Primary tabs
-
1.2 காப்பியப் பண்புகள்
காப்பியத்திற்கென ஒருசில தனித்த பண்புகள் உண்டென அறிஞர்கள் கருதுகின்றனர். காப்பியம் வீரப்பண்பு உடையதாகவும் நாடகத் தன்மை உடையதாகவும் இருக்கும். சமுதாயக் குரல் ஆங்காங்கே காப்பியத்துள் அமைந்து இருக்கும். தேசியப் பண்பு இருக்க வேண்டும். அவ்வக்கால இடச்சூழல், அறக்கருத்து, கதையமைப்பு, பாத்திரப் படைப்பு, கிளைக் கதை ஆகியன அமைந்து இருக்க வேண்டும். இத்தகைய காப்பியப் பண்புகளை உலக மொழிகள் அனைத்திலும் காணலாம். ஹோமரது இலியட், ஒடிசி போன்ற பழம்பெரும் காப்பியங்கள் தொடங்கி, உலக மொழிகளில் தோன்றியுள்ள பிற காப்பியங்களிலும் இத்தகைய பண்புகள் இருப்பதைக் காண முடிகின்றது.
தமிழில் தோன்றியுள்ள காப்பியங்களை நோக்கும்போது முதல்நூல், வழிநூல், சார்புநூல், எதிர்நூல் என நான்கு வகையாகத் திகழ்வதைக் காணலாம். தமிழில் காணப்பெறும் காப்பியங்கள் குறித்து ஓர் அறிஞர் எடுத்துரைக்கையில், காப்பியத்தின் தொடர்ச்சியாக மற்றொரு காப்பியம் அமைவது; ஒரு காப்பியத்தின் எதிராகப் பிறிதொரு காப்பியம் உருவாவது; ஒரு காப்பிய ஆக்கத்தில் ஓராசிரியருக்கு மேல் ஈடுபடுவது; ஒரு காப்பியக் கூறு பிறிதொரு காப்பியம் ஆவது எனக் காப்பியங்கள் உருவாவதைப் பல வகையாகக் குறிப்பிட்டுள்ளார்.