழந்தும் உழவே தலை".
"உழுவா ருலகத்திற் காணியஃ தாற்றா
தெழுவாரை யெல்லாம் பொறுத்து".
என்பன ஆரியத்தைக் கண்டித்தனவாகும் பிறவற்றைக் கடிந்ததை ஆங்காங்கு நூலுட் காண்க.