தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பகுதி 5.5-சமையல் வேலை

  • 5.5 சமையல் வேலை
     

    E

    மாமனாருக்கும் மாமியாருக்கும் வேண்டிய உதவிகளைச் செய்த தலைவி, சமையல் வேலையைச் செய்ய எண்ணினாள். சமையலுக்குத் தேவையான காய்கறிகளை வாங்குவதற்குக் கடைக்குச் சென்றாள்.

    கடையில் செலவு செய்த பணத்திற்குக் கணக்கையும் எழுதி வைத்தாள் அந்தத் தலைவி.

    கடையில் பலவகைக் காய்கறிகளை வாங்கியிருந்தாள். அவற்றில் தனது கணவனுக்கு எந்தக் காய்கறிகள் பிடிக்கும் என்றும், குழந்தைகள் எவற்றை விரும்பி உண்பார்கள் என்றும் தேர்ந்து எடுத்துச் சமைத்தாள். மாமனார், மாமியார் உடம்புக்கு ஒத்துக் கொள்ளாத காய்கறிகளை ஒதுக்கினாள்.

    கிழங்கினை நன்கு அவித்துச் சமைத்தாள். கீரையைக் கடைந்து வைத்தாள். பச்சடி செய்து வைத்தாள். கொல்லையில் காய்த்திருந்த முருங்கைக் காயைப் பறித்தாள். அதன் மேல்தோலைச் சீவிப் பக்குவமாகக் கூட்டு வைத்தாள்.
     

    5.5.1 குழந்தைகளையும் கணவனையும் வரவேற்றல்
     

    பள்ளிக்குச் சென்ற குழந்தைகள், வீட்டுக்குப் பகல் உணவு உண்ண வந்தார்கள். அவர்களைக் கண்டதும் அந்தத் தாய் அடைந்த மகிழ்ச்சியை உவமையாய்க் காட்டியுள்ளார் பாரதிதாசன்.
     


     

    வழிந்தோடும் புதுவெள்ளத்தை
    வரவேற்கும் உழவரைப் போல்
    எழுந்தோடி மக்கள் தம்மை
    ஏந்தினாள் இரு கையாலும்

    (குடும்ப விளக்கு - I, ‘அள்ளி அணைத்தாள் பிள்ளைகளை’)
     

    என்னும் வரிகளில், குழந்தைகளைக் கண்ட தலைவியின் மகிழ்ச்சியைப் புது வெள்ளத்தைக் கண்ட உழவரின் மகிழ்ச்சியுடன் ஒப்பிட்டுக் காட்டியுள்ளார் பாவேந்தர்.
     

    குழந்தைகளிடம் பாட்டனும் பாட்டியும் வந்திருக்கும் செய்தியைத் தெரிவித்து அவர்கள் உள்ளத்தை மகிழச் செய்தாள். கடையிலிருந்து கணவனும் வீட்டுக்கு வந்தான். அவனிடம் ‘அம்மா, அப்பா’ வந்த செய்தியைத் தெரிவித்தாள் தலைவி. அவனது உள்ளமும் மகிழ்ச்சி அடைந்தது.
     

    5.5.2 உணவு பரிமாறல்
     

    பள்ளியிலிருந்து வந்த குழந்தைகளுக்கும் கணவனுக்கும் தலைவி உணவு படைத்தாள். குழந்தைகள் மகிழ்ச்சியுடன் உணவு உண்டார்கள். அதைப் பழந்தமிழ்ப் பொருளைப் படித்தவர்கள் விழுங்குவதைப் போல் குழந்தைகள் உணவு உண்டார்கள் என்று பாடியுள்ளார் பாவேந்தர்.
     

    குழந்தைகள் உடனிருந்து
    கொஞ்சியே உண்ணுகின்றார்
    பழந்தமிழ்ப் பொருளை அள்ளிப்
    படித்தவர் விழுங்குதல் போல்

    (குடும்ப விளக்கு - I, ‘பிள்ளைக்கு அமுது’)
     

    என்னும் வரிகளில் பாரதிதாசனின் கவிநயத்தையும் தமிழ்ப்பற்றையும் காணமுடிகிறது.

    குழந்தைகள் உணவு உண்டதும் தலைவி தனது மாமனாரிடம் வந்தாள். அவரிடம், ‘கால் வலி இப்போது எப்படி இருக்கிறது?’ என்று கேட்டாள். உடுப்பதற்கு வேறு உடைகளைக் கொடுத்தாள். அவரது பசி தீர்வதற்கு உணவு படைத்தாள். அவர் உண்டு முடித்ததும், சாய்வு நாற்காலியில் சென்று உட்கார்வதற்கு உதவினாள்.
     

    5.5.3 கடையில் உதவி
     

    உண்டு முடித்து உட்கார்ந்திருந்த கணவனிடம் கடைக்குச் செல்வதற்கு நினைவுபடுத்தினாள். உண்ட களைப்பால் சோர்ந்திருந்த அவன் ‘தலைவியைச் சிறிது நேரம் கடைக்குச் செல்லுமாறு’ கேட்டுக் கொண்டான். கணவனின் வேண்டுகோளுக்கு இணங்கிக் கடைக்குச் சென்றாள் தலைவி.

    தலைவியிடம் அனுமதி பெற்றபின் கடையின் கணக்கர், வீட்டுக்கு உணவு உண்ணச் சென்றார்.

