தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

5-தமிழில் பாரத நூல்கள்

  • 5.2 தமிழில் பாரத நூல்கள்

    தமிழில் உள்ள இலக்கியக் குறிப்புகள் சங்க காலத்திலேயே பாரத நூல் தமிழில் இருந்திருக்க வேண்டும் என்பதைத் தெரிவிக்கின்றன. பெரும்பான்மையான சங்க இலக்கியங்களுக்குக் கடவுள் வாழ்த்தைப் பெருந்தேவனார் பாடியுள்ளதாக அறிய முடிகிறது. இவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் என்று அழைக்கப்பட்டுள்ளார். இவர் பாடிய பாரத நூல் முழுவதும் கிடைக்கவில்லை. இவர் சங்க காலத்தைச் சேர்ந்தவராகக் கருதப்படுகிறார்.

    பாரத வெண்பா

    கி.பி. 9ஆம் நூற்றாண்டில் பாரத வெண்பா என்ற ஒரு நூல் தோன்றியுள்ளது. இந்நூலை இயற்றியவர் பெயரும் பெருந்தேவனார் என்பதாகும்.

    வில்லி பாரதம்

    இந்நூலுக்குப் பின்னர் வில்லிபுத்தூரார் பாரதம் பாடியுள்ளார். இந்நூல் இவர் பெயரையே முன் ஒட்டாகக் கொண்டு வில்லி பாரதம் என்று அழைக்கப்படுகின்றது.

    வில்லிபுத்தூரார் பாடிய பாடல்களோடு வேறு சில பாடல்களையும் சேர்த்துப் பாடியோர் நல்லாப்பிள்ளை, முருகப்பிள்ளை ஆகியோர் ஆவர். இவர்கள் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி, வில்லி பாரதத்தை நிறைவு செய்ததாகக் கூறுவர். 18ஆம் நூற்றாண்டில் அட்டாவதானம் அரங்கநாதக் கவிராயர் என்பவர் 2477 பாடல்கள் பாடி வில்லி பாரதக் கதையோடு சேர்த்து விட்டதாகத் தெரிகின்றது.


    அருணிலை விசாகன் பாரதம்

    அருணிலை விசாகன் பாரதம் என்ற ஒரு நூல் 13ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டதாகத் தெரிகிறது. இதனை மூன்றாம் குலோத்துங்க சோழ மன்னன் கல்வெட்டால் அறிய முடிகிறது. இதனை இயற்றிய புலவர், குன்றவத்தனக் கோட்டத்து இல்லத்தூர் நாட்டு அரும்பாக்கமுடைய அருண்நிலை விசாகன் திரைலோக்ய மல்லன் வத்ஸ ராஜன் என்பவர் ஆவார்.

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 21:27:14(இந்திய நேரம்)