தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

4-3:5-பாரதியின் வேண்டுதல்

  • 3.5 பாரதியின் வேண்டுதல்

    ‘வேண்டுதல்’ என்பது, கடவுள் தம் சக்தியால் பக்தர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வதற்காகக் கேட்பது என்று பொருள்படும். மக்கள் தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்பட்டால், அந்தத் துன்பம் நீங்கவும், உலக வாழ்க்கைக்குத் தேவையான விருப்பங்கள் நிறைவேறவும் இறைவனிடம் வேண்டுவர்.

    அடியார்களின் வேண்டுதல்

    இறைவனிடம் மிகுந்த ஈடுபாடு கொண்ட பக்தர்கள் தங்கள் துன்பம் நீங்க இறைவனிடம் வேண்டவில்லை. இறைவனோடு சேர வேண்டும் என்றே விரும்புகின்றனர். இந்த மண்ணுலக வாழ்க்கைத் துன்பமானது. ஆகவே, பிறவி வேண்டாம் என்று அவர்கள் பாடுவதைக் காணலாம். காரைக்கால் அம்மையார் சிவபெருமானிடம்,

    பிறவாமை வேண்டும் மீண்டும்
          பிறப்பு உண்டேல் உன்னைஎன்றும்
    மறவாமை வேண்டும்

    (பெரியபுராணம் : காரைக்கால் அம்மையார் - 1781)

    என்று வேண்டுவதாகச் சேக்கிழார் சொல்கிறார். அவர் பிறப்பை விரும்பவில்லை, பிறந்துவிட்டால் சிவபெருமானை மறக்காமல் இருக்க விரும்புகிறார். வேறு எந்த நோக்கமும் அவருக்கில்லை.

    திருநாவுக்கரசர், ‘சிவபெருமானின் குனித்த புருவத்தையும், குமிண் சிரிப்பையும், நடனமாடுவதற்காக எடுத்த பாதங்களையும் காண்பதென்றால் மனிதப் பிறவி வேண்டும் (தேவாரம்- 4941) என்று கேட்கிறார்.

    இராமலிங்க அடிகள், ‘அடித்தது போதும் அணைத்திடல் வேண்டும் அம்மையப்பா’ என்று சிவபெருமானை வேண்டுகிறார்.

    ஆண்டாள்,

    எற்றைக்கும் ஏழ்ஏழ் பிறவிக்கும் உன்தன்னோடு
    உற்றோமே ஆவோம்; உனக்கேநாம் ஆட்செய்வோ
    ம்

    (திருப்பாவை - 29)

    எனக் கண்ணனிடம் விண்ணப்பிக்கிறாள். இவர்கள் நல்ல உள்ளம், நல்ல சிந்தனை உடையவர்கள். இறைவனை உறுதியாக நம்பினர். ஆயினும், இவர்கள் வேண்டுதல்கள் தங்களைக் கடைத்தேற்றும் நோக்கத்தில் உள்ளன. வீடு பேறு அடையப் பிறவியாகிய துன்பத்தைக் கடக்க விரும்புகின்றனர். பாரதிக்கு முன்னோடியாக, அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் ஆருயிர்கட்கெல்லாம் நான் அன்பு செயல் வேண்டும் என்று இராமலிங்க அடிகள் இறைவனிடம் வேண்டுகிறார். இவர்களைப் பின்பற்றிப் பாரதியின் வேண்டுதல்கள் விளங்குகின்றன. பாரதியின் வேண்டுதல்கள் என்ன என்று பார்க்கலாமா?.

    3.5.1 அனைத்தும் இன்புற வேண்டுதல்

    இந்த நாட்டு மண்ணையும் மைந்தர்களையும் தம் உயிராக மதித்தவர் பாரதி. ஆகவே, உலகிலுள்ள ஓரறிவுடைய உயிரினம் முதல் ஆறறிவுடைய மனித இனம் வரை இன்புற்று வாழவேண்டும் என்று வேண்டுகிறார். தம் வேண்டுதல்களை விநாயகர் விரைவில் நிறைவேற்றுவார் என்று நம்புகிறார். ஆகவே,

    கேட்கா வரத்தைக் கேட்க நான் துணிந்தேன்
    மண்மீ துள்ள மக்கள் பறவைகள்
    விலங்குகள் பூச்சிகள் புற்பூண்டு மரங்கள்
    யாவுமென் வினையால் இடும்பைத் தீர்ந்தே
    இன்பமுற்று அன்புடன் இணங்கி வாழ்ந்திடவே
    செய்தல் வேண்டும் , . . . . . . . . . . . . .

    (விநாயகர் நான்மணிமாலை - 32)

    என்று பாரதி வேண்டுகிறார்.