    கடையில் பொருள் வேண்டி வந்தவர்க்கு எல்லாம் மகிழ்ச்சியுடன் பொருள் கொடுத்தாள். ஒவ்வொரு பொருளுக்கும் உரிய விலையைச் சொன்ன அவள் அந்தப் பொருள்களின் தர உயர்வையும் எடுத்துச் சொல்லிக் கொடுத்தாள் என்பதைப் பாரதிதாசன்,
     

    மிளகுக்கு விலையும் கூறி
    மேன்மையும் கூறிச் சற்றும்
    புளுகாமல் புகன்ற வண்ணம்
    புடைத்துத் தூற்றிக் கொடுப்பாள்

    (குடும்ப விளக்கு - I, ‘அவள் வாணிபத் திறமை’)
     

    என்று பாடியுள்ளார்.

    சற்றுநேரம் ஓய்வு எடுத்த கணவன், கடைக்கு வந்ததும் அவனிடம் விற்ற பொருள்களின் கணக்கைத் தலைவி ஒப்படைத்தாள்; விரைவாக வீட்டுக்குத் திரும்பினாள்.

    வெளியே வெயிலில் காயவைத்திருந்த வடகத்தையும் வற்றலையும் எடுத்துப் பாதுகாப்பாக வைத்தாள். வெளியில் கட்டப்பட்டிருந்த மாடுகளுக்கும் கன்றுகளுக்கும் தீனி வைத்தாள்.
     

    5.5.4 குழந்தைகளுடன் கடற்கரையில் தலைவி
     

    பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பி வரும் குழந்தைகளின் வருகைக்காகத் தலைவி காத்திருந்தாள்; அவர்கள் வந்ததும் மகிழ்ச்சி அடைந்தாள்; அவர்களுக்குச் சிற்றுண்டி கொடுத்தாள்; அவர்களுடன் கடற்கரைக்குச் சென்றாள்.

    அந்தக் கடற்கரையின் ஓரத்தை அழகிய பாடலால் குறிப்பிட்டுள்ளார் பாரதிதாசன்.
     

    கடலிடைப் புனலில் ஆடிக்
    குளிரினில் கனிந்த காற்றை
    உடலிடைப் பூசுகின்ற
    ஒலிகடல் கரையின் ஓரம்

    (குடும்ப விளக்கு - I, ‘கடற்காற்று’)
     

    என்னும் பாடலில் கடல்காற்று உடலில் பட்டதைப் பூசியது என்று பாரதிதாசன் பாடியுள்ளார் பாருங்கள்.

    வெள்ளை நிற அன்னப் பறவைகளைப் போல் அழகாக அணிதிரண்டு வந்த கடல்அலைகளைக் குழந்தைகள் கண்டு மகிழ்ந்தார்கள். கடற்கரையில் வீசிய அந்த மாலைக் காற்றில் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

    அப்போது, கதிரவன் மேற்கு வானில் மறைந்தான். பூமி நீல ஆடையை மாற்று உடையாய் அணியத் தொடங்கியது.
     


     

    இவ்வளவு வேலைகளுக்கு இடையிலும் குழந்தைகளுடன் உலாவச் சென்றாள் தலைவி என்ற கருத்து, பாவேந்தரின் குடும்பம் பற்றிய தெளிவைக் காட்டுகிறது. மாலை வேளையில் ஓரிரு மணி நேரம் கடற்கரைக்குச் செல்வது குடும்பத்தில் குழந்தைகளுக்குப் புது உற்சாகம் தரும். அத்துடன் அது தலைவிக்கும் மனமகிழ்ச்சியைத் தரும் என்ற வகையில் கடற்கரைக்குச் சென்ற நிகழ்ச்சியைப் படைத்துள்ளார் பாரதிதாசன்.
     

    5.5.5 இரவுக்கு வரவேற்பு
     

    குழந்தைகளுடன் கடற்கரையிலிருந்து வீட்டுக்குத் திரும்பிய தலைவி விளக்கேற்றினாள். விளக்கேற்றிய தலைவி அதை வீட்டுக்கு வெளியே வைப்பதற்குக் கொண்டு வந்தாள். அதைப் பாரதிதாசன்,
     


     

    கரும்பான இரவு தன்னைத்
    திருவிளக் கேந்தி வந்து
    தெருவினில் வரவேற்கின்றாள்

    (குடும்ப விளக்கு - I, ‘இரவுக்கு வரவேற்பு’)
     

     

    என்ற வரிகளின் மூலம் இரவுக்கு அளித்த வரவேற்பாகப் பாடியுள்ளார். குழந்தைகளை, அந்த விளக்கு ஒளியில் அமர்ந்து படிக்கச் செய்தாள். அடுக்களைக்குச் சென்று இரவு உணவைத் தயாரித்தாள் தலைவி.

    கடையிலிருந்து கணவன் இரவில் வீட்டுக்குத் திரும்பினான். அவனுக்கும் குழந்தைகளுக்கும் உணவு அளித்தாள். உணவு உண்ட குழந்தைகள் தூங்கி விட்டார்கள். உணவை முடித்த தலைவன் பாடிக் கொண்டிருந்தான். மாமனார்க்கும் மாமியார்க்கும் உணவு படைத்து, தானும் உணவு உண்டாள் தலைவி.

    பசுவுக்கும் கன்றுக்கும் வைக்கோல் போட்டாள். வெளிக்கதவைத் தாழிட்டாள். அன்புக் கணவனுடன் உள் அறையில் உட்கார்ந்து உரையாடினாள்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 01:53:01(இந்திய நேரம்)