தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

| Choolamani |


"மெய்ப்பொரு டெரிதல் மற்றப்
             பொருண்மிசை விரிந்த ஞானம்
அப்பொருள் வழாத நூலி
            னருந்தகை யொழுக்கந் தாங்கல்
இப்பொரு ளிவைகள் கண்டா
            யிறைவனால் விரிக்கப் பட்ட
கைப்பொரு ளாகக் கொண்டு
            கடைப்பிடி கனபொற் றாரோய்"
 
     எனவும் வரும் இச்செய்யுள்களின் அருமையை நோக்குக. இங்ஙனமே இப்புலவர் பெருமான் இக்காப்பியம் வறிய அரசர் வரலாறாக மட்டும் தோன்றிவிடாமல் சிறந்த மெய்ஞ்ஞான நூலாகவே திகழவேண்டும் என்னும் கருத்தால் இடையிடையே அதற்குரிய செவ்விகளைப் படைத்துக்கொண்டு அருகக்கடவுளை வழிபடும் வகையினாலே பாடும் பாடல்கள் பத்திச்சுவை நிரம்பித் ததும்புவனவாகத் திகழ்கின்றன. அவைகள் ஆழ்ந்த பொருளுடையனவாகவும் கடவுளியல்பினை நன்கு உணர்த்துவனவாகவும் விளங்குகின்றன. மேலும் இவை இந்நூலாசிரியர்க்கு அருகக் கடவுளின்பாலுள்ள அன்பையும் தெற்றெனப் புலப்படுத்துகின்றன. எடுத்துக்காட்டாக அவற்றினுள் ஒன்றையீண்டுக் காட்டுவாம்.
 
 
"ஒளியாகி யுலகாகி நீவிரிந்தா யென்கோ
           வுலகெலா நின்னொளியி னுள்ளடங்கிற் றென்கோ
வளியார வுலகநீ யாள்கின்றா யென்கோ
          வமருலகு தானின்ன தடியடைந்த தென்கோ
விளியாத மெய்ப்பொருளை நீவிரித்தா யென்கோ
           நீவிரித்த வாறேமெய்ப் பொருள்விரிந்த தென்கோ
தெளியாம லில்லைநின் றிருவடிகண் மெய்ம்மை
            தெளிந்தாலுஞ் செவ்வனே தெரிந்துரைக்க லாமே"
 
எனவரும் இச் செய்யுளை ஓதியுணர்க. இத்தகைய செய்யுட்கள் இந்நூலின்கண் யாண்டும் மலிந்து கிடக்கின்றன.

இனி இவ்வாறு நூல்பயில்வோர் உளத்தே அங்கங்கே மெய்யறிவினை வித்திச் செல்லும் இப்புலவர் பெருமான் நகை முதலிய எண்வகைச் சுவைகளும் இடந்தோறும் பொதுளும்படி வரலாற்றினைக் கூறிச் செல்லும் அழகும், கதை உறுப்பினர்கள் தத்தம் தகுதிக்கேற்பச் சொல்லாட்டம் நிகழ்த்தும்படி செய்யும் சூழ்ச்சியும் பெரிதும் இனியவாம். வித்தியாதர வேந்தனாகிய சடிமன்னன் தன் மகளாகிய சுயம்பிரபையின் மணப் பருவம் கண்டு இவளை இவளுக்கேற்ற கணவனோடு கூட்டுவித்தல் வேண்டுமே


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 12:38:26(இந்திய நேரம்)