Primary tabs
துடைத்து நக்கிச் சுவை காணும்
சூற்பேய்க் கின்னும் வாரீரோ'
எனக் கூறி உணர்த்தப்பட்டவாறு காண்க.
இனி, அக்கால மக்கள் அணியாகப் பேய்கள் அணிந்தமை
கூறுமிடத்துக், கையிலணியும் வளை, காலிலணியும் பாடகம், விடுகம்பி,
இரட்டை வாளி என்னும் காதணி, தோளில் அணியும் வாகுவலயம்,
ஒற்றைச் சரடு, பலநிற மணிகள் கோத்த வன்னசரம் என்பனவும்,
திறைப் பொருள் கூறுமிடத்து, மணிமாலை, முத்துமாலை, பதக்கம்,
மகரக்குழை என்னும் காதணி, நெற்றிப்பட்டம் என்பனவும்
குறிக்கப்படுகின்றன.
அக்காலப் பெண்மக்கள் மிக மென்மையான உடைகளையும்
உடுத்திருந்தனர் என்பது,
கலைபோய் அகலக் கலைமதியின்
நிலவைத் துகிலென் றெடுத்துடுப்பீர்'
என்னும் ஆசிரியர் கூற்றாற் புலனாகின்றது.
அக்காலத்தே குழந்தை நடை பயின்று மழலை மொழியத்
தொடங்கும் பருவத்தே காப்புக் கடவுளாகிய திருமாலின் ஐம்படையாகிய
சங்கு, சக்கரம், தண்டு, வில், வாள் என்னும் ஐந்தன் உருவைப் பொன்னால்
இயற்றி, அவற்றைக் கோத்து அணிதல் வழக்கமாம். குலோத்துங்கன்
பிறந்து நடைபயின்று விளங்கியபொழுது,
தன்படைக ளானதிரு ஐம்படைத ரித்தே'
எனக் கூறப்பெறுமாறு காண்க. இஃது ஐம்படைத் தாலி எனக்
கூறப்படுவதால் இவ்வைந்துருவான் இயன்ற அணியைக் கோத்துக்
கழுத்தில் அணிவதே மரபாம் எனத் தெரிகிறது. இஃது ஒரு குறிப்பிட்ட
பருவத்தேதான் அணியப்பெறுவது என்பது,