    மனிதன் முதல் புல் பூண்டு வரை இன்பமாக வாழ விரும்புகிறார் பாரதி. அந்த அரிய செயலை விநாயகர் தம் உள் இருந்து அருள்புரிந்து தாமே பிற உயிர்களின் துன்பத்தை நீக்க அருள் புரிய வேண்டும் என்று கேட்கிறார். எல்லா உயிர்களிலும் உள்ளிருந்து ஆட்டுவிப்பவன் இறைவனே!.

    எல்லோரும் இன்புற்றிருக்க நினைத்தார் தாயுமானவர். வாடிய பயிரைக் கண்டு வாடினார் இராமலிங்க அடிகள். பாரதியும் புல், பூண்டு, பூச்சி இவைகளும் இன்புற்று வாழ வேண்டும் என்பதைத் தம் வேண்டுகோளாக முன் வைக்கிறார்.

    3.5.2 திண்ணிய நெஞ்சம்

    எல்லா உயிர்களுக்கும் நல்லது செய்ய விரும்பும் பாரதி, சக்தியிடம் கேட்பதைப் பாருங்கள்.

    எண்ணிய முடிதல் வேண்டும் நல்லவே எண்ணல் வேண்டும்
    திண்ணிய நெஞ்சம் வேண்டும்.

    (அன்னையை வேண்டுதல்)

    எதை விதைக்கிறோமோ அதுதான் விளையும். நல்ல எண்ணத்தை விதைத்தால் நல்ல செயல் விளையும். ஆகவே நல்லதை எண்ணவும், அதைச் செயல்படுத்தவும் தேவையான வலிமையும் உறுதியும் உடைய நெஞ்சம் கேட்கிறார் பாரதி. இங்கு,

    எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
    திண்ணிய ராகப் பெறின்

    (குறள் : 666)

    என்ற குறளின் கருத்து ஒப்பு நோக்கத் தக்கது.

    3.5.3 பயனுற வாழ வல்லமை தாராயோ?

    உலகில் பிறக்கும் மனிதர்கள் பயனுள்ள வகையில் வாழ்தலே சிறப்பு என்று நினைக்கிறார் பாரதி. ஆகவே, சிவசக்தியைப் பார்த்து, என்னை அறிவு மிகுந்தவனாகப் படைத்து விட்டாய். அந்த அறிவால் மனித குலம் பயன்படும் வகையில் வாழ்வதற்கான வலிமையைக் கொடு என்று வேண்டுகிறார். எதற்காக? இந்த உலகம் பயனுற வாழ்வதற்காக. ஆகையால்,

                                        எனைச்
    சுடர்மிகும் அறிவுடன் படைத்து விட்டாய்,
    வல்லமை தாராயோ, - இந்த
    மாநிலம் பயனுற வாழ்வதற்கே?

    ( கேட்பன - 1)

    என்று பாடுகிறார்.

    3.5.4 நூறு வயது, நீண்ட புகழ், செல்வம்

    39 ஆண்டுகளே உலகில் வாழ்ந்த பாரதி நூறு வயது, நீண்ட புகழ், செல்வம், பேரழகு முதலியன தமக்கு வேண்டுமென்று விரும்பியிருக்கிறார். இந்த உலகை மேனிலைப் படுத்த அறிவும் வலிமையும் இருந்தால் போதுமா? போதாது. அவர் விரும்பியதைச் செய்து முடிக்க நீண்ட ஆயுள், செல்வம் முதலியவை தேவை. ஆகவே, பாரதி விநாயகர், சக்தி, ஆகியோரிடம்,

    எனக்கு வேண்டும் வரங்களை
         இசைப்பேன் கேளாய் கணபதி
    கனக்கும் செல்வம் நூறுவயது
         இவையும் தரநீ கடவாயே

    (விநாயகர் நான்மணிமாலை - 7)

    நோவு வேண்டேன், நூறாண்டு வேண்டினேன்

    (விநாயகர் நான்மணிமாலை - 20)

    நீண்டபுகழ் வாணாள் நிறைசெல்வம் பேரழகு
    வேண்டு மட்டும் ஈவாய் விரைந்து

    (விநாயகர் நான்மணிமாலை - 33)

    நூறு வயது புகழுடன் வாழ்ந்துயர்
    நோக்கங்கள் பெற்றிட வேண்டு மென்றே

    (வைய முழுதும் - 6)

    (வாணாள் - வாழ்நாள், ஆயுட்காலம்)

    எனத் தம் உயர்ந்த நோக்கங்கள் நிறைவேற வேண்டுகிறார். நூறாண்டு காலம் உலகில் வாழ அருள் செய்யும் படி மூன்று முறை கேட்கிறார். அதைச் செய்து முடிப்பதற்கு முன்பு காலன் (எமன்) தம் உயிரைக் கவர்ந்து விடக்கூடாது என்று நினைத்த பாரதி காலனைப் பார்த்து,

    காலா! . . . . . . . . . . . . . . . . .என்றன்
    காலருகே வாடா! சற்றே உனை மிதிக்கிறேன் . . .
    ஆலாலம் உண்டவன்அடி சரணென்ற மார்க்கண்டன் - தனது
    ஆவி கவரப்போய் நீபட்ட பாட்டினை அறிகுவேன் . . . .

