Primary tabs
-
2.2 மரபும் நவீனத்துவமும்
மரபு என்பது காலங்காலமாகத் தொடர்ந்து வருவது ; ஆழமாக வேரூன்றிக் கிடப்பது. இலக்கணங்கள், வாய்பாடுகள், வரையறைகள், விதிகள் என்ற முறையில் கட்டுப்பாடுகள் கொண்டது. ஆனால் அதேபோது, மரபும் இயங்காற்றல் மற்றும் உயிர்ப்புக் கொண்டதாதலால் அதனுடைய பெரும் நீரோட்டத்தில், பல புதிய வரவுகளும் உண்டு. மரபை மறுப்பதாக நவீனத்துவம் குரல் கொடுக்கிறது. அந்த முறையில் தமிழில் தோன்றியதுதான் புதுக்கவிதை எனும் வடிவமாகும்.
தமிழில் குறிப்பாக 18,19-ஆம் நூற்றாண்டுகளில் கவிதை, வெறுமனே செய்யுள் வடிவமாகவே இருந்தது. யாப்புக்கட்டுப்பாடு, அதற்குள்ளேயே விளையாட்டு, உள்ளடக்கத்தில் தலங்கள் பற்றிய வருணனைகள், ஜமீன்தார்கள் பற்றிய கேளிக்கைகள். என்று இவ்வாறு இருந்தன. யாப்பு வரையறைகள், கவிதையை வளரவிடவில்லை. இத்தகைய மரபுகளை மறுத்து 1950-களுக்குப் பிறகு கவிதை, புதிய கோலங்களைப் பெறத் தொடங்கியது. ரகளைக்கவி, சுயேச்சா கவி, வசன கவிதை என்றெல்லாம் முதலில் அழைக்கப்பட்டுப் பின்னர், புதுக்கவிதை எனும் கோலம் பெற்றது. ந.பிச்சமூர்த்தி,. சி.மணி, மயன் முதலியவர்கள் இத்தகைய கவிதைகளை எழுதினார்கள். யாப்புத் தளைகளை மீறுவது இதன் முக்கியமான போக்கும் நோக்கும் ஆகும். உரைநடையின் செல்வாக்கு இதில் கணிசமாக உண்டு. படிமம், குறியீடு முதலியன போற்றப்பட்டன. காதல் மட்டுமன்றி, இருத்தலியல், இருண்மை வாதம் முதலியன அதிகம் இடம்பெற்றன. ஆனால் மரபை மீறுதல் என்ற வேகத்தில் ஆங்கிலச் சொற்களைக் கலப்பது அதிகம் இருந்தது. புதுக்கவிதையை ஒர் இயக்கம் போன்று வளர்ப்பதை, சி.சு.செல்லப்பாவின் எழுத்து என்னும் இதழ் மேற்கொண்டது. புதுக்கவிதை, புதுமை எனும் நெறியின் அடையாளமாகத் தமிழில் வளர்ச்சி பெற்றது.
2.2.1 நவீனத்துவமும் திறனாய்வும்
எதனையும் அது புதுசு என்றால் வரவேற்பது, சோதனைகள் என்று கருதப்படுபவற்றை முன்னிலைப்படுத்துவது, தரம், புனிதம் பற்றி அக்கறை கொள்வது, மேலைநாட்டுக் கருத்தோட்டங்களை ஏற்றுத் தமிழ் இலக்கியத்தில் பொருத்திப் பார்ப்பது, உருவ உத்திகளுக்கு முதனிலை தருவது என்பவை, நவீனத்துவம் - புதுமை என்று பேசிய சில திறனாய்வாளர்களிடம் காணப்படுகிற பொதுவான நிலைகள் ஆகும். க.நா.சுப்பிரமணியம், சி.சு.செல்லப்பா, வெங்கட்சுவாமிநாதன் முதலியோர் இத்தகைய போக்குக் கொண்டவர்கள். தமிழ் மரபில் இவர்களுக்குப் போதிய அறிவோ, பின்னணியோ இல்லாவிடினும், அவற்றில் உள்ள பல நல்ல அறிவுநிலைகளை ஒதுக்குவதும் மறுப்பதும் இவர்களின் செயல்முறையாக இருந்தது.
தமிழ் இலக்கியமே, நவீன இலக்கியத்திலிருந்துதான் ஆரம்பிக்கிறது என்ற கருத்து நிலைகள் இலக்கியத் திறனாய்வுக்குத் தீங்கு தருபவை என்பது அறிந்ததே. ஆயினும், மரபும் புதுமையும் சேர்ந்து அறிந்த பல திறனாய்வாளர்கள் நவீனத் திறனாய்வாளர்களாக இலக்கிய அறிவை வளர்த்திருக்கிறார்கள். முக்கியமாக எதார்த்தவியல், மார்க்சியம், ஃபிராய்டியம், இருத்தலியல் முதலிய கருத்தமைவுகளை இலக்கியத்தில் பொருத்திக் காண்பதிலும், புனைகதை இலக்கியத்தின் மாறிவரும் போக்குகளையும் வடிவங்களையும் கணிப்பதிலும் இத்திறனாய்வு பெரும்பங்களிப்புச் செய்து வருகிறது.
தன் மதிப்பீடு : வினாக்கள் - I1.நவீனத்துவத்தின் அடிப்படைகளாகவும் வெளிப்பாடுகளாகவும் அமைகின்றவற்றுள் மிக முக்கியமானது என்று கருதப்படுவது யாது?4.நவீனத்துவத்தை முன்னிறுத்தியதும் சிறுகதை இலக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்ததுமான இலக்கிய இதழ் எது?
-