Primary tabs
(54)
என நிகழ்கின்ற இச்செய்யுளோடு மணிவாசகப் பெருமானும் நம் முள்ளத்தே எழுந்தருளுதலா லறிக.
இனி, இப்படலத்தில் வேடிக்கை பார்க்கவோ, விளையாடவோ, சிறிதும் இடமில்லை. அறிவுக்குப் பேருழைப்பையே இப்படலம் உண்டாக்கிவிடுகின்றது. எங்கும் ஆழ்ந்து ஆராய்தல் வேண்டும். இப்படலத்தின் சிறப்பை இப் புறவுரையில் விரிப்பது மிகை. நூலை ஓதியும் வல்லார்வாய்க் கேட்டும் இவற்றிற்கும் அப்பாலாக ஆண்டவன் அருள் கைவரப் பெற்றும் உணர்தற்குரியது இந்தப் படலம்.
எட்டாவதாக வமைந்த இப்படலம் மறைஞானசம்பந்தநாயனார் அருளிச் செய்த சிவதருமோத்தரம் என்னும் சைவாகமத்தைக் கச்சியப்ப முனிவர் எளிதாக யாவரும் உணரும்படி செய்தருளியவாறாம். சிவதருமோத்தரம் தமிழ் நூலேயாயினும் அரிதுணர் பொருளதாகலின் இத்தணிகைப் புராணத்தை ஓதுபவர் அவ்வாகமப்பொருளையும் எளிதாக உணர்ந்து கொள்ளுக என்றெழுந்த நல்லுணர்ச்சியால் அடிகளார் அந்நூற் பொருளைச் சிறிதும் எஞ்சாமல் இப்படலத்தி லமைத்திருக்கின்றார்.
இதன்கண், சைவ சமயத்தார்க்குரிய ஒழுக்கமும் சிவஞான தானவியலும் ஐவகை வேள்வியியலும் பலவிசிட்ட காரணவியலும் சிவதருமவியலும் பாவவியலும் சுவர்க்கநரகவியலும் செனன மரணவியலும் சுவர்க்கநரக சேடவியலும் சிவஞானயோகவியலும் பரிகாரவியலும் கோபுரவியலும் எனப் பன்னிரு கூறுபடுத்து அம்மறைஞான சம்பந்தநாயனாராற் கூறப்பட்ட செய்திகள் கூறப்பட்டுள்ளன. சிவதரு மோத்தரத்தில் ஆயிரத்திருநூற்றெட்டுச் செய்யுளில் அமைந்துள்ள இச்செய்திகளைக் கச்சியப்ப முனிவர் ஐநூற்றுப் பதின்மூன்று செய்யுளில்
கூறியிருக்கின்றனர்.
முற்கூறப்பட்ட அகத்தியனருள்பெறு படலம் ஈறாகவமைந்த படலங்கள் பெரும்பான்மைபற்றி அறத்துப்பாலாகக் கொள்ளலாம். சீபரிபூரணநாமப் படலத்திலிருந்து இராமனருள்பெறுபடலமுடியும் துணையும் பொருட்பாலாகக் கொள்ளலாம். இவற்றுள் இச்சீபரி