Primary tabs
-
2.0 பாட முன்னுரை
அமைப்பியலும் பின்னை அமைப்பியலும், இலக்கியத் திறனாய்வுலகில் செல்வாக்கு மிகுந்த அணுகுமுறைகளாகவும் கருத்தியல்களாகவும் விளங்கி வருகின்றன என்ற முறையில் அவை பற்றி முன்னர் விரிவாகக் கண்டோம். அதுபோலவே, பின்னை நவீனத்துவம் (Post-Modernism) என்பதும் செல்வாக்குக் கொண்ட ஒரு திறனாய்வு முறையாகவும் ஒரு கொள்கை யாகவும் விளங்குகிறது. அதுபற்றி விளக்கமாகக் காண வேண்டும். இது பிரான்சு, இத்தாலி, ஜெர்மனி, பிரிட்டன் முதலிய மேலைநாடுகளிலும், தொடர்ந்து அமெரிக்காவிலும் எழுபதுகளில் தோற்றம் பெற்று, எண்பது- தொண்ணூறுகளில் செல்வாக்குப் பெற்று விளங்கியது. தமிழில், தொண்ணூறுகளில் இந்தப் பின்னை நவீனத்துவம் செல்வாக்குப் பெற்றது. பல முன்னணித் திறனாய்வாளர்கள் இந்தக் கொள்கையால் ஈர்க்கப்பட்டார்கள்.
நவீனத்துவம் என்பதற்குப் பின்னால் இது தோன்றியது; நவீனத்துவம் என்ற கொள்கை, இலக்கியத்தையோ. சமுதாயவியலையோ விளக்கப் போதாது என்ற சூழ்நிலையில், அதன் விளைவாகப் பின்னை நவீனத்துவம் தோன்றியது. எனவே, முதலில் நவீனத்துவம் என்றால் என்ன அதன் செயல்பாடுகள் என்ன என்று அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. மேலும், நவீனத்துவத்தினுடைய செல்வாக்கு ஏனைய பிறவற்றினும் விரிவானது; ஆழமானது; பல்வேறு துறைகளிலும் அது தாக்கம் செலுத்தியுள்ளது; இன்னும் தாக்கம் செலுத்தி வருகிறது. எனவே, முதலில் நவீனத்துவம் பற்றி விளங்கிக் கொள்வது அவசியம்.