தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5052


அறப்போர்செய்து     துறக்கம்   பெறுங்  கருத்தினாற்   சேறலானும்,
வாளினுந்தாளினும்     நிறையினும்      பொறையினும்      வென்றி
யெய்துவோரும் மனையோரை நீங்கிச்  சேறலானும்  பிரிவுள  தாயிற்று.

பாலை தனக்கென ஒரு நிலமின்றி நால்வகை  நிலத்தும்  நிகழுமாறு
போல,    முற்கூறிய   புறத்திணை   நான்கும்    இடமாக   வாகைத்
திணைநிகழ்தலிற் றனக்கு நிலமின்றாயிற்று. ‘‘நாளு நாளு  மாள்வினை
யழுங்க,  வில்லிருந்து  மகிழ்வோர்க்  கில்லையாற் புகழ்’’
  என
ஆள்வினைச்  சிறப்புக்  கூறிப் பிரியுமாறு போல,  இதற்குப் துறக்கமே
எய்தும்     ஆள்வினைச்சிறப்புக்    கூறலுங்     கொள்க.    பாலை
பெருவரவிற்றாய்த்   தொகைகளுள்   வருமாறு    போல   வாகையும்
பெருவரவிற்றாய் வருதலும் கொள்க.

வாகைத்திணையது பொது இலக்கணம்
 

74.
தாவில் கொள்கைத் தத்தங் கூற்றைப்
பாகுபட மிகுதிப் படுத்த லென்ப.
 

இஃது அவ் வாகைத்திணைக்குப் பொதுவிலக்கணங் கூறுகின்றது.

(இ-ள்.)     தாவில்   கொள்கைத்  தத்தங்  கூற்றை  -  வலியும்
வருத்தமுமின்றி   இயல்பாகிய   ஒழுக்கத்தானே    நான்கு,  வருணத்
தோரும்  அறிவருந்தாபதர்  முதலியோருந் தம்முடைய  கூறுபாடுகளை;
பாகுபட      மிகுதிப்படுத்தல்      என்ப     -      இருவகைப்பட
மிகுதிப்படுத்தலென்று கூறுவர் ஆசிரியர் எ-று.

இருவகையாவன,   தன்னைத்  தானே   மிகுதிப்படுத்தலும்   பிறர்
மீக்கூறுபடுத்தலுமாம்.   இனி   இருவகைக்குள்  உறழ்ச்சியாற்   பெற்ற
வென்றியை    வாகையெனவும்   இயல்பாகப்   பெற்ற    வென்றியை
முல்லையெனவுங்    கூறுவர்.    படுதலென்னாது   படுத்த    லெனப்
பிறவினையாற்   கூறினார்.   அவர்   தம்மினுறழாதவழியும்   ஒருவன்
அவரை   உறழ்ந்து   உயர்ந்தோர்   இவரென்  றுரைத்தலும்  வாகை
யென்றற்கு.  ஒன்றனோடு  ஒப்பு  ஒரீஇக்   காணாது  மாணிக்கத்தினை
நன்றென்றாற்போல உலகமுழுதும்  அறியும்  உயர்ச்சியுடைமையும் அது.
‘தாவில்   கொள்கை’   யெனவே   இரணியனைப்போல   வலியானும்
வருத்தத்தானுங் கூறுவித்துக் கோடல் வாகையன்றாயிற்று.          (19)
 

வாகையின் சிறப்பிலக்கணம் பொதுவகையாற் கூறல்
 

75.
அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும்
ஐவகை மரபி னரசர் பக்கமும்
இருமூன்று மரபி னேனோர் பக்கமும்
மறுவில் செய்தி மூவகைக் காலமும்
நெறியி னாற்றிய வறிவன் றேயமும்
நாலிரு வழக்கிற் றாபதப் பக்கமும்
பாலறி மரபிற் பொருநர் கண்ணும்
அனைநிலை வகையோ டாங்கெழு வகையிற்
றொகைநிலை பெற்ற தென்மனார் புலவர்.
இது வாகைத்திணைக்குப் பொதுவிலக்கணங் கூறினார்.
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 07:41:18(இந்திய நேரம்)