Primary tabs
-
தலைமுறை தலைமுறையாக நாட்டியக் கலையைக் குடும்பத் தொழிலாகக் கொண்டவர்கள் பரம்பரைக் கலைஞர்கள். இவர்களை வழிமுறைக் கலைஞர் என்றும் சொல்லலாம்.
தஞ்சை நாட்டிய சகோதரர் நால்வர் காலம் கி.பி.19- ஆம் நூற்றாண்டு. அக்காலம் முதல் பல பரம்பரைக் கலைஞர்கள் நாட்டிய அரங்க நிகழ்ச்சி முறைகளைப் பாதுகாத்து வந்திருக்கிறார்கள்.
இத்தகு பரம்பரைக் கலைஞர்கள் வழிவந்தோரில் ஒரு சிலரைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். அவர்கள்,
பந்தநல்லூர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை,
தஞ்சாவூர் பாப்பம்மாள்,
காஞ்சிபுரம் எல்லப்பா பிள்ளை
திருவிடைமருதூர் குப்பையா பிள்ளை
திருவாளப்புத்தூர் சுவாமிநாதபிள்ளை
கே.என். தண்டாயுதபாணி பிள்ளை
காட்டுமன்னார் கோயில் முத்துக்குமாரபிள்ளை
வழுவூர் இராமையாபிள்ளை
தஞ்சாவூர் கே.பி. கிட்டப்பாபிள்ளை
மைலாப்பூர் கௌரியம்மாள்,
தஞ்சாவூர் பாலசரஸ்வதிஏறக்குறையக் கடந்த 60 ஆண்டுகளாக வழிமுறைக் கலைஞர்கள் அல்லாத பிறரும் பரதக்கலையில் பெரும் ஆர்வம் கொண்டுள்ளனர். பரதக்கலை முறைகளைப் பக்குவமாகப் பயின்று அரங்குகளில் ஆடுகின்றனர். பிறருக்குக் கற்றும் தருகின்றனர். இந்த வரிசையில் முன்னோடிகளாக விளங்கிய சிலரை இங்குக் குறிப்பிடலாம்.
ஈ. கிருஷ்ணய்யர்
ருக்மணி அருண்டேல்
மிருணாளினி சாராபாய்
நடிகை கமலா
உதயசங்கர்
ராம் கோபால்
நாட்டியம், நட்டுவாங்கம், பாட்டிசை, கருவியிசை, ஒப்பனை ஆகியவற்றின் மரபுகளைக் காப்பதில் இவர்கள் பெரும் கவனம் கொண்டார்கள்.
பரத நாட்டியக் கலை முறைகளைக் கற்றுத் தரும் நிறுவனங்கள் இன்று பல உள்ளன.
முன்னர் இது குருகுல முறையில் இருந்தது. இக் கலைப் பயிற்சியை முதல் முதலில் நிறுவனப் பயிற்சி முறை ஆக்கியவர் ருக்மணி அருண்டேல் அம்மையார் ஆவார். சென்னை அடையாறில் "கலாகே்ஷத்ரா" என்னும் நிறுவனத்தை உருவாக்கியவர். அதன் பின் நாட்டியம் பயிற்றுவிக்கும் பல நிறுவனங்கள் தோன்றி நாட்டில் செயல்பட்டு வருகின்றன.
4.6.3 இன்றைய நிலையில் பரதக்கலை
பரத நாட்டியக் கலை இன்று உலகளாவிய நிலையில் புகழ் பெற்று விளங்குகிறது. இந்தியப் பண்பாட்டுப் பின்னணி இல்லாதோரும் இக்கலையை விரும்பிப் பயில்கிறார்கள். அரங்குகளில் பரத நாட்டியம் ஆடுகிறார்கள்.
இந்திய நாட்டுக் கலைஞர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று பரத நிகழ்ச்சிகள் நடத்துகிறார்கள். பிறருக்குக் கற்றும் கொடுக்கிறார்கள். அதே வேளையில் பிற நாட்டவரும் இந்தியா வந்து தங்கி நாட்டியக் கலையை முறையாகப் பயின்று செல்கிறார்கள்.