நாம் வாழும் உலகம் 500கோடி ஆண்டுகட்கு முன்னர்க் 
 கதிரவனிலிருந்து கழன்று சிதறிய ஓர் அனற்பிழம்பு. கழன்ற பிழம்பு நீள்வட்டப் பாதையில் கதிரவனைச் சுற்றிச் சுழன்றது.
  
 
 
 	 	சுழற்சி விசையினால் நிலவுருண்டையின் மேற்பகுதி 
 குளிர்ந்து இறுகியது. உருண்டு திரண்டதால் உலகம் (உல்-உலம்-உலகு-உலகம்) என்றும், 
 அண்டவெளியில் ஞாலுவதால் (தொங்குவதால்) ஞாலமென்றும் பெயர்சூட்டி வழங்கினர் தண்டமிழ்ச் 
 சான்றோர்.
  
 
 
 
 	 	குளிர்ந்த நிலத்தின் நடுப்பகுத உயிர்கள் 
 வாழும் தகுதி பெற்றது. முதலில் நிலைத்திணை (தாவரம்) உயிரியாகிய ஓரறிவுயிரே தோன்றியது. 
 பின்னர்ப் படிப்படியாக மற்றை வுயிரினங்கள் தோன்றின. மற்ற உயிரினங்கள் உயிர்வாழ 
 ஓரறிவுயிரே அடிப்படையாக அமைந்தது.
  
 
 
 	 	தொல்காப்பியர் அறிவு அடிப்படையில் உயிரினங்களை 
 அறுவகையாகப் பகுத்துத் தமக்கு முன்னர் வாழ்ந்த சான்றோர் உயிரினங்களை நெறிப்படுத்திய 
 பாங்கினைத் தெரிவிக்கின்றார்.
  
 
 
 	 	ஆறறிவுடைய மனிதனே உலகத்தில் இறுதியாய்த் தோன்றிய 
 உயிரினம் ஆவான்.
  
 
 
 	 	        "மக்கள் தாமே ஆறறி வுயிரே" 
  
 
 
 
 	 	மக்கள் முதன்முதல் தோன்றிய இடம் ஞாலத்தின் 
 நடுப் பகுதியே. அந்த நடுப்பகுதியே பண்டு குமரிக்கண்டம் (இலெமூரியா) என வழங்கப்பட்டது. 
 முதல் மாந்தன் தோன்றிய இடம் குமரிக்கண்டமே எனப் பல்வகைச் சான்றுகளால் 
 மொழிஞாயிறு பாவாணர் அறுதியிட்டு உறுதியாகக் கூறுகிறார்.
  
 
 
 
 	 	        "எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே"
 
  
 
 
 
 	 என்பார் தொல்காப்பியர். நிலைத்திணைக்குரிய பெயர்களுள் 
 பல கண்டப் பெயராகவும், நாட்டுப் பெயராகவும், ஊர்ப் பெயராகவும், வழங்கிவந்தன 
 என்பதை இன்றும் அவற்றுக்கு வழங்கும் பெயர்களால் அறிகிறோம்.
  
 
 
 
 	 	பனை - பனைநாடு, திருப்பனந்தாள், பனைமரத்துப்பட்டி
  
 
 
 	 	
 	தெங்கு - தெங்கநாடு, திருத்தெங்கூர்
  
 
 
 	 	
 பாலை - பாலைநாடு, பாலையூர்