    (காலனுக்கு உரைத்தல்)

    (ஆலாலம் - விடம், ஆலாலம் உண்டவன் - விடம் உண்ட சிவபெருமான், மார்க்கண்டன் - சிவபக்தன், என்றும் பதினாறு வயதாக வாழும் வரம் பெற்றவன்)

    என்று எச்சரிக்கிறார். காலனிடம் அவர் செல்ல மாட்டாராம். காலன் அவரிடம் செல்ல வேண்டுமாம்.

    பாரதி, தம் பூத உடம்பு நீங்கினாலும் புகழுடம்பு நிலைத்து நிற்க விரும்பி நீண்ட புகழ் வேண்டியிருக்கிறார். அவர் கனவு நனவாகி விட்டது. இன்றும் அவர் பேசப்படுகிறாரல்லவா?

    பாரதி வாழ்ந்த காலச் சூழலில் இந்தியாவில் விடுதலை வேட்கை மேலோங்கி இருந்தது. சமுதாயக் சீர் கேடுகள் மலிந்திருந்தன. இவற்றையெல்லாம் சீர்செய்ய 100 ஆண்டுகள் வாழ விண்ணப்பிக்கிறார். தம் கடமையாக அவர் கருதுவதே பிறர் துயர் தீர்த்தல், பிறர் நலம் வேண்டுதல் ஆகும் (விநாயகர் நான்மணிமாலை - 8).

    செல்வத்துப் பயனே ஈதல்

    (புறநானூறு - 189)

    என்னும் புறநானூற்றுப் பாடல் இங்கு ஒப்பு நோக்கத் தக்கது.

    அடிப்படைத் தேவை

    மக்கள் யாவரும் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் முதலியவை பெற்றுத் தன்னிறைவுடன் (self- sufficiency) வாழ வேண்டும் என ஆசைப்பட்டார் பாரதி. அவற்றைத் தமக்கு அருள வேண்டும் என்று பராசக்தியிடம் விண்ணப்பம் செய்வதைப் பாருங்கள்.

    காணிநிலம் வேண்டும் - பராசக்தி
    காணி நிலம் வேண்டும் .................அந்தக்
    காணி நிலத்திடையே - ஓர் மாளிகை
    கட்டித் தர வேண்டும்

    (காணி நிலம்,1)

    காதல் மகவு வளர்ந்திட வேண்டியத

    வறுமை போலக் கொடியது எது? வறுமை போலக் கொடியது வறுமையே அன்றி வேறொன்றுமில்லை என்று வறுமைக்கு ஒப்பாக வறுமையையே காட்டுகிறார் வள்ளுவர் (குறள் : 1041).

    தமக்கென எதுவும் வேண்டாமல், உலகிற்காக, நாட்டிற்காக, மக்களுக்காக, புல்பூண்டு போன்ற உயிர்களுக்காகப் பாடிய பாரதி தெய்வத்திடம்,

    காதல் மகவு வளர்ந்திட வேண்டும் - என்
    சிந்தை அறிந்தே - அருள்
    செய்திட வேண்டும் என்றால் அருள் எய்திடும் .. . .

    (பக்தி - 7)

    என்று தம் மகள் உடல்நலம் பெற அறிக்கையிட்டு வேண்டுவதாகப் பாடல் விளங்குகிறது. ஒருமுறை அவருடைய இளைய மகள் சகுந்தலாவிற்கு உடல் நலமின்றி இருந்தபோது, அவர் மனைவி செல்லம்மாள் மருத்துவரை அழைத்து வரக் கேட்டுக் கொண்டாராம், மருத்துவச் செலவுக்குத் தம் கையில் பணமில்லாத பாரதியார் அதைத் தெரிவிக்காமல் தெய்வத்தைத் தொழுதால் போதும், அதைவிடச் சிறந்த மருந்தில்லை என்று கருதியிருக்கிறார். அன்றைய சூழ்நிலையில் அவர் பிரார்த்தனை ஒன்றையே நம்பியிருக்கிறார்.

    3.5.5 சாகா வரம்

    மரணமில்லாப் பெருவாழ்வு வாழ விரும்பியிருக்கிறார் பாரதி. ஆகவே,

    சாகாவரம் அருள்வாய் ராமா!

    (சாகாவரம் - பல்லவி)

    என்று இராமனிடம் கேட்ட அவர்,

    சாவினை வேண்டேன் தவிர்ப்பாய்

    (போற்றி அகவல்- அடி 23)

    என்று சக்தியிடமும் வேண்டுகிறார்.

    இந்த உலகம் கடவுளால் மக்களுக்காகப் படைக்கப்பட்டது. கடவுள் படைத்த இந்த அழகான உலகை பாரதி,

    எத்தனை கோடி இன்பம் வைத்தாய் - எங்கள்
    இறைவா!

    (இறைவனை வேண்டுதல்)

    என்று பாடியிருப்பது சாகாவரம் பெற்று இந்த உலகில் பல்லாண்டு காலம் பயனுற வாழ விரும்பியதைப் புலப்படுத்துகிறது.

    3.5.6 மக்கள் சேவை

    பாரதியார் மக்கள் சேவையே மகேசன் சேவை என்று கருதினார். இந்த உலகைக் காப்பது கர்மயோகம் என்று வேதங்கள் கூறுகின்றன. பகவத் கீதையில் கண்ணனும் ‘கடமையைச் செய் பலனை எதிர் பாராதே’ என்றார். நல்ல கருமம் நல்ல பலன் தரும். இதுவே பகவத் கீதையின் சாரம். பாரதியார் இறைவனை வழிபடுவதற்குத் தொண்டு செய்தலே சிறந்த வழியென்று நம்பினார். இதன் அடிப்படையில்

    கர்ம யோகம் ஒன்றே உலகில்
         காக்கு மென்னும் வேதம்

    (காளிஸ் தோத்திரம் - 3)

    என்ற பாடலைப் பாடியிருக்கிறார் எனக் கொள்ளலாம்.

    காளியிடமிருந்து பொருள் பெற்று உலகில் உள்ள துன்பங்களை, வறுமைகளை மாய்த்துவிடத் துடிக்கிறார். இது ஒரு பக்தனுக்குள்ள வைராக்கிய உணர்வைக் காட்டுகிறது. துறவியாக இருந்து மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்பதில்லை. இல்லறத்தானாக இருந்து தாமும் வாழ்ந்து பிறரையும் வாழ வைக்கலாம் என்று நம்பியிருக்கிறார் (விநாயகர் நான்மாணிமாலை - 10).

    3.5.7 அறிவே தெய்வம்

    இது, அறிவைத் தெய்வமாகக் கொள்ள வேண்டும் என்பதைக் குறிப்பிடுவது ஆகும். பாரதி, மானிடர்கள் வணங்கும் தெய்வம் ஒன்று எனக் கருதினார். அவர்கள் வழிபடும் தெய்வங்களின் பெயர், வடிவம் வேறாக இருந்தாலும் பரம்பொருள் ஒன்றே என்று வலியுறுத்துகிறார். அந்தப் பரம்பொருள் எல்லாவற்றிற்கும் மேலானவர். எல்லா உயிர்களிலும் ஊடுருவி இருப்பவர். பரம்பொருளின் கூறுகளே உலகில் உள்ள உயிர்கள். பரம்பொருளும் உயிர்களும் வேறானவை அல்ல. இரண்டும் ஒன்று என்ற அத்வைதக் கொள்கையை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று விரும்புகிறார். அவ்வாறு பின்பற்றினால் சமயச் சண்டை தோன்றாதல்லவா?

    பல சாதி, பல சமயங்கள் உள்ள இந்திய நாட்டு மக்களை ஒன்றுபடுத்த விரும்பிய பாரதி அறிவையும் உண்மையையும் தெய்வமாக வணங்க வேண்டும் என்று வழிகாட்டுகிறார். ஆகையால்,

    மாடனைக் காடனை வேடனைப் போற்றி
         மயங்கு மதியிலிகாள் - எத
    னூடுநின்று ஓங்கும் அறிவொன்றே தெய்வமென்று
          ஓதி அறியீரோ?

    (அறிவே தெய்வம் - 2)

    உண்மையின் பேர்தெய்வம் என்போம்- அன்றி
         ஓதிடும் தெய்வங்கள் பொய்யெனக் கண்டோம்

    (உயிர் பெற்ற தமிழர் பாட்டு - புராணங்கள்)

    என்று அறிவும் உண்மையுமே தெய்வம் என்று காட்டுகிறார். இவை இரண்டையும் தெய்வமாகக் கொண்டு அன்பு வழியில் நடக்கத் தூண்டுகிறார். அறிவு இருந்தால் தெளிவு பிறக்கும். தெளிவு பிறந்தால் எல்லாவற்றையும் ஒன்றாகக் காணும் பண்பு வளரும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:54:57(இந்திய நேரம்)