Primary tabs
பூரண நாமப்படலத்தில் சூரன் முதலியோர்வரலாறும் அவர்கள் அமரர்க்குச் செய்த துன்பங்களும் அமரர்க்காக அறுமுகக் கடவுள் அவுணர் மேற்சென்று போராற்றி வென்றமையும் அறுமுகனுக்கு அவுணர் ஊர்தியும் கொடியுமான செய்தியும் கூறப்படுகின்றன. இனி, சூரன் முதலிய அவுணர்கள் என்றது உயிரின்கண் அநாதி யாகவமைந்த ஆணவ இருளை உருவகப்படுத்த வாறாம். அமரர்கள் என்றது உயிர்க்கியல்பான நல்லியல்புகளை உருவகப்படுத்த வாறாம். அமரர் அவுணர்கள் செய்யும் இடுக்கணுக்கு ஆற்றாமல் அறுமுகனுக்கு அடைக்கலமானது காமமுதலியவற்றால் துன்புற்ற உயிர் மெய்யுணர்வு பெற்று இறைவன்பாற் றஞ்சம் புகுவதனை உருவகப்படுத்தவாறாம். ஆறுமுகப் பெருமான் அமரர் வேண்டுகோட் கிணங்கிப் போர் மேற்சென்று அவுணரை அழித்து அமரரைப் பாதுகாத்தமை, இறைவன் தன் முனைப்பற்று அடைக்கலம் புக்க உயிரைப் பாதுகாத்து வீடு நல்குவதனை உருவகப் படுத்தோதியவாறாம். இங்ஙனம் கொள்ளல் தத்துவ நூலோர் கருத்தாகும். இதன்கண் கச்சியப்ப முனிவர் போர் நிகழ்ச்சியை வீரச்சுவைபடக் கூறியிருப்பது பாராட்டற்பாலது. செவ்வேள் அமரர்க்கிடுக்கண்செய்த அவுணர்மேற் சினந்து போய்ப்போரியற்றி வாகை சூடி மீண்டும் வந்து சினந்தணிந்து அமைந்திருந்தமையால் இது தணிகை என்று வழங்கப்படுகின்றது என்பது புராணக் கருத்து. இத் தொடர்புபற்றி இப் பெரும் போர் நிகழ்ச்சி இங்குக் கூறப்பட்டபடியாம்.
இதன்கண் போர் நிகழ்ச்சிகள்ள நந் தமிழ்ப் புறப்பொருளிலக்கண நெறிபற்றிக் கூறப்படுகின்றன.
இதன்கண் தணிகையிலுள்ள பிரமதீர்த்த வரலாறு கூறப்படுகின்றது.
இதன்கண் விட்டுணு தீர்த்த வரலாறும் - பெருமையும் கூறப்படுகின்றன.
(12), (13), (14), இம்மூன்று படலங்களும் அவ்வாறே இந்திரன் முதலியோர் வரம் பெற்றமையும் தீர்த்தப் பெருமையும் இயம்புகின்றன.
இப்படலத்தில் சுந்தரி அமுதவல்லி என்னும் இருமகளிர் முருகப் பெருமானைக் கொழுநனாக அடைதற்கு எண்ணி மலர்விரி