தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kadavul Vaalthu - Urai-உரை



காப்பு

 
பூமேவு புல்லைப் பொருந்துகும ரேசர்மேல்
தேமே வியசதகம் செப்பவே - கோமேவிக்
காக்கும் சரணவத்தான் கம்பகும்பத் தைந்துகரக்
காக்குஞ் சரவணத்தான் காப்பு.
 
(இதன்பொருள்.) பூமேவு புல்லைப் பொருந்து குமரேசர் மேல் -
புவியிலே சிறப்புற்ற திருப்புல்வயலில் எழுந்தருளிய குமரக் கடவுள்பால்,
தேமேவிய சதகம் செப்ப - இனிமை பொருந்திய சதகத்தைக் கூற,
கோமேவிக் காக்கும் சரவணத்தான் - தலைமையாக இருந்து காப்பாற்றும்
சரவணத்திலே தோன்றிய முருகனும், கம்பம் - (அடியவருடைய
அன்பாகிய) கட்டுத்தறியிலே பிணிப்புண்ட, கும்பத்து ஐந்துகரம் கா
குஞ்சரவணத்தான் - குடம் போன்ற மத்தகத்தினையும் ஐந்து
திருக்கைகளையும் உடைய, காட்டில் உறையும் யானையின்
வடிவத்தையுடைய மூத்த பிள்ளையாரும், காப்பு - காவலாகும்.

(விளக்கவுரை.) புல்லை-திருப்புல் வயல் (மரூஉ). ஒரு சொல்
தன் வடிவம் திரிந்து மருவி வருவது மரூஉ. மருவுதல் - பல நாள்
பழகி வருதல். சென்னைப்பட்டினம் என்பது சென்னை எனவும்,
கோயம்புத்தூர் கோவையெனவும், பூவிருந்தவல்லி பூவையெனவும்
வருவனவும் மரூஉ ஆகும்.

(கருத்து)குமரேச சதகத்தினைப் பாடுதற்கு மூத்த பிள்ளையாரும்
 (விநாயகரும்) முருகனும் அருள் புரிவார்கள்.

(வடசொல்) குமரன் - இளையோன், ஈசன் - தலைவன், சர
                      வணம் - நாணல். கரம்-கை. குஞ்சரம் - யானை,
                      வணம் (வர்ணம்) - வடிவு (அழகு).


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 25-02-2019 10:52:44(இந்திய நேரம